Tