Saturday, December 2, 2023

ரமணிகுளம் கடிதம் -‍ பா.ராஜேந்திரன்



அன்புள்ள அசோக்குமார்

உங்கள் ‘ரமணிகுளம்’ நாவலைப் படித்தேன்.

நான் காலச்சுவடில் ரமணிகுளத்தை பெற்று படிக்க ஆரம்பித்த சில நாட்களில் நூல் தொலைந்து விட, மீண்டும் ஒருமுறை வாங்கி விட்ட இடத்தில் இருந்து படித்து முடித்துவிட்டேன்.

அருமையாக இருந்தது. தொய்வற்ற வாசிப்பு தந்தது.

  • ஒரு புறம் நகரத்தின் வளர்ச்சியால் காடு தோட்டம் ஆகி தோட்டம் தரிசாகி மனைகளாகி, மனைகள் வீடுகளாகி, வீடுகள் அடுக்ககங்கள் ஆகி அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள்.
  •  அதே காலகட்டத்தில் மூன்று தலைமுறை மனிதர்களின் குணங்கள் உறவுகள் ஆகியவற்றில் நிகழும் மாற்றங்கள்.
  •  குடும்ப உறவுகள் சிதைவது.

Sunday, August 20, 2023

அல் கிஸா என்னும் ஏமனி மேலங்கி


அல் கிஸா என்ற நாவல் குறித்த பேச்சுகள் முன்பே தொடங்கிவிட்டன. நாவல் அளிக்கும் விடுதலையைப் பற்றி பேச தொடங்கிவிட்டார்கள். அஜிதனின் நாவல் அல்லது குறுநாவலின் உள்ளடக்க தேர்வை பாராட்டவேண்டும். ஒரு பொறியின் துளியிலிருந்து தீ பரவுவது போன்ற தூண்டுதலலால் உருவான குறுநாவல். அதன் வேகத்தோடும் துடுக்கோடும் இருக்கிறது.

சிறந்த வேலைப்பாடுகளை கொண்ட போர்வையை நெய்து வெளி எடுப்பது போலத்தான் நாவலை எழுதியிருக்கிறார். ஒரு காதல் கதையின் ஊடே இறைதூதர் முகம்மது நபியின் வழிதோன்றல்களில் ஒருவரான மகள் வழி ஃபாத்திமா பெயரன் ஹுசையின் இறுதி போர்ப் பற்றிய நாவல் என்று சுருக்கி கொள்ளலாம்.

Friday, April 28, 2023

ஜெயமோகனின் சிறார் உலகம்


 

1

எழுத்தாளர் ஜெயமோகனின் முழு படைப்புகளையும் வாசித்து ஒரு கட்டுரை எழுத முடிவு செய்தால் அது அவரது வாழ்நாள் சாதனையாக அமைந்திருக்கும் என தோன்றுகிறது. ஜெயமோகன் தன் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே எழுத தொடங்கிவிட்டதாக கூறியிருக்கிறார். தனது பள்ளி கல்லூரி காலங்களில் எழுதியது, ஆவணமாக ஆகாதது, கூட பலபக்கங்கள் இருக்கும். இருபத்தி நாலாம் வயதில் எழுத ஆரம்பித்தபோது அவர் புனைவுலகத்தை முழுமையாக உள்வாங்கி படைக்க தொடங்கிவிட்டிருந்தார். அந்த வயதிலேயே கூட தீவிரமான எழுத்து எல்லோருக்கும் அமைவது கடினம். அன்றிலிருந்து தொடங்கி தனது 60வது வயது இன்று வரை வந்திருக்கும் அவரின் இலக்கிய பணி, பல்லாயிரக்கணக்கான பக்கங்களை படைத்திட்ட, மிக பெரிய வெற்றிகளையும், அளப்பரிய சாதனைகளை அதனுள் கொண்டிருக்கிறது என்று தைரியமாக சொல்லாம்.

Thursday, April 6, 2023

குதிரை மரம் சிறுகதை தொகுப்பு பற்றி - பா. ராஜேந்திரன்



அன்புள்ள
திரு அசோக்குமார்,

இன்று உங்கள் குதிரை மரம் & பிற கதைகள் வாசித்து முடித்தேன். சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய 90 புத்தகங்களுள் ஒளிந்திருந்து இப்போதுதான் வாசிக்கச் சிக்கியது.

எந்த பரிந்துரையின்படி வாங்கினேன் என்று நினைவில்லை. எனவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசிக்கத் தொடங்கினேன். முதல் கதையிலேயே ஒரு அற்புதமான படைப்பினுள் நுழைந்தது தெரிந்தது. அனைத்து கதைகளும் அதே உயர் வாசிப்பனுபவத்தைத் தந்தன. எதிர்பாராமல் அமையும் நல்நிகழ்வு தரும் பரவசம் இன்னும் மீதமுள்ளது. சரளமான மொழிநடை. இயல்பான உரையாடல்கள். நுணுக்கமான பாத்திர படைப்புகள். கூரிய வாழ்க்கை அவதானிப்புகள்.

அதிலும் சிகரமாக குதிரைமரம் குறுநாவல். குடும்பத்தின் அடிப்படை தேவைகளுக்கான பொருளை ஈட்ட இயலாத குடும்பத் தலைவனின் அவலம், படைப்பில் இருந்து உற்பத்திக்கு மாறும் உலகில் உண்டாகும் சமூக சீர்குலைவு, கணவனின் மகிழ்ச்சிக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் இடையே ஊசலாடும் மனைவி என் பல தளங்களில் சஞ்சரிக்கிறது. படைப்பாளியின் படைப்பூக்க மகிழ்ச்சியும் வீழ்ச்சியும் தந்தை மகன் ராமர் கதை மூலம் மனம் தொடுகிறது. எவ்வளவு ஆழமான நுணுக்கமான சித்தரிப்பு. வறுமையிலும் பசியில் வாடாமல் காக்கும் விலையில்லா ரேஷன் அரிசி, வறுமையிலும் பீஸ் வாங்கும் பள்ளியில் பசங்க படிப்பது என ஒரு வரியில் வந்து செல்லும் செய்திகள் பல.

Tuesday, February 7, 2023

குதிரைமரம் & பிறகதைகள் தொகுப்பு குறித்து விஜயகுமார் சம்மங்கரை


 
அன்புள்ள அசோக்,

இன்று தங்களுடைய குதிரை மரம் வாசித்து முடித்தேன். வாசித்த கையோடு இந்த மடல் எழுதுகிறேன்.

அனைத்து கதைகளும் நல்ல வாசிப்பு அனுபவத்தை தந்தது. உங்களுக்கு மொழி நன்றாக கைகூடி வந்திருக்கிறது. அனைத்து கதைகளின் முதல் பத்தியே அதற்கு சாட்சி.

குதிரை மரம் கதை தான் தங்களின் உச்சமாக நான் நினைப்பது. இனி நீங்கள் அந்த கதையை விஞ்சும் எண்ணத்தில் தான் மற்ற கதைகளை எழுதுவதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மற்ற எந்த கதையிலும் இல்லாத ஆழமும் உண்மையும் அதில் தான் பொதிந்து இருப்பதாக படுகிறது.

ஒவ்வொருவருக்கும் இது தரமான கதை என்று சில அளவுகோல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை எந்த கதை நினைவில் நிற்கிறதோ அது நல்ல கதை. அது ஏன் நினைவில் இருக்கிறது என்று பிறகு ஆராய்ச்சி செய்வேன். உதாரணமாக குதிரை மரம் நினைவில் நிற்கும் கதை. காரணம் அதன் உண்மை தன்மை. அதாவது இலக்கிய மனம் அறியும் உண்மைத்தன்மை.

மற்ற கதைகளில் அது கதையாக வர வேண்டும் என்ற பிரயத்தனம் தெரிகிறது. அது நல்லதுதான். பல நல்ல எழுத்தாளர்களிடம் நான் அடையாளம் காண்பது இதுவே. ஆகையால் தங்கள் எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அன்புடன்
விஜயகுமார் சம்மங்கரை



Friday, January 6, 2023

பனி இறுகிய காடு பற்றி சுரேஷ் வெங்கடாத்ரி



சென்ற ஆண்டு படித்தவற்றில்  கே.ஜே. அசோக்குமாரின்  'பனி இறுகிய  காடு' குறுநாவலை ஒரு முக்கியமான படைப்பாக உணர்ந்தேன். கணவனை இழந்த ஒரு பெண்ணால், பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட மகன், அவளது இழப்பைத் தாங்க முடியாமல், பரிதவிக்கும் கதையை, ஒரு மிக இறுக்கமான மொழியில், மிகையில்லாமல், தொய்வில்லாமல் சொல்லியிருக்கிறார். இந்த குறுநாவலில் அமைந்திருக்கும் மொழியும் நடையும் அசோக்குமாரின் எந்த படைப்புகளிலும் நான் இதுவரை காணாதது. கதையில் இடம்பெறும் அன்றாடச் சம்பவங்கள் கூட அசோக்கின் இந்த மொழியாலும், நடையாலும், ஒரு அசாத்தியமான கனபரிமாணத்தை அடைகின்றன. அதுவே இக்கதையின் நாயகனின் இழப்பை நமது சொந்த இழப்பாக உணரச் செய்கின்றன. நாயகனின், தாயார், நண்பன், அவரது மனைவி, ஏன், கதையில் அதிகம் கட்டப்படாத  நாயகனின் மனைவி  பாத்திரமுமே கூட மிக நன்றாக வந்திருக்கின்றன.

Wednesday, December 28, 2022

பனி இறுகிய காடு குறுநாவல் குறித்து பாவண்ணன்

 



அன்புள்ள அசோக்குமார் 

வணக்கம்.  முதல் பகுதி கதையை முழுதாகப் படித்தேன். நல்ல தொடக்கம். அவன் மனநிலை, அவன் தாயின் மனநிலை, அவன் மனைவியின் மனநிலை எல்லாமே தனித்துவத்துடன் அமைந்துள்ளன. அவனுடைய விசித்திரமான நடத்தைகளை சிறிதும் மிகை படியாத விதத்தில் எழுதியருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

இரண்டாம் பகுதிக் கதையையும் படித்து முடித்தேன். மனத்தை பனி இறுகிய காடாக உருவகித்து, அது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து தெளிவடைவதை கூர்மையாக சொல்லியிருக்கிறீர்கள். பழைய நினைவுகளை சின்னச்சின்ன சித்திரங்களாக இடையிடையே ஊடாடவிட்டு அழகாக கோர்த்திருக்கிறீர்கள்.  பொதுவாக தந்தை இல்லாமல் தாயால் வளர்க்கப்படும் சிறுவர்களின் மனநிலை அடையும் மாற்றங்கள் துல்லியமாக அமைந்துள்ளன. அப்பாவுவின் அணுகுமுறை, அவன் இறந்தகால வாழ்வின் தகவல்கள் எல்லாமே கதைமையத்துக்கு வலு சேர்க்கின்றன. முள்ளும் குப்பைகளுமாக அடர்ந்த இடம் சிறுகச்சிறுக சுத்தம் பெற்று தெய்வத்தைக் கண்டடையும் இடம் மொத்த கதையின் மைய்த்தையும் உருவகமாக முன்வைப்பதாக உள்ளது. கதை வாசிப்பு நல்ல அனுபவமாக இருந்தது. வாழ்த்துகள்


அன்புடன்
பாவண்ணன்

Sunday, November 27, 2022

பொம்மைகளின் உரையாடல் பற்றி கிறிஸ்டி

 



