வாசிப்பு தினம் பத்துபக்கமாவது இருக்க வேண்டும் என்பார்கள்.
நூறு பக்கங்கள்கூட தினம் படிப்பவர்கள் உண்டு. ஆனால் எல்லாமே வாசிப்பு ஆகிவிடாது என்று
தோன்றுகிறது. ஆழமான வாசிப்பைதான் வாசிப்பு என்று கொள்ளவேண்டும். நான் தினம் தினத்தந்தி
படிக்கிறேன், வாரப்பத்திரிக்கைகளைப் படிக்கிறேன், இணையத்தில் பலபக்கங்களை படிக்கிறேன் என்பதெல்லாம் வாசிப்பு என்ற
கணக்கில் எடுத்துக் கொள்ளமுடியாது.
தினப்படி செய்கையாக,
ஊன்றி நம் வரம்பிற்கு
அல்லது நம் வரம்பை தொடும் அளவிளாவது படிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒரு நாவல் அல்லது
ஒரு அபுனைவாக இருக்கும் ஒரு முழுமையான நூல் ஒன்றை தினம ஒரு பத்து பக்கமாவது வாசித்து
அதன் தொடர்ச்சியை அடுத்த நாளும் வாசிப்பதாக இருக்கவேண்டும். சிலர் ஒரு புத்தகத்தை ஒரே அமர்வில் முடித்துவிட்டு
பின் பல நாட்கள் வாசிக்காமல் இருப்பதை கவனித்திருக்கிறேன். அதுவும் ஒருவகை வாசிப்பு
என்றாலும் அதில் தொடர்ச்சி இல்லாத வகையில் சிறந்த வாசிப்பாக சொல்லமுடியவில்லை. தினமும்
கம்பராமாயணத்தை வாசிக்க்கும் ஒரு நண்பரை எனக்கு தெரியும். அதில் சில கவிதைகளை வாசித்துவிட்டு
அதன் தொடர்ச்சியை அடுத்த நாள் வாசிப்பார். அந்த தினத்தின் மற்ற நேரங்களில் கம்பராமாயணம்
குறித்து எழுதப்பட்டிருக்கும்/விவாதித்திருக்கும் நூல்களை வாசிப்பார்.
ஆனால் வாசிப்பு பொதுவாக எளிதாக அமைவதில்லை. சிறுவயது முதல்
வாசிப்பு கொஞ்சமேனும் இருந்தால் அல்லது அதில் ஒரு போதை இருந்தால் மட்டுமே நடுவயதில்
வாசிப்பின் அடுத்தடுத்த கட்டத்தை எடுத்துச் செல்லமுடிகிறது. தமிழகத்தில் வாசிப்பு பழக்கம்
உடையவர்கள் மிகக்குறைவு. அவர்கள் தொடர்ந்து எதாவது வாசிப்பது என்பது பல இடையூறுகளுக்கு
இடையே தான் நிகழ்த்த வேண்டியிருக்கும். இதனால் உனக்கு என்ன பயன்? காசை ஏன் புத்தகம் வாங்கி வீணாக்குகிறாய்? இதை படிப்பதற்கு பாடபுத்தகத்தை படிக்கலாமே? என்று பல்வேறு தாக்குதல்களை ஒருவர் அனுபவிக்க
வேண்டியிருக்கும். எல்லா மனங்களிலும் வாசிப்பு என்பது வெட்டிவேலை அல்லது ஒரு கெட்ட
காரியம் என்கிற எண்ணம் வளர்ந்தே வருகிறது. இன்றைய தேதியில், புத்தகக் கண்காட்சி, புத்தக விற்பனை எளிதாகி இருக்கும் நிலையிலும் இந்த எண்ணம் தான்
உண்டு.