Monday, December 28, 2015

பசங்க 2




கேளிக்கை திரைப்படங்களுக்கு மத்தியில் சில யதார்த்தப் படங்களும் வெளிவரவேண்டிய அவசியம் தமிழ் சினிமாவிற்கு இருக்கிறது. ஆனால் மிக அபூர்வமாதத்தான் நல்ல படங்கள் அதுவும் பார்வையாளர்களின் கவனத்தையும் பெற்று வெளிவருகிறது. சூர்யா சற்று மெனக்கெட்டு ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார். மற்ற பெரிய நடிகர்கள் இதுபோன்ற படங்களில் கவனம் கொள்ளத‌போது இதை செய்ததற்காகவே பாராட்டலாம்.
குழந்தைகள் படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன, ஆங்கிலம் அதும் கார்ட்டூன் படங்களாக வருகின்றன. தொலைக்காட்சியை தாண்டி சில கார்ட்டூன் படங்கள் மக்களை கவர்ந்துக் கொண்டும் இருக்கின்றன. பசங்க 2 அதுமாதிரியான ஒரு குழந்தைகள் படம். ஆனால் குழந்தைகளை வைத்திருக்கும் பெரியவர்களுக்கான படம் என்று சொல்லலாம்.

Thursday, December 24, 2015

சிங்க குறியீடு



சிங்கம் ஒரு பெரிய குறியீடு நமக்கு. சிங்க நடை, சிங்க பார்வை, சிங்க வேட்டை என்று சிங்கம் சேர்ந்த அனைத்தும் நம்முடைய செயல்களின் வெற்றியின் சின்னங்கள். சிங்கத்தை நேரில் நாம் பார்த்திருக்கிறோமா இல்லையா என்பது முக்கியமில்லை. அதன் திறன்களை நேரில் பார்த்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வெற்றிகளை, பெருமிதங்களை, நம்பிக்கைகளை குறிக்க அந்த சிங்கம் தேவையாக இருக்கிறது. சிங்கம் சராசரியாக 180 கிலோ எடை உடையது (அதிகபட்சம் 375), மற்ற பூனைவகைகளில் சிங்கம்தான் அதிக எடை கொண்டது. சிங்கம் மற்ற இரு விலங்குளான புலி, சிறுத்தையைவிட அதிக ஒலியுடன் கர்ஜிக்க கூடியது. அதன் கர்ஜனைதான் அதன் அழகு. சில நேரங்களில் அது குகையை விட்டு வெளியே வந்து கர்ஜித்தாலே ஒளிந்திருக்கும் சில விலங்குகள் பயத்தில் அதன் முன்னால் ஓடி வந்து தெரியாமல் அதனிடம் மாட்டி இரையாகிவிடுமாம். பிடரி அதன் மற்றொரு அழகு. அதற்கு கம்பீரம் அளிப்பதே அந்த பிடரி மயிர்தான்.

Tuesday, December 22, 2015

அறியாமையின் அழகு




விளையாடிக் கொண்டிருந்தவன் திடீரென ஓடிவந்து இந்த முட்டி ஒடிஞ்சி போயிடுச்சுப்பா என்றான். பதறிப் போய்விட்டேன். எங்கே என்ன ஆச்சு என்றேன். காட்டிய அவன் வலது முட்டி நன்றாகத்தான் இருந்தது. ஓடும்போது வலிக்குதுபா ஒடஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன் என்றான். அது அப்படிதான் என சொல்லி, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு போ சரியாகிவிடும் என்று சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. மற்றொருநாள் அப்பா இந்த ஹார்ட் கலண்டி வர்றமாதிரி இருக்குபா ஒடவே முடியல என்றான். சிரிப்பு தாளமுடியவில்லை. கேட்டுப்பாருப்பா எப்படி அடிக்குதுன்னு என்றான். என் இதயதுடிப்பை ஒருமுறை அவனுக்கு கேட்கவைத்ததின் விளைவு. ஓடும்போது ஏற்படும் மூச்சுவாங்களை அப்படி சொல்கிறான். தொடர்ந்து ஓடாமல் கொஞ்சம் இளைபாறிச் செல்லவேண்டும் என அறிவுறுத்தினேன். ஆனால் நாளெல்லாம் சிரிப்பாக இருந்தது. சிரிப்போடு நான் கிண்டல் அடித்தாலும், அவனால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அறியாமையோடு அதற்கு பதிலளிக்க முடிந்தது. ஆம் குழந்தை அறியாமையில் இருக்கும்போது நமக்கு நம‌க்கு அளவில்லா ஆனந்தமும் ஏற்படுகிறது. குழந்தைகளைக் கொஞ்ச அது ஒரு காரணமாகவும் இருக்கிறது.

Monday, December 21, 2015

பீப்பும் இளையராஜாவும்





மிகப் பெரும் மேதமைக் கொண்ட விஞ்ஞானி, ஐன்ஸ்டைன் என நினைக்கிறேன், அவர் தன் தொழிற்கூடத்தில் இரண்டு எலிகள் தினம் தொல்லை செய்துவந்தன. இரண்டையும் பிடிக்க முயற்சி செய்து முடியாமல் போய்விட்டது. ஆகவே அவைகள் போய்வர வழி ஏற்படுத்து தரவேண்டும் என யோசித்தார். ஒரு பெரிய ஒரு சிறிய எலிகளுக்காக ஒரு பெரிய‌ ஓட்டையும் ஒரு சிறிய ஓட்டையும் ஏற்படுத்தியிருந்தார். அதை கவனித்த அவரது நண்பர் ஏன் இரு ஓட்டைகள் என கேட்டார். இரண்டு எலிகள் இருக்கின்றனவே என்றார். ஏன் ஒரே பெரிய ஓட்டையில் இரு எலிகளும் செல்லமுடியுமே என்றார் நண்பர். விஞ்ஞானி அதிர்ச்சியடைந்தார், எப்படி நமக்கு இது தெரியாமல் போனது என்று. ஆம் மேதமைகள் எப்போதும் நடைமுறை வாழ்க்கையோடு ஒத்து இருக்க முடிந்ததில்லை. அவர்களின் எண்ணங்கள் சிந்தனைகள் வேறு எங்கோ இருக்கும். அத்தோடு நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான அளவு பழக்கப்படாமலும் இருந்திருப்பார்கள்.