அன்புள்ள அஷோக் சார்,
 
பொம்மைகளின் உரையாடல்களிலிருந்து ஒன்றுமட்டும் நன்றாகத் தெரிகிறது. நம் நாட்டின் கலாச்சாரம் பண்பாட்டில் எந்தளவு தெய்வ நம்பிக்கை ஊடுருவி உள்ளது என.  தெய்வ நம்பிக்கை கொண்டுதான் இந்த பூலோகவாசிகளை நல்வழிப்படுத்தமுடியும் என முன்னோர்கள் நினைத்ததால்தான் கடவுள் மதம்  என்கிற கலாச்சாரத்தைக் கொண்டுவந்தார்கள். ஆனால் காலம் போகப்போக மனிதன் அந்த தெய்வ நம்பிக்கையைக்கொண்டே சக மனிதனை ஏமாற்றி தான் எவ்வாறு சுகித்திருப்பது எனக் கண்டுகொண்டான்.

Thursday, November 3, 2022

குதிரை மரம் பற்றி - ‍குமார நந்தன்


கே.ஜே. அசோக்குமாரின் குதிரை மரம் சிறுகதையை கடந்த சொற்சுனை கூட்டத்திற்காக சிவப்பிரசாத் தேர்ந்தெடுத்திருந்தார். 

படித்தவுடனே கதையைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சந்தர்ப்ப நிலையால் முடியவில்லை. இப்போதுதான் எழுதுகிறேன்.
கதையைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, கதை, எழுத்தாளன் என்ற நிலைமைகளைத் தாண்டி இக்கதையை அவர் எழுதி இருக்கிறார் என எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. கதையில் அவ்வளவு உயிரோட்டம்.
ஒரு நெசவாளியின் துயர் மிகுந்த வாழ்க்கையைப் பதிவு செய்துவிட வேண்டும் என அர்ப்பணிப்புடன் எழுதி இருக்கிறார்.

Monday, April 4, 2022

இலங்கை சாமானியரின் பதில்கள்


கரோனாவிற்கு பின்னான நெருக்கடி என்று ஒருபுறமும் அரசியல்வாதிகளின் அலட்சியம் மற்றொரு புறமும் என இலங்கையை புரட்டியிருக்கிறது இந்த பொருளாதார நெருக்கடி. அங்கிருக்கும் சாமானிய மக்கள் தினம் அவதிக்குள்ளாவதைப் பற்றி பல காணொளியில் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் குரலான இலங்கையில் வசிக்கும் நண்பர் பிரகாஷ் மூர்த்தியுடன் முகநூல் வழியாக பேட்டி கண்டதை இங்கு வெளியிடுகிறேன்.

கே: வணக்கம் பிரகாஷ்

ப‌: வணக்கம்

கே: இலங்கையில் எப்படி இருக்கு வாழ்க்கை

ப‌: இந்த நிமிடம் வரைக்கும் நிலமை சீராக கூடிய தகவல் இல்லை. தொலைநோக்கு பார்வையில் சிந்திக்க மறுக்கும் அரசியல்.

Saturday, April 2, 2022

ஆட்டிசம் என்னும் புதிர்

 

ஆட்சிசம் என்பது நோயல்ல, ஒரு குறைபாடு. வேறுவகையில் எப்படி சொன்னாலும் புரிந்துக் கொள்வது கடினம். மனங்களின் அரசன் மனிதன். மனதின் இண்டு இடுக்குகளில் இருக்கும் புரிதல்களை பல்வேறு கருவிகள் கொண்டு ஆராய்ந்தாலும் விடுபடல் இருக்கவேச் செய்கிறது. மனதை அறியமுடியாத ஒரு குறைபாட்டை எந்த பெயர்களில் அழைக்க விழைந்தாலும் அதற்கு ஒரு எல்லை வேண்டியிருக்கிறது. எல்லையற்ற வகையில் பலநூறு பிரிவுகளில் இருக்கும் ஒரு குறைபாட் டை ஆட்சிசம் ஸ்பெக்ரம் டிஸ்சாடர் (ASD) என்று பொதுமையில் அழைக்க வேண்டியிருக்கிறது.