Monday, October 30, 2017

விமர்சனம்: சாமத்தில் முனகும் கதவு தொகுப்பு பற்றி மேரி கிறிஸ்டி




என் அன்பு வாசக நண்பர்களுக்கு, திரு.கே.ஜே. அசோக் குமார் வளர்ந்து வரும் நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்; விரைவில் மிக முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக வரவிருப்பவர். சென்ற தடவை மலேசிய தமிழ் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களை அறிமுகப்படுத்தியிருந்தேன். தற்போது வாசித்தது கே.ஜே. அசோக் குமார் அவர்களின் "சாமத்தில் முனகும் கதவு" - 18 சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு சிறுகதையைப் பற்றியும் நான் சொல்ல ஆரம்பித்தால் அதுவே ஒரு பெரிய புத்தகம் அளவுக்கு வந்துவிடும். ஏனெனில் அவரின் கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் மேலே மேலே சிந்தனைகளைக் கிளறிவிடுகின்றன.  அதனால் உதாரணத்திற்கு என்னைக் கவர்ந்தவற்றுள் ஒன்றிரண்டு வாக்கியங்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன். "சாமத்தில் முனகும் கதவு" என்று ஒரு சிறுகதை. அதில் இப்படி ஒரு வாக்கியம்: "கடை எண்ணெய் தினமும் பார்த்துப் பழகி சாதாரணமாகி விட்டிருப்பதை உணர்ந்தபடி சைக்கிளை எடுத்தான்". இது ஒரு சாதாரண மனித மனதின் அன்றாட பரிணாம வளர்ச்சி. இதை மிக இயல்பாக சொல்லிவிட்டார். நம் வாழ்வின் ஒவ்வொரு சமயத்திலும் நிகழ்வது இதுதான்

Wednesday, October 25, 2017

சலனம் (சிறுகதை)


அவளை முதலில் பார்த்தபோது முழுமயக்கதில் இருந்தாள். தெற்றுப்பல் போன்று ஒற்றைப்பல் ஒன்று நீட்டியிருந்த உதடுகளின் இடையே அசாதாரமான புன்னகை ஒன்று கூடியிருந்தது. அவளை கிடத்தியிருந்த‌ பலகையை அவளுடன் சேர்த்து தாறுமாக தூக்கிவந்தார்கள். உண்மையில் அதுஒரு கதவு. ஒரு பக்கம் தகரம் அடிக்கப்பட்ட மெல்லிய பிளவுட் மரத்தாலான கதவு. அதிகமாக நீட்டியிருந்த அதன் கால்களை ஒரு பக்கம் தூக்க வசதியாக இருந்தது. கால்கள் இல்லா மற்றொருபக்கம் தூக்கும் சமயங்களில் அவளின் தலை ஆடியபடியிருந்தது.

Tuesday, October 24, 2017

பச்சை அனார்கலி (சிறுகதை)

இன்று மாலை சுலோசனா ராணி தன் கணவன், குழந்தையுடன் வரப்போவதை முதல் நாள் இரவே சொல்லிவிட்டாள் அனு. அவளின் நீண்ட ஸ்ரைட்டன் முடி, கண்களுக்கு அவள் செய்திருந்த ஐலைநர் அலங்காரங்களை பற்றி இதற்கு முன்பே இருமுறை சொல்லிவிட்டாள். காலையில் எழுந்ததும் முதலில் அதைப் பற்றிதான் பேசினாள். தன்னை மறந்து சொல்லிவிட்டவள் போல் இல்லாமல் தெரிந்தே புதியதாக சொல்வதைப்போல மிக நிதானமாக சொன்னாள். நான் புதியதாக கேட்டுக்கொள்பவன் போல் கேட்டுக்கொண்டேன். அந்த முடிதிருத்தங்களையும் ஐலைனர்களையும் நானும் செய்துக் கொள்ளட்டுமா என்று என் அனுமதியை கடைசியாக கேட்டுக்கொண்டாள். பொதுவாக இதைப் பற்றி அவள் ஒரு முடிவு செய்திருப்பாள், வேண்டாம் என்று சொல்வதனால் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை அப்படி மறுத்து கூறுவது அவளது அன்றைய தின சந்தோசத்தை பாதிக்கவும் கூடும் என்பதால் சரி என்பதுபோல் தலையசைத்தேன்.