Tuesday, December 15, 2015

பீப்குள்ள என்ன இருக்கு?



சில ஆண்டுகளுக்கு முன்னால் சமஞ்சது எப்படி என்று ஒரு சினிமா பாடல் வெளிவந்தது. எப்படி எப்படி சமஞ்சது எப்படி என்கிற பாடல் மிக பிரபல்யமாக, பெண்களை பார்த்து கிண்டலடிக்கும் பாடலாக இருந்தது. சமஞ்சதை பீப் வைத்துதான் படத்தில் வெளியிட்டார்கள். ஆனால் வெளியே பாடல் கேட்கும்போது பீப் இருக்காது. அதற்கும் இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் சென்றால் மற்றொரு பாடல் அப்படி இருந்திருக்கும். இப்படி ஒவ்வொரு சமயத்திலும் ஒரு பாடல் வேண்டுமென்றே கவனதை கவர இயற்றப்படுகிறது என நினைக்கிறேன். இந்த சிம்பு அனிருத் செய்திருக்கும் இந்த பாடல் சற்று வித்தியாசமானது. துணிச்சலாக இன்னும் நேரடியாக வார்த்தை வரும்படி பாடல் அமைந்திருக்கிறது. பெண் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தனி மனிதர்கள் பொதுநலவிரும்பிகள் என்று எல்லோரும் இதை வன்மையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இது அது காலத்தை வெளிப்படுத்துகிறது என்று சொன்னால் சிலர் தூற்றவும் செய்யலாம்.

Friday, December 11, 2015

நவீனத்தை கொண்டுவந்த‌ விளம்பரங்கள்



தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இல்லாத காலங்களில் நாம் அதிகம் பார்த்த‌ விளம்பரங்கள் நிர்மா, சாரிடான், அனாசின், விக்ஸ், கோல்கேட், 501, டெட், ஜீவன்டோன் போன்றவைகள் தான் இருக்கும். இவைகளை தாண்டி வேறு விளம்பரங்களை கவனித்து ஒருவர் தம் மனதில் நிறுத்தியிருக்கிறார் என்றால் நிச்சயம் அவர் வித்தியாசமான ஆள் தான். அவருக்கு விளம்பரங்களின் மீது தனியாத ஆர்வமும், தொடர்ந்து நாட்டு நடப்புகளை கவனிப்பவருமாக இருப்பார் என நினைக்கிறேன்.
எந்த திரையரங்கிலும் சினிமாவிற்கு முன் காட்டபடும் ஆரம்ப விளம்பர பகுதிகளில் இந்த விளம்பரங்கள் இருக்கும். இவற்றில் சில விளம்பரங்கள் இன்றும் தொடர்கின்றன. ஆனால் ஆரம்ப காலங்களில் அதாவது 70-80களில் இவைகளை வாங்க வைக்க இதன் நிறுவனங்கல் மிக சிரமபட்டன. பெரிய போட்டிகள் இல்லாத காலங்களில் இவைகளை வாங்க மக்கள் ஏன் கஷ்டப்படவேண்டும். அப்போது மக்களுக்கு தேவையானவைகள் அவர்கள் இருக்கும் இடங்களியே கிடைத்துவந்தன. சோப்பிற்கு சவுக்காரம் கட்டி, பேஸ்டுக்கு பற்பொடி, தலைவலிக்கு சுக்கு கஷாயம் என்று அனைத்துமே கிடைத்த‌ன. ஆகவே மக்களுக்கு இவைகளைத் தாண்டி காசு கொடுத்து (அல்லது அதிக காசு கொடுத்து) வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.

Thursday, December 10, 2015

வெள்ளை யானை - ஜெயமோகன்



வரலாற்று நாவல்கள் நூல்களை படிக்கையில் அபரிதமான உற்சாகம் வந்துவிடுகிறது. பழமையின் பெருமையை கேட்பதிலும் நேற்றை இன்றோடு இணைத்து மகிழ்ச்சி கொள்வதிலும் கரைந்துவிடுகிறது. ஆனால் வெள்ளையானை அப்படி பட்டதல்ல அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் முதன்முதலாக ஒரு வரலாற்று நாவலுக்கு இருக்கும் அபரிதமான வேகமும் உற்சாகமும் இல்லாமல் ஒரு சமூக நாவலைப்போல் நேரடியான காட்சியமைப்பில் சொல்லப்படுவதுதான் இதில் நடந்திருக்கிறது. சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் நாவலின் இடம் தான் இதிலும். ஆனால் வெள்ளையானை  நாவலின் அதீத விவரனைகளும், தகவல்களும் நம்மை முழுமையாக நம்பச் செய்கிறது. ரத்தம் ஒரே நிறம் நாவல் ஒரு கற்பனை கதாபாத்திரம் இங்கிருந்து சிப்பாய் கலவரம் நடக்கும் வடநாட்டிற்கு செல்வதாக வரும், வெள்ளையானை ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் பார்வையில் அவர் அடைந்ததாக சொல்லும் நீதியுணர்ச்சியின் மீது நின்று மொத்த நாவலும் நகர்த்துகிறது. ப‌ல பாத்திரங்கள் கற்பனையாக இருந்தாலும் வெள்ளையானை நிஜமாக நடந்துமுடிந்த ஒரு நிகழ்வை டாக்குமெண்டரி படம் காண்பதுபோல மனதில் விரிகிறது.

Tuesday, December 8, 2015

நிஜ‌ நிவாரணம்



சில வருடங்களுக்கு முன்பு ஒரு கோயிலுக்கு அன்னதானத்திற்காக சென்றிருந்தோம். புளிசாதம், தயிர்சாதம், போன்ற அயிட்டங்களை எடுத்துக்கொண்டு ஒரு குடும்ப‌ வேண்டுதலின் பொருட்டு அடையாறை தாண்டி இருந்த ஐயப்பன் கோயிலில் இவைகளை அங்குவரும் பக்தர்க‌ளுக்கு அளிக்க சென்றோம். உண்மையை சொல்வதென்றால் அப்படி செல்வது அதுதான் முதல் தடவை. நானும் என்னுடன் வந்த ஆண் பெண்களாக இருந்த உறுப்பினர்களுக்கும் அது மகிழ்ச்சியாக இருந்தது. கோயில் நிர்வாகத்திடம் பேசி ஒரு இடத்தில் அமர்ந்து வைத்திருந்த வாளிகளை திறந்து சிரித்த முகத்துடன் மனிதர்களை நோக்கினால், சட்டென ஒரு மனித வட்டம் எங்களைச் சுற்றி இருந்தது. ஒருவர் தட்டைக் கொடுக்க அடுத்தடுத்து நபர்கள் சாதங்களை வைத்து ஊறுகாய் ஒருவர் வைக்க, கூட்டு ஒருவர் வைக்க என திட்டம். ப்ளாஸ்டிக் தட்டுகள் எங்களிடமிருந்து பிடுங்கப்பட்டன. இருங்கள் தருகிறோம் என்பதை யாரும் காதில் வாங்கியதாக தெரியவில்லை. கடகடவென தட்டு உடைய கையை நீட்ட வைங்க வைங்க என்றார்கள். ஒரே களேபரமாக இருந்தது. ஏங்க இப்படி அவசரபடுறீங்க என்றதற்கு, குண்டான ஒரு பெண்மணி தரமாட்டீங்களா, தருவீங்களா மாட்டீங்களாங்க‌, எனக்கு கொடுங்கங்க என்றார். நிஜமாகவே அந்த நேரம் எரிச்சலாக இருந்தது. எங்களை குனிந்து எடுக்ககூட மக்கள் விடவில்லை. அத்தனை அவசரம். அங்கிருந்த மக்களுக்கு தேவையான உணவுகள் அங்கு இருந்தன. ஆனால் அவர்கள் செய்த அவசரத்தில் பாதியாவது வீணாயிருக்கும். சாப்பிட்டுவிட்டு அந்த தட்டுகளை கண்ட இடத்தில் எறிந்துவிட்டு சென்றார்கள். அவர்கள் படித்தவர்கள்தான். ஆனால் சாதாரண எளிய மக்கள். அவர்கள் நினைத்திருந்தால் 15 நிமிடங்களில் எல்லா மக்களுக்கும் கிடைக்கும்படி செய்திருக்க முடியும்.

Monday, December 7, 2015

'அந்த' நல்ல டைனோசர்



நான் சிறுவயதில் முதலில் பார்த்த 3டி படம் மைடியர் குட்டிசாத்தான். அந்த படத்தை பார்க்கும்போது கொடுத்திருந்த கண்ணாடியை நன்கு துடைத்துவைத்திருந்தேன், படம் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக. ஆனால் படம் ஆரம்பித்தபோது போட்டுபார்த்தால் கண்ணாடி மேலிருந்த கெமிக்கலெல்லாம் போனதால் ஒன்றுமே தெரியவில்லை. மங்கலாக தெரிந்த திரையை மட்டும் பார்த்துவிட்டுவந்தேன். கொஞ்ச நாள் களித்து வந்த தங்கமாமா என்று நினைக்கிறேன், மற்றொரு 3டி படம் வந்தபோது கவனமாக துடைக்காமல் பார்த்தேன். அந்த சமயம் எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. வேல், கம்பு எல்லாம் கண்களை குத்துவது போல் வந்ததால் துள்ளிக் குதித்து முகத்தை திருப்பிக் கொண்டேன். என் அருகில் இருந்தவர் அட 3டி படம் இப்படிதாப்பா தெரியும் என்று அமைதிப்படுத்தினார். ஆனால் ரொம்ப நேரம் வரை காட்சிகளை புரிந்துக் கொள்ள முடியாமல் திண‌றினேன்.

Friday, December 4, 2015

பேரிடர் உண‌ர்த்துவது



ஆபத்தில் நண்பர்களை புரிந்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். இந்த சென்னை வெள்ள பேரிடர் நம்முடைய நண்பர்கள் யார் யார் என்பதை உணர்த்திவிட்டது. ஆனால் அதற்கு நாம் கொடுத்த விலைதான் சற்று அதிகம்.
சென்னை மாதிரியான நகரம் இப்படி வெள்ளத்தில் மாட்டும் என நாம் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டோம். ஏனெனில் நல்ல மழைகூட இங்கு பெய்வதில்லை. எல்லா காலங்களிலும் வெய்யில் தான். ஆனால் காலம் எப்போது போலவே இருப்பதில்லை. காலம் மாறும்போது நாமும் மாறவேண்டியிருக்கிறது.
இந்த மாதிரியான பேரிடர்களில் பணம் நமக்கு எந்த பயனையும் தரப்போவதில்லை. தினப்படி உணவுகள், உறங்க இடம்தான் வேண்டியதாக இருக்கிறது. உண்ண உறங்க இடம் இல்லாமல் இருக்கும் சேரிமக்களும் நல்ல இடமும் உணவும் இருந்த நடுத்தர, மேட்டுக்குடி மக்களும் ஒன்றாக கலந்துவிட்டார்கள். இப்போது இவர்களுக்கு தேவையானவைகள் பணமும் அந்தஸ்தும் இருக்க முடியாது. இந்த நேரத்தில் மற்ற மனிதர்களிடமிருந்து நாம் எதிர்ப்பார்ப்பது உதவியையும் தன்னலமற்ற சேவையையும்தான்.

Thursday, December 3, 2015

வெள்ளமும் வெறுப்பும்



திருவல்லிக்கேணியில் இருந்த காலத்தில் ஒருமுறை பெரிய மழைவந்தது. பேச்சலர்களாக சில நாட்கள் சரியான உணவு கிடைக்காமல் அழைந்திருக்கிறோம். ஒரு முறை பெல்ஸ் ரோடு திருப்பத்தில் வரும்போது மழை பிடித்துவிட்டது. மூடிய கடையின் ஓரத்தில் ஒதுங்கிய பலரில் நானும் ஒருவன். அங்கு ஏற்கனவே சிலர் இருந்தனர். ஒரு பக்கத்தில் ஒரு கல்லின் மேல் தன் 10 மாத இருக்கும் குழந்தையை ஒரு சுருட்டியதுணியில் வைத்தபடி அமர்ந்திருந்தார். பார்த்த‌தும் லேசாக மனது பதறியது. இந்த அடைமழையில் எப்படி நனையாமல் போகபோகிறார் என்று. அவர் ரொம்ப நேரம் அங்கு இருப்பதாக தோன்றியது. அவரின் உடை ஸ்டைலில் அங்கு பக்கதில் இருக்கும் சேரியில் இருக்கும் மனிதர் என தெரிந்தது. கசங்கிய லுங்கியும் சட்டையும் அணிந்து கலைந்த தலையுமாக இருந்தார். அவரின் மேலேயும் தூங்கும் குழந்தையின் மேலேயும் இருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை.

Wednesday, December 2, 2015

வெள்ளச் சென்னை



சென்னை நகரம் மற்ற எந்த இந்திய நகரத்தைவிட பாதுகாப்பானது என்றுதான் தோன்றுகிறது. எந்த தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் முதலில் குண்டுவைப்பது தில்லியாகத்தான் இருக்கும். அதன் வடக்கிலிருந்து குளிர் காலத்தில் வரும் குளிர் காற்றால் நடுங்கி இறப்பவர்கள் அதிகம். சாதாரண குளிரே 10 டிகிரிக்குள்தான் இருக்கும். மும்பை நகரம் அமைந்திருக்கும் இடம் அரபிக்கடலில் ஒருமாதிரி வெளிவந்து உள்ளடங்கி ஒரு முனையில் தொத்தியபடி இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையில் நகரம் தத்தளிக்கும். கோல்கட்டா வங்கத்தின் கங்கையின் நேரும் முனையில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புயல், வெள்ளம் தாக்கி ஒரு வழி செய்துவிடும். பெங்களூரும் அப்படிதான். ஆனால் எல்லா நகரங்களும் அதன் பகுதிகள் கொஞ்சம் தள்ளிதள்ளி அமைந்து தேவையா இடவசதியோடு அதன் ஏரியாக்கள் இணைந்திருக்கும்.

Friday, November 27, 2015

இல்லம் சங்கீதம்




இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம் அவள் நாயகன் பாவம் பிள்ளை சிருங்கார நாதம் என்று ஒரு பாடலின் பல்லவி இப்படி தொடங்கும். இல்லம் சங்கீதம்போல இனிமையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. நல்ல மனைவி பிள்ளைகள் இருக்கும்போது இல்லம் சங்கீதமாகதான் இருக்கமுடியும். ஆனால் அந்த இல்லம் சொந்தமானதாக இருக்க வேண்டியது முக்கியம். வாடகை வீட்டில் இருப்பதை எந்த இல்லதரசியும் விருப்புவதில்லை. இன்றைய நாளில் ஒருவருக்கு திருமணம் கைகூடவேண்டுமெனில் சொந்த வீடு இருக்க வேண்டும். அது அவராக சம்பாதித்து இருக்கலாம் அல்லது தன் அப்பா அல்லது தாத்தா வழியாக வருவதாக இருக்கலாம். அப்படி இல்லாதவர் குறைந்தது வீடு வாங்க லோன் போடும் அளவிற்கு இருக்கவேண்டும். அப்படி இல்லாதவர்களுக்கு திருமணம் அவர்கள் விரும்பம்போல் நடப்பதில்லை என்பதை கவனிக்கலாம்.

Thursday, November 26, 2015

லாலுவும் நீலுவும்



சிறுவர்களுக்கான பாலுவும் நீலுவும் என்ற ஒரு நாவலை முன்பு படித்தது நினைவிருக்கிறது. பாலு நல்லவன் நீலு கேட்டவன். இருவரும் அவர்களுக்குள் நடக்கும் சின்ன சண்டைகளும் சமாதனங்களும், எது சிறந்தது, மேன்மையானது போன்ற சிலவற்றை இருவரும்  புரிந்து கொள்வதும் என கதை நகரும். இரு சிறுவர்கள் காடு மலை நகரம் என்று சைக்கிளில் பயணிப்பதை படிக்க அத்தனை ஆனந்தமாக இருந்ததாக நினைவு. இன்று லாலுவும், நீலுவும் (நிதீஷ்) அப்படி தங்களுக்குள் நட்பை வளர்த்து சுற்றி திரிவதாக நினைத்துக் கொள்கிறேன். முற்றிலும் வெவ்வேறு குணங்களை கொண்ட இருவர் சேர்ந்து தங்களுக்கு சமரசங்களை வளர்த்துக் கொள்வதை இனி வருங்காலத்தில் லாலு, நிதீஷ் உறவிலும் சொல்லலாம் என நினைக்கிறேன்.

Tuesday, November 24, 2015

மதங்கள், மக்கள் தொகை, கடவுள்



மதரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011க்கானது சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வெளியாகும் பொதுசென்சஸில் மதம் சம்பந்தமான கணக்கெடுப்பும் நிகழ்கிறது. சாதிரீதியான கணக்கெடுப்பிற்கு இன்னும் நாம் பக்குவப்படவில்லை என நினைக்கிறேன். அதற்கான சண்டகள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன‌. ஆனால் மதம் சம்பந்தமான கணக்கெடுப்பு வெளியாவதற்கு மதம் ஒரு வெளிப்படையான அடையாளமாக தவிர்க்கமுடியாத ஒரு சின்னமாக ஒவ்வொருவருக்கும் இருப்பது காரணமாக இருக்கலாம். கணக்கெடுப்பு என வரும்போது அதை தொடர்ந்து அவதானிப்பவர்களிடம் ஒரு பதற்றம் இருப்பதை பார்க்கலாம். நான் சார்ந்திருக்கும் மதத்தில் எத்தனை சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். எத்தனை சதவிதம் உயர்ந்திருக்கிறார்கள் என்பதை பார்க்காதவர்கள் யாரும் இல்லை எனலாம். அதை குறித்து பின்னாளில் பேசாமல் இருப்பவர்களும் மிக குறைவே.
நேரடியாக மதம் ஒரு தனிப்பட்டவர்களின் சார்பு அல்லது பிறப்பால் ஒருவருக்கு சேர்ந்துவிட்ட ஒரு த‌னித்துவம் என்று மட்டும் கொள்ள முடியவில்லை. அதன் பின்ன‌ணியில் உள்ள அரசியல், பொருளாதார பிரிவினைகளையும் பார்க்க வேண்டியிருகிறது. ஒரு தனிமனிதன் இன்ன மதத்தில் இருக்கிறேன் என்பதும், ஒரு தேசம் இன்ன மதத்தில் பெரும்பான்மையாக இருக்கிறது என்பதற்கும் இடையேயான‌ வேறுபாடு ஆழமானது.

Monday, November 23, 2015

வார்த்தைகள், சொற்கள், தமிழ்



தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்ச‌மில்லை. மிகப் பெரிய சொற்களஞ்சியம் தமிழுக்கு உண்டு. எந்த ஒரு வார்த்தைக்கும் அதன் வேர்சொல் வரை சென்று ஆராய்ந்து பார்க்கமுடியும். தமிழுக்கு உரிய பல பெருமைகளில் ஒன்று ஒரு வார்த்தையின் வேர் தமிழிலேயே இருப்பதுதான். மற்ற இந்திய‌மொழிகளில் அது சமஸ்கிரதமாகவோ அல்லது தமிழாகவோ வந்து முடியும். ஆனால் ஒரு சினிமா தலைப்பு அல்லது புத்தகத்தின் தலைப்பு அல்லது ஒரு சினிமா பாடலுக்குள் இருக்கும் வார்த்தைகள் அல்லது தமிழில் தொடங்கப்படும் ஒரு நிறுவனத்தின் தலைப்புகள் அல்லது ஏன் நாம் தினம் பேசும் வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட சொல்லகராதிக்குள் அடங்கிவிடும். ஒரு புத்தகத்தலைப்பு மட்டுமல்ல அதன் உள்ளடக்கத்தில் உள்ள சொற்கள் நாம் எளிதாக வகைப்படுத்திவிட முடியும்.
வெகுஜன எழுத்துக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வார்த்தைகள் தான் உண்டு. அதைதாண்டி நாம் எழுதிவிடமுடியாது. அதெல்லாம் போட்டா அவர்களுக்கு புரியாதுங்க என்று சொல்லப்படும். ஒரு சினிமா பாடலுக்கும் சரி ஒரு நவீன கவிதைக்கும் சரி இன்னென்ன வார்த்தைகள்தான் வேண்டும் என்கிற நிலை தொடர்வதாகத்தான் நினைக்கிறேன். சினிமா பாடலில் கையாளப்படும் வார்த்தைகளை எழுதி வைத்துக்கொண்டு அதே சூழ்நிலைக்கு வேறு ஒரு பாடலாக எழுதிவிடலாம். (அப்படிதான் எழுதப்படுகின்றன என சொல்லப்பட்டிருகிறது)

