Saturday, May 24, 2025

யாக்கை ‍பற்றி - சுமி ஹரி

மனித மனம் விசித்திரமானது. எப்போது, எதற்காக,எதை யோசிக்கும் என்று யாராலும் முன்கூட்டியே தீர்மானித்து விட முடியாது.சூழ்நிலை தான் பெரும்பாலும் அப்படியான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றாலும், சில சமயம் மனதுக்குள் தோன்றும் சலிப்பு, வெற்றிடம் என ஏதோ ஒன்று வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைத்து விடும்.
 

கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஒரு வெற்றிடம் ஏற்படும்போது, தன்னை அந்த குடும்ப அமைப்பில் இருந்து விலக்கிக் கொள்ள நினைக்கிறான் சுப்ரமணியன். அவன் மனம் எப்போதும் அலை பாய்ந்து கொண்டேயிருக்கிறது.இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கு சிறு வயதிலிருந்து அவன் நேரிட்ட அனுபவங்கள், அதனால் வந்த பாதிப்பால் ஆன்மீகம்,தனக்கான குரு அதில் கிடைக்கும் அமைதி என தன் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறான் சுப்பிரமணியன். 

Saturday, May 17, 2025

யாக்கை நாவல் வாசிப்பு அனுபவம் - சோழன்

யாக்கை நாவலை ஆசிரியர் கே.ஜே. அசோக்குமார் எழுதியுள்ளார். இந்நாவலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. யாக்கை என்றால் உயிர் கொண்ட உடலின் நிலை. இந்நாவல் மனிதனின் அகம் கொண்ட தேடலை பிரதானமாக விவாதிக்கிறது.காதல் மற்றும் காமம் தாண்டிய இன்பத்தை கண்டடைய வழிவகுக்கிறது.

Friday, May 9, 2025

குதிரைமரம் வாசிப்பனுபவம் - ஆதவன் சரவணபவன்

எழுத்தாளரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இந்தக் குதிரைமரம்.

பத்துக் கதைகள் கொண்ட தொகுப்பு. வாசக இடைவெளிகளுடன் அநேகமான கதைகள் இருப்பதால் ஆழ்ந்த வாசிப்பைக் கோருகின்றன. ஒன்றுக்கு இரண்டு தடவைகள் வாசிக்கும் போதே அவற்றின் உள்ளீடை அணுகமுடிகின்றது.

மனநலமருத்துவருக்கும் அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிக்கும் இடையிலான பூனை எலி விளையாட்டாக இருந்தது "தற்கொலை முகம்" என்ற கதை. உளவியல் அடிப்படையில் நோயாளியை அணுகும் மருத்துவர் எவ்வாறான மனச்சஞ்சலங்களுக்கு ஆளாகி தன்னிலை இழக்கும் தருணம் எதிர்பாராதது. தூக்கமின்மையின் காரணத்தை சுய மதிப்பீடு செய்யும் போது மனதின் கசப்பான பகுதியை உணர்வது என்ற முடிச்சில் கதை உச்சம் பெறுகிறது.  

Wednesday, April 30, 2025

தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம் - தஞ்சாவூர்க் கவிராயர்

 ஊர்களுக்கென்று சில குணங்கள் இருக்கும். கும்பகோணமென்றால் வெற்றிலை மணக்கும் வாய், மல்லிகை மணம் வீசும் மதுரை என்பது போல தஞ்சாவூருக்கு என்ன இருக்கும். கலவையான சிலவற்றை சொல்லலாம். சாக்கடை, சின்ன சந்துகள், சந்திரகலா, அசோகா இனிப்புகள், பழமையான எல்லா ராஜ்ஜியங்களின் ஒருங்கிணைந்து காணப்படும் கட்டிடங்கள். இப்படி பலவற்றை சொல்லாம். இதெல்லாம் உண்மையில் மற்ற ஊர்களில் இல்லாதது. நையாண்டி மேளம், பொய்கால் குதிரை, கரகாட்டம், பட்டுநெசவு, நெட்டிவேலை, தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியங்கள் என்று இன்னும் சொல்லக்கூடியவை நிறைய உண்டு. முக்கிய காரணம் சோழ அரசு, அதன் பின் நாயக்கர், மராட்டியர், ஆங்கியேலர் என்ற ஒரு வரிசை ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் தலைநகரம் தஞ்சையாக இருப்பதனால் எல்லாவகை கலாச்சாரங்கள் இணைந்த பகுதியாக ஒருமாதிரியான கலப்பாக இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

Tuesday, April 15, 2025

முன்னுரை - யாக்கை நாவல்


 சொல்ல நிறைய இருப்பதனால்தான் நாவல் எழுத தொடங்கினேன். ஆனால் போதாமையை மேலும் கூட்டிவிட்டது இந்நாவலின் விரிவு. யோசித்து பார்க்கும்போது யாக்கை இதுவரை என் குழையாத மனஅடுக்குகளை மாற்றியமைத்துவிட்டது என்று சொல்லலாம். யாக்கையில் வழியே கண்டடைந்தவைகளை மற்றொரு புனைவில் எழுத வேண்டும்.

வாழ்கையிலிருந்து புனைவுகளாக ஆக்கும் முயற்சிகள் ஆற்றுநீரிலிருந்து மணலை சலித்து அள்ளும் செய்கை போல‌ இருந்தது. யாக்கையை எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்பதை நான் தீர்மானிக்கவில்லை. ஆழ்மனம்தான் தீர்மானித்தது. நான் வெறும் கருவி என்று சொல்லலாம். அப்படியும் சொல்லிவிட முடியாது. சில அணுக்கங்கள் எனக்கு ஏற்பட என் ப்ரக்ஞையும் தன்பங்கிற்கு கொஞ்சம் செய்திருக்கிறது. மீளாத பல புனைவு தருக்கங்களை நான் என் ஆழ்தூக்கத்தில் அறிந்திருக்கலாம். கனவுகளில் கண்டடைந்திருக்கலாம். மறந்தவைகளில் நானும் ஒளிந்திருக்கலாம். எப்படியானாலும் சொல்லவந்தது என்னையும் அறியாமல் சொல்லியிருக்கிறேன். நான் பார்த்த‌ வாழ்க்கைதான் இதில் இருக்கிறது. சில உண்மைகள், சில பொய்கள், சில அச்சு அசலாக நானறியாதவைகள்.

Wednesday, March 19, 2025

எழுத்தின் மூலம் என் ஆன்மாவை கண்டடைதல் - கே.ஜே. அசோக்குமார்

 தூக்கத்தில் விழித்திருப்பது போலதான் எழுதுவது. அப்படி சொன்னால் எளிதாக புரியும். எப்படி தூக்கத்தில் விழித்திருப்பது. நம் கனவுகளில் பேசவும், உரையாடவும், மகிழவும், அழவும் திகைக்கவும், நடிக்கவும் முடியும். அதாவது நாம் நம் கனவுகளில் விழித்திருக்கிறோம். விழிந்திருக்கும் கனவில் நாம் தூக்கத்தைப் பற்றி யோசிக்கவும் செய்கிறோம். தூக்கமும் விழிப்பும் ஒன்றுக்கொன்று எதிரானதாக கொள்ளாமல், ஒன்றுக்குள் ஒன்றாக ஆகிவிடுவதாக எண்ணிக் கொள்ளலாம். இப்படியான இரட்டைநிலை நம் ஆழ்மனதின் அலைதல். அந்த அலைதல் சமன்படும் இடத்தில் படைப்பாற்றல் அல்லது எழுத்து உருவாகிறது.

சிந்தனையின் உந்துதலால் கருத்துகளாக மிக இளவயதில் நம் மனதில் மொழியாக படிந்து விடுகின்றன. நம் லட்சியங்கள், ஆர்வங்கள் அதை நோக்கி உந்தப்பட்டுக் கொண்டேயிருக்கும். நாமறியாத ஆழ்மனதின் அச்சங்கள், கற்றல்கள், சமூக தொடர்புகள், இன்னும் சில, நம் நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள் கீறல்களாக சில ஆழமாகவும், சில மென்மையாகவும், விழுந்து கொண்டிருக்கின்றன. சூழல், குடும்பம், சமூகம் எல்லாம் அந்த கீறல்களை வேறுவேறு தளத்தில் நகர்த்தி நம் சிந்தனையை மேலும் வளர்த்துவிடுகின்றன. அப்படியாக ஆழ்மனதின் சுயதேடல்களை பிற்காலத்தில் நாம் மொழியின் வழியாக எழுத்தாக மாற்றிக் கொள்கிறோம்

Wednesday, November 20, 2024

தமிழில் நாவல் வளர்ச்சி - சுருக்கமாக‌

நாவல்களைப் பற்றி பேசுவதற்கு முன்னால் மனிதர்கள் உண்டாக்கின‌ மொழியும் இலக்கியங்களும் எவ்வாறு காலங்களை கடந்து வந்திருக்கிறது என்பதை நாம் கொஞ்சம் உற்று நோக்கினாலே புரிந்துக் கொண்டுவிடமுடியும்.