Saturday, October 21, 2017

சுயபுராணம்



என்னைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கும் வாசகர்களின்/நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க(!!) அவர்களை திருப்திபடுத்த வேண்டி இந்த பதிவு செய்யப்படுகிறது. மற்றவர்களுக்கு இது சற்று அதீதமாகப் படலாம். அல்லது இணைய உலகின் வேறு பயனுள்ள தளங்களை பார்க்க வேண்டுகிறேன். இருந்தாலும் தலைப்பு சுட்டுவதுபோல் இக்கட்டுரையை சுயபுராணமாக அமைத்துவிடாமல் இருக்க முயற்சிசெய்கிறேன். 

Monday, October 16, 2017

வனவாசி - விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய



நான் முன்பு திருவாரூரில் இருந்த சமயத்தில் ஒரு நாள் ஒரு உறவினர் என்னை அவரது ஊரான அம்மையப்பனுக்கு அழைத்துச் சென்றார். சின்ன பையனாக இருந்த என்னை முன் பாரில் உட்காரவைத்து சைக்கிளை எளிதாக மிதித்து வந்தார். நடுவே இருந்த ஊர்களின் பெயர்களை அங்கு என்ன கிடைக்கும் என்பதை சொல்லிக் கொண்டுவந்தார். ஒரு இடம் வந்ததும் இதற்குமேல் ஊர் இல்லை என்றுவிட்டார். மனதை குடைந்துக் கொண்டேயிருந்தது அவர் சொன்னது. ஊர் இல்லையென்றால் அந்த இடத்தை எப்படி அழைப்பது, அங்கு யாரும் வசிக்கவில்லையா? பேய்கள் ஒருவேளை அந்த பகுதியில் இருக்கலாம் என்று தோன்றியது. இதற்குமேல் வயல்களும் காடும் மட்டுமே என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆனால் எனக்குதான் புரிய சில காலமாகியது.

Sunday, October 15, 2017

தஞ்சைக் கூடலின் செப்டம்பர்'17 மாதக் கூட்டம்



புதிய நண்பர்கள் ஒவ்வொரு மாதமும் இணைவது நடந்துக் கொண்டேயிருக்கிறது. சிலர் வரமுடியாமல் போவதும் நிகழ்கிறது. இந்த மாதம் கரந்தை ஜெயக்குமார், சுரேஷ் பிரதீப், பேராசிரியர் கல்பனா, தமிழ் பல்கலைக்கழக மாணவர் ராமசந்திரன் போன்றவர்கள் புதியவர்கள். முதலில் சுரேஷ் பிரதீப் தான் மாலை 4.55க்கே வந்துவிட்டிருந்தார். போன் செய்து கூறிய அரை மணி நேரம் கழித்துதான் நான் சென்று சேர்ந்தேன். சுரேஷை இப்போதுதான் முதலில் சந்திக்கிறேன். அன்பும், அமைதியும் கொண்ட இளம்மனிதராக தெரிகிறார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பின் ஹரணி, அவரது நண்பர்களுடனும், வியாகுலன், சி.எம்.முத்து நண்பர்களுடனும் வந்து சேர்ந்தார்கள்.