Sunday, November 22, 2015

பட்டிமன்றம்


விடுமுறை நாட்களில் தொலைக்காட்சியில் முக்கியமாக பார்க்கப்படுவது பட்டிமன்றம்தான். மற்ற நாட்களில் இந்த பட்டிமன்றம் நினைத்துப் பார்க்கபடுவதில்லை.. மற்ற நாட்களில் ஒளிப்பரப்பினாலும் பார்க்கமாட்டார்கள். ஏன் விடுமுறை நாட்களில் மட்டும் பட்டிமன்றம் பார்க்கப்படவேண்டும்? மற்ற நாட்களில் ஒளிபரப்பானால் அவைகளுக்கு பெரிய மரியாதை இல்லை. இன்றைக்கு பட்டிமன்றம் ஒரு வேடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறது என நினைக்கிறேன். அதிலிருந்து வரும் எந்த கருத்துகளுக்கு அவர்களுக்கு தேவையாக இல்லை. விடுமுறைநாட்களில் சிரித்து மகிழ்ந்திட ஒரு சிரிப்பு நிகழ்ச்சியாக மற்ற கமெடி நிகழ்ச்சிகளைவிட சிறந்த காமெடிக்கு இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். அன்றைய தினம் குடும்பத்தோடு சிரித்து அன்றைக்கே மறந்துவிட ஒரு காமெடி நிகழ்ச்சியாக இன்று மாறிவிட்டது.
முந்தைய நாட்களில் கோவில் திருவிழா, கிராம விழா, தெருமுனை, பள்ளிகளில், கல்லூரிகளில் என்று ஒவ்வொரு முக்கியமான சமயங்களிலும் பட்டிமன்றங்கள் இருந்தன. ஒருவகையில் நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம். தமிழகத்தில் நடந்த இந்தபட்டிமன்றங்களைப் போல மற்ற பகுதிகளில் நடந்ததில்லை. உண்மையில் டிவியில் காட்டப்படும் பட்டிமன்றம்விட ஒரிஜினம் பட்டிமன்றத்தை முற்றிலும் வேறானது. பழைய பட்டிமன்றங்களில் பேசப்படும் கருத்துக்கள் சிறந்த பேச்சாளர்களால் பேசப்பட்டு அதற்கென்று உருவாகியிருந்த மக்கள் கூட்டத்தால் ரசிக்கப்பட்டவைகள்.

Friday, November 20, 2015

நான் சிரித்தால் தீபாவளி



பண்டிகைகளில் தலையாயது தீபாவளியாகத்தான் இருக்கும். இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டுமல்ல மற்ற மதத்தவர்களுக்கும் தீபாவளி முக்கிய நிகழ்வாக இருக்கிறது. தமிழகத்தில் பொங்கலைவிட, என்னதான் தமிழர் பண்டிகையாக இருந்தாலும், தீபாவளி ஒரு படி மேலேதான் இருக்கிறது. உறவுகளில் புது துணி எடுத்துக் கொடுப்பது, பண்டிகைப் பணம் கொடுப்பது என்று நடப்பவைகள் எல்லாம் தீபாவளியில் தான் இருக்கும். நான் சிரித்தால் தீபாவளி என்று ஒரு பாடல்கூட ஆரம்பமாகிறது. தீபாவளி என்பது சிரிப்பின் ஆரம்பம் எல்லோருக்கும். எல்லா வயதினருக்கும், மேல்மட்டம் கீழ்மட்டம் என்று இது எல்லா சமூகத்தினருக்கும் பொருந்தும். ஆனால் சமீபகாலங்களில் அப்படி இல்லை என நினைக்கிறேன். முன்பு வீதி முழுவதும் மக்கள் ஒரே நேரத்தில் திரண்டு வெடிகளை வெடிப்பார்கள். வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். இன்று அப்படி சொல்லமுடியுமா என்பது சந்தேகம். வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் வாட்ஸ் அப், முகநூல், மெசெஜ் என்று விரிவடைந்திருந்தாலும் ஒன்றுகூடுதல், சிரித்து மகிழுதல் எல்லாம் கிட்டத்தட்ட‌ இல்லை என்றே சொல்லலாம்.

Thursday, November 19, 2015

நாத்தீகம் vs. ஆத்தீகம்



நாத்தீகத்தை பின்பற்றுபவர்கள் சிறந்த மேதைகளாகவும், மிகுந்த நம்பிக்கைவாதியாகவும் நினைப்பதும், ஆத்திகத்தை பின்பற்றுபவர்கள் சிறந்த பழமைவாதியாகவும், அசமஞ்சமாகவும் பயந்த சுபாவம் உடையவனாகவும் நினைப்பதும் நம் எல்லோரிடமும் இருக்கிறது.
நான் கல்லூரியில் படித்த காலத்தில் என்னுடன் படித்த ஒருவர் மீகத்தீவிரமான நாத்தீக நிலைப்பாட்டை கொண்டிருந்தார். பொதுவாக கல்லூரி காலங்களில் கடவுள் மறுப்புகொள்கையில் தீவிரமாக இருந்திருப்போம்தான். நானும் அப்படியானவனாக இருந்தேன். ஆனால் அந்த நண்பர் நிஜமாகவே தீவிரமான எதிர்நிலையும், அது குறித்த தெளிவான பார்வையும், அதற்கு தேவையான‌ புத்தகங்களும் படித்திருந்தார். பெரியார் ஈவேராவின் ஓரிரண்டு புத்தகங்கள் அவரிடம் இருக்கும். தீவிரமான முகத்தோடும் மனநிலையோடும் காணப்படுவார். எந்நேரமும் கல்லூரியின் பாட‌புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பார். எந்த விஷயத்திற்கு அவருக்கென்று ஒரு பார்வை இருக்கும். அதே வேளையில் எந்த சூழ்நிலையிலும் அது மாறாத தன்மையுடன் இருக்கும். எந்த விஷயத்தை குறித்தும் அவரிடம் பேசவோ விவாதிக்கவோ முடியாது அவருடன் பேசிய ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குபின் இது புரிந்துவிடும். அதை மிகதாமதமாகத்தான் புரிந்துக்கொள்ளமுடிந்தது. முன்பே ஒரு விஷயம் குறித்த‌ அதன் நிலைப்பாட்டை எடுத்திருப்பார். அத்தோடு அவருடன் விவாதிப்பதும் வீணாதாகவும், ஒரு கொடுக்கல் வாங்கலாக ஒரு நட்புமுறை முறையில் அல்லாமலும் இருக்கும்.