ஆதியில் இருந்த மனிதர்கள் தினசரி வாழ்வில் இருக்கும் வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், இனக்குழு சண்டை, ஒய்வு, போன்றவற்றிற்கு மேல் அவர்கள் தேடியது கலையும் இலக்கியமும் இசையும் தான். மனிதர்களுக்கு ஒரு முக்கியமான இந்த வாழ்வின் மீதான நம்பிக்கையை அவர்களுக்கு அவை அளித்தன‌. கலையும் இசையும் தினசரி வாழ்வில் ஒரு இனிமையை அளிக்கும்போது இலக்கியம் மனிதர்களுக்கு வாழ்வில் ஒரு அர்த்தத்தை அளித்தது.

குகைகளில் அவர்கள் ஓவியங்களை வரைந்து வைத்தார்கள். தங்களின் வேட்டையாடுதலை, எங்கே விலங்குகள் உள்ளன என்பதை குறிக்க, தங்கள் சடங்குகளை குறித்து மற்றவர்களுக்கு தெரிவிக்க என்று அனைத்தையும் ஓவியங்களாக வரைந்து வைத்தார்கள்.

மொழியறிவிற்கு முன்னால் சைகை மொழி வளர்ந்தது. அதைக் கொண்டு மற்றவர்களோடு உரையாடினார்கள். பிற்பாடு மொழி வளர தொடங்கியது. தலையசைப்பு, கையசைப்பு மூலம் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள்.

Saturday, August 31, 2024

அந்த முகில் இந்த முகில் - ஜெயமோகன்

என் நண்பர்களின் நண்பர்கள் சிலர் சினிமா மோகமும் அரசியல் மோகமும் கொண்டவர்கள். அவர்களின் பேச்சுகள் செய்கைகள் எல்லாம் சினிமா அல்லது அரசியலின் ஒரு பகுதியை வெளிப்படுத்தாமல் இருக்காது. நான் அறிந்தவரை அவர்கள் அதில் மிக தீவிரமாக ஈடுபாடு கொண்டவர்களாகவும் அப்படி இருப்பது தன்னை தனித்துவமாக ஆக்குவதாகவும் நினைப்பவர்கள். அவர்கள் விரும்பும் சினிமாக்களின் வசனங்களை அச்சு பிசகாமல் மனப்பாடமாக சொல்பவர்கள், அதை சொல்லும்போது அவர்களே அதுவாக மாறிவிடுபவர்கள் என்று தோன்றும்.

உண்மையில் அது ஒரு பாவனைதான், அவர்களே அதை அறிந்தவர்கள்தாம். சினிமா ஒரு நிழல் அதன் ஒவ்வொரு அங்கமும் வாழ்வை நேரடியாக பிரதிபலிப்பதில்லை என்று. ஆனால் அந்த நாடகத்தன்மை அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. தன்னை ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கும் எல்லோரும் கவனிக்கும் ஒரு இடத்தில் வைக்கும் செயலை செய்வதனால், இருக்கும் ஒரு சில மணித்துளிகளை மகிழ்வாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் நாளெல்லாம் சினிமைவை பற்றி பேசிக்கொண்டும் எண்ணிக் கொண்டும் இருப்பவர்களால் நிஜவாழ்வின் சில முக்கிய தருணங்களை இழக்கிறார்கள் என்று தோன்றும்.

Saturday, December 2, 2023

ரமணிகுளம் கடிதம் -‍ பா.ராஜேந்திரன்



அன்புள்ள அசோக்குமார்

உங்கள் ‘ரமணிகுளம்’ நாவலைப் படித்தேன்.

நான் காலச்சுவடில் ரமணிகுளத்தை பெற்று படிக்க ஆரம்பித்த சில நாட்களில் நூல் தொலைந்து விட, மீண்டும் ஒருமுறை வாங்கி விட்ட இடத்தில் இருந்து படித்து முடித்துவிட்டேன்.

அருமையாக இருந்தது. தொய்வற்ற வாசிப்பு தந்தது.

  • ஒரு புறம் நகரத்தின் வளர்ச்சியால் காடு தோட்டம் ஆகி தோட்டம் தரிசாகி மனைகளாகி, மனைகள் வீடுகளாகி, வீடுகள் அடுக்ககங்கள் ஆகி அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள்.
  •  அதே காலகட்டத்தில் மூன்று தலைமுறை மனிதர்களின் குணங்கள் உறவுகள் ஆகியவற்றில் நிகழும் மாற்றங்கள்.
  •  குடும்ப உறவுகள் சிதைவது.