Tuesday, October 10, 2017

பெயர் தெரியாப் பறவையின் கூடு (சிறுகதை)

சமீபகாலங்களில் காலையில் எழுந்ததும் கூடத்தின் ஜன்னலுக்கு வந்து அந்த மரத்தையும் அதில் உள்ள பறவையின் கூட்டையும் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது தினேஷ் குமாருக்கு. மனைவியின் கேலியையும் மீறி அதை ரசிப்பது அவனுக்கு பிடித்திருந்தது. மஞ்சள் நிறம் கொண்டசின்ன அலகால் வாய்திறந்து தன் தாயின் அலகிலிருந்து வரும் உணவிற்காக மூடிய கண்களோடு நம்பிக்கையோடு அந்தமூன்று குஞ்சுகள் காத்திருக்கின்றன. மரகுச்சிபோன்ற கால்களுடையதாய் அருகே வந்ததும் மூன்று குஞ்சுகளும் மேலும் அகலதிறந்த அலகுகளுடன் நாக்குகள் துடிக்க பல விசித்திர ஒலிகளை எழுப்ப ஆரம்பிக்கும். உணவு வாய்க்கும் வரும்வரை கத்தி கூப்பாடு போட்டுவிட்டு பின் அமைதியாக உறங்கிவிடும்.
இரண்டாவது தளத்தில் இருந்த கருப்பு கண்ணாடி ஜன்னல்கள் மறைத்தஅவன் வீட்டிலிருந்து அந்த கூட்டை அவைகளுக்கு தெரியாமல் அவன் காணமுடிந்தது நாளுக்கு நாள் குஞ்சுகள் வளர்வதை காண்பது பெரும் பாக்கியமாக நினைத்தான். சில நேரங்களில் ஒருவயது மகனுடன் அமர்ந்துவிடுவான். குஞ்சுகளைக் கண்டு .. என்று கூவும் அவனின் ஆச்சரியங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியளிப்பவைகள். நீண்ட கூரிய அலகுள்ள தாய்ப் பறவையை கிட்டத்தில் பார்க்கும்போது அதன் கால்களும் இறகுகளும் மரத்தால் செய்யப்பட்டபொம்மைபோல் இருக்கும். யாரும் அவைகளை தொல்லை செய்யக்கூடாது என கட்டளை இட்டிருந்தான். ‘பாவம் குஞ்சிங்க…’ என்று சொல்லிக்கொண்டான். அவனின் விசித்திர செயலால் அம்மாவும் அவன் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

Friday, October 6, 2017

விவேக் ஷான்பாக்கின் நிர்வாணம் கதை



விவேக் ஷான்பாக்கின் கதை எப்போதும் மேலதிகமான ஒன்றை உணர்த்திக் கொண்டிருக்கும். எதிர்பாராத வாழ்க்கை சூழல், உறவு சிக்கல்களின் அந்தரங்க முடிச்சு, திருப்பங்களின் அதிர்வு என்று பலகோணங்களை அவர் கதைகள் கொண்டிருக்கும். கன்னட எழுத்தாளர்களான எஸ்.எல். பைரப்பா, யூ.ஆர். அனந்தமூர்த்திக்கு பின் விவேக் ஷான்பாக்கை வைக்கலாம் என நினைக்கிறேன். தமிழில் மொழிபெயர்த்து இனி வர இருக்கும் அவரது நாவல்கள் அதை உறுதி செய்யலாம். வெளியான மொழிபெயர்ப்பு சிறுகதைகளில் சிறந்த கதைகளாக வேங்கைசவாரி, கோழியை கேட்டா மசாலா அறைப்பது, அடுத்தவர் குடும்பம் போன்ற கதைகளை சொல்லலாம். இந்த மூன்று கதைகள் இல்லாமல் ஜாமீன் சாஹிப், காரணபூதம், நம் வழியில் நாம், சரவணா சர்வீஸ், சில்லறை, சுதீரின் அம்மா போன்ற கதைகள் கிடைக்கின்றன. எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சில ஆர்வலர்களின் முயற்சியால் அவரது இந்த 9 கதைகள் தமிழில் கிடைக்கின்றன. அந்த வரிசையில் கே.நல்லதம்பி மொழிபெயர்த்த நிர்வாணம் (காலச்சுவடு, செப் 17) என்கிற கதையும் சேர்கிறது. மற்ற கதைகள் எல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் வந்திருக்கின்றன. இந்தக் கதை நேரடியாக கன்னடத்திலிருந்து மொழியெயர்க்கப் பட்டிருக்கிறது.