Wednesday, November 18, 2015

ஆட்டோகாரர்களை எதிர்கொள்ளல்



ஆட்டோக்காரரை எதிர் கொள்வது என்பது எத்தனை சிரமமானது என்பதை எல்லா தமிழகவாசிகளுக்கு தெரியும். சென்னையில் இத்தனை பேருந்துகள் இருப்பதற்கு ஆட்டோகாரர்களின் அடாவடிதனம் தான் காரணம். இந்தியாவில் நான் பயணித்தவரை தமிழர்கள் கோழைகள் என்கிற முடிவை எடுக்க அவர்கள் ஆட்டோகாரர்களை எதிர் கொள்ள தெரியாததை ஒரு முக்கிய காரணமாக சொல்லலாம். மற்ற இடங்களில் ஒரு அளவிற்கு மேல் மீறிநடந்துக் கொண்டால் அந்த ஆட்டோகாரர் அந்த பகுதியிலிருந்து சென்றுவிட‌ முடியாது. ஆனால் சென்னையில் ஒரு ஆட்டோகாரர்கள் பணம் தரும் தன் பயணிகளை எந்த அளவிற்கு கீழ்தரமாக வும் நடத்தலாம். அவரை ஒரு கேள்வியும் கேட்க மற்ற மனிதர்களுக்கு தைரியம் வருவதில்லை.

அரசியல் தெளிவு



தமிழக இந்திய அரசியலை கொஞ்சம் உற்று கவனித்தாலே மண்டை வெடித்துவிடும் அபாயம் இருக்கிறது. பல வருடங்களாக பல்வேறு தலைவர்களை சந்தித்திருக்கும் பல அன்பர்களையும் அவர்கள் எழுதும் கட்டுரைகளை படிக்கும்போது ஒன்றை வெளிப்படையாகவே அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அது 'இந்தியாவில் நடக்கும் அரசியல் என்னால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை' என்று கூறுவதுதான். நேரடியாக இதை சொல்லவேண்டும் என்று இல்லை, பல சமயங்களில் மறைமுகமாகவும், நாசூக்காவும் சொல்லியிருப்பார்கள். அப்படி சொல்லவில்லை என்றால் அவர்கள் அந்த அரசியலில் நல்ல பிழைப்பை நடத்துகிறார்கள் என்று பொருள் கொள்ளலாம்.

Tuesday, November 17, 2015

நாடகபாணியும் விஜயகுமாரியும்


நான் சின்ன வயதில் விஜயகுமாரியின் ஒரு பழைய படத்திற்கு சென்று படம் முழுவதும் அழுதுக் கொண்டேயிருந்தது நினைவிருக்கிறது. இன்று அவரது படத்தை பார்க்கும் யாவரும் 'ஏன் இவ்வளவு எக்ஸ்பிரசன், தேவையா இது' என்பார்கள். நானும் அப்படிதான் நினைக்கிறேன். ஆனால் அவர் நடித்த சில படங்களில் அவர் செய்யும் முக சேட்டைகளை நான் ரசிக்காமல் இருந்ததில்லை. 'இந்த மன்றத்தில் ஓடிவரும்' பாடலில் அவர் செய்யும் முகபாவத்தை அதிகம் ரசித்திருக்கிறேன். குறிப்பாக திடீரென ஒரு ஆணின் பாடல் குரல் கேட்டதும் அது யார் என்று அவர் அலைமோதும்போது செய்யும் முகபாவத்தை சொல்லலாம். ஒரு மலரைப் பறித்து தூக்கி எறிவார், வேகவேகமாக நடந்துசெல்வார், தலையை இங்குமங்கும் திருப்பி தன் சலிப்பை வெளிப்படுத்துவார். இப்படி நிறைய செய்தாலும் அவர் அண்ணன் கையை பிடித்ததும் நிற்பது தன் அண்ணன் தான், அவருக்கு தன் மனவேதனை கூறியதை கேட்டுவிட்டதே என்று அவர் செய்யும் முகசேட்டைகள், கண்களை பெரிதாக்கி, உதடுகளை குவித்து, தன் கையை பல‌முறை உதறி, குவிந்த உதட்டில் விரலை வைத்து என்று எத்தனை பாவங்களை ஒரே சாட்டில் செய்துவிடுகிறார். ஆச்சரியம்தான்.