Sunday, August 20, 2023

அல் கிஸா என்னும் ஏமனி மேலங்கி


அல் கிஸா என்ற நாவல் குறித்த பேச்சுகள் முன்பே தொடங்கிவிட்டன. நாவல் அளிக்கும் விடுதலையைப் பற்றி பேச தொடங்கிவிட்டார்கள். அஜிதனின் நாவல் அல்லது குறுநாவலின் உள்ளடக்க தேர்வை பாராட்டவேண்டும். ஒரு பொறியின் துளியிலிருந்து தீ பரவுவது போன்ற தூண்டுதலலால் உருவான குறுநாவல். அதன் வேகத்தோடும் துடுக்கோடும் இருக்கிறது.

சிறந்த வேலைப்பாடுகளை கொண்ட போர்வையை நெய்து வெளி எடுப்பது போலத்தான் நாவலை எழுதியிருக்கிறார். ஒரு காதல் கதையின் ஊடே இறைதூதர் முகம்மது நபியின் வழிதோன்றல்களில் ஒருவரான மகள் வழி ஃபாத்திமா பெயரன் ஹுசையின் இறுதி போர்ப் பற்றிய நாவல் என்று சுருக்கி கொள்ளலாம்.

Friday, April 28, 2023

ஜெயமோகனின் சிறார் உலகம்


 

1

எழுத்தாளர் ஜெயமோகனின் முழு படைப்புகளையும் வாசித்து ஒரு கட்டுரை எழுத முடிவு செய்தால் அது அவரது வாழ்நாள் சாதனையாக அமைந்திருக்கும் என தோன்றுகிறது. ஜெயமோகன் தன் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே எழுத தொடங்கிவிட்டதாக கூறியிருக்கிறார். தனது பள்ளி கல்லூரி காலங்களில் எழுதியது, ஆவணமாக ஆகாதது, கூட பலபக்கங்கள் இருக்கும். இருபத்தி நாலாம் வயதில் எழுத ஆரம்பித்தபோது அவர் புனைவுலகத்தை முழுமையாக உள்வாங்கி படைக்க தொடங்கிவிட்டிருந்தார். அந்த வயதிலேயே கூட தீவிரமான எழுத்து எல்லோருக்கும் அமைவது கடினம். அன்றிலிருந்து தொடங்கி தனது 60வது வயது இன்று வரை வந்திருக்கும் அவரின் இலக்கிய பணி, பல்லாயிரக்கணக்கான பக்கங்களை படைத்திட்ட, மிக பெரிய வெற்றிகளையும், அளப்பரிய சாதனைகளை அதனுள் கொண்டிருக்கிறது என்று தைரியமாக சொல்லாம்.

Thursday, April 6, 2023

குதிரை மரம் சிறுகதை தொகுப்பு பற்றி - பா. ராஜேந்திரன்



அன்புள்ள
திரு அசோக்குமார்,

இன்று உங்கள் குதிரை மரம் & பிற கதைகள் வாசித்து முடித்தேன். சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய 90 புத்தகங்களுள் ஒளிந்திருந்து இப்போதுதான் வாசிக்கச் சிக்கியது.

எந்த பரிந்துரையின்படி வாங்கினேன் என்று நினைவில்லை. எனவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசிக்கத் தொடங்கினேன். முதல் கதையிலேயே ஒரு அற்புதமான படைப்பினுள் நுழைந்தது தெரிந்தது. அனைத்து கதைகளும் அதே உயர் வாசிப்பனுபவத்தைத் தந்தன. எதிர்பாராமல் அமையும் நல்நிகழ்வு தரும் பரவசம் இன்னும் மீதமுள்ளது. சரளமான மொழிநடை. இயல்பான உரையாடல்கள். நுணுக்கமான பாத்திர படைப்புகள். கூரிய வாழ்க்கை அவதானிப்புகள்.

அதிலும் சிகரமாக குதிரைமரம் குறுநாவல். குடும்பத்தின் அடிப்படை தேவைகளுக்கான பொருளை ஈட்ட இயலாத குடும்பத் தலைவனின் அவலம், படைப்பில் இருந்து உற்பத்திக்கு மாறும் உலகில் உண்டாகும் சமூக சீர்குலைவு, கணவனின் மகிழ்ச்சிக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் இடையே ஊசலாடும் மனைவி என் பல தளங்களில் சஞ்சரிக்கிறது. படைப்பாளியின் படைப்பூக்க மகிழ்ச்சியும் வீழ்ச்சியும் தந்தை மகன் ராமர் கதை மூலம் மனம் தொடுகிறது. எவ்வளவு ஆழமான நுணுக்கமான சித்தரிப்பு. வறுமையிலும் பசியில் வாடாமல் காக்கும் விலையில்லா ரேஷன் அரிசி, வறுமையிலும் பீஸ் வாங்கும் பள்ளியில் பசங்க படிப்பது என ஒரு வரியில் வந்து செல்லும் செய்திகள் பல.