Tuesday, October 13, 2015

உறக்கம் எப்படி இருக்க வேண்டும்

எனக்கு ஒரு நண்பர் இருந்தார், அவருக்கு தூக்கம் வருவதில் பிரச்சனை இருப்பதாக எப்போது சொல்லிக் கொண்டிருப்பார். நான் தூங்கும்போது என் அறைக்கு வந்து சில டிப்ஸ்களை கேட்டுச் செல்வார். நான் நன்றாக தூங்குவதாகவும் எந்த பிரச்சனையும் இன்றி ஆழ்ந்த உறக்கம் கொள்வதாகவும் பொறாமைகூட‌ படுவார். அப்போது ஒரு சின்ன வேலையில் இருந்தேன். என் அறைக்கு பக்கத்தில் வேலைத் தேடிக்கொண்டிருந்த அவர் இருக்கும் அறை இருந்தது. மாலை ஆறு மணிக்கு டீ அருந்துவதை நிறுத்த சொன்னேன். இன்னிக்கு பரவாயில்லை கொஞ்சம் தூக்கம் வந்தது என்பார். அடுத்த நாள் வரும்போது கால்களை நனைத்துவிட்டு தூங்க சொன்னேன். இன்னிக்கும் கொஞ்சம் தூக்கம் வந்தது என்பார். சாப்பாட்டை முன்பே முடிக்க சொன்னேன். அதையும் செய்து கொஞ்சம் தூக்கம் வந்தது என்பார். அவர் விரும்புவது நல்ல ஆழ்ந்த தூக்கத்தை. ஒரு நாள் வந்தபோது உங்கள் தினப்படி வேலைகளை கூறுங்கள் என்றேன். காலையில் எழுந்தது டீ, பின் பத்திரிக்கை படித்தல், பின் சிற்றூண்டி, படித்த பத்திரிக்கையிலிருந்து அழைத்திருந்த வேலைக்கு செல்லுதல் பின் மதியம் உணவு பின் அறைவந்து ஒரு தூக்கம் போடுவது என்றார். அதற்குபின்? அதற்கு பின் எங்கே செல்வது அப்போதே மாலை வந்துவிடும் வெளியே செல்லமுடியாது என்றார். விளையாட்டாக சொன்னாரா சீரியசாக சொன்னாரா தெரியவில்லை ஆனால் மதியம் நான்கு மணிநேரம் தூங்கும் ஒருவர் எப்படி இரவில் தூக்கமுடியும் என யோசிக்கவில்லை.

Thursday, October 8, 2015

மாட்டுக்கறியும் மனிதக்கறியும்

மாட்டுக்கறிக்கு தமிழகத்தில் பெரிய மதிப்பெல்லாம் இல்லை. மாட்டுக்கறியைகூட மறைமுகமாகத்தான் வெளியிடங்களில் விற்கிறார்கள். அந்த விற்பனைக் கடைகூட தனியே எங்கேயோ இருக்கும். அதிகம் வெளியில் தெரிய அந்த கறியை தொங்கவிடுவதுகூட இல்லை. அதேவேளையில் மாட்டுக் கறியை வாங்குவதும், தின்பதும் பாவமாக தமிழகத்தில் பார்க்கப்பட‌வில்லை. ஆனால் வட இந்தியாவில் மாட்டுக்கறி உண்பது ஆச்சாரமான இந்துவுக்கு மட்டுமல்ல எல்லா இந்துகளுக்கும் எதிரானதாகத்தான் நினைக்கிறார்கள். என் வடஇந்திய நண்பர்களிடம் மாட்டிறைச்சியை புசிப்பதுப் பற்றிக் கேட்டபோதெல்லாம் மிக காட்டமாக எதிர்வினையாற்றினார்கள். அவர்களிடம் மாட்டுக்கறியை உண்பவன் முஸ்லீம் என்கிற எண்ணமே இருக்கிறது. தலித்துகளில் பெரும்பாலோர் மாட்டுக்கறியை உண்பதும் அது அவர்களின் பழமையான பழக்கங்களில் ஒன்றிலிருந்து வந்தது என்று அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஏன் விவேகானந்தர் போன்ற நவீனயுக சாமியார்கள் மாட்டிறைச்சியையும் அதை உண்பதையும் இந்துமதம் சார்ந்ததுதான் என்று ஒத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் என புரியவில்லை.

Saturday, October 3, 2015

புலி குழந்தைகள் விட்டாலாச்சார்யா


சிம்பு தேவன் படம் எப்போது புதிய சிந்தனைகளோடு ஒரே மாதிரியான கதைஅம்சங்களிலிருந்து வேறுபட்டு இருக்கும். பெரிய ஹீரோவான விஜயுடன் அவர் சேர்ந்து ஒரு படம் செய்வதும் லில்லிபுட் போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டும் இருக்கிற புலி படத்தை பற்றி கேள்விப்பட்டது பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

குழந்தைகளுக்கு பிடிக்கும் என்பதால் மகனை அழைத்துக் கொண்டு புலி படத்திற்கு செல்ல நேர்ந்து விட்டது. ஆனால் குழந்தைகளுக்கு இந்த படம் பிடிக்கும் என்று சொல்லமுடியாத அளவிற்கு ஏதோ ஒரு நாடகம் போல செட்டை அமைத்து படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும். கிராபிக்ஸ் நிறைய பயன்படுத்தப் பட்டிருந்தாலும் பாகுபலி மாதிரியான பரந்த நிலக்காட்சிகள் ஓரிரண்டை தவிர அதிகம் இல்லை. ஏன் வரலாற்றுப் படம் என்கிற ப்ரஞ்சைகூட இந்த படம் ஏற்ப்படுத்த மாட்டேன் என்கிறது.

தமிழ் சினிமாவிற்கு இவ்வளவுதான் கிரியேட்டிவிட்டியா? மிக வழக்கமான கதைகளை கொண்டுதான் படங்கள் எடுக்க முடியுமா என்கிற கேள்வியை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் கதை எங்கே எந்த காலத்தில் நடக்கிறது என்கிற விவரங்களுடன் ஆரம்பித்தாலும் இன்று உள்ளூரில் நடப்பது மாதிரி தமிழில் பேசுகிறார்கள். போததற்கு விஜய் இன்றைய கால கட்ட கட்டி அடித்திருக்கிறார். ஸ்ருதி இன்றைய பெண்களின் முடி அலங்காரத்தில் இருக்கிறார். சரி தமிழை இப்படி உச்சரிக்கிறார்கள் என்றால், திராவிட கட்சிகள் பேசிய அடுக்கு மொழியில் பஞ்ச் டயலாக் வேறு பேசுகிறார் விஜய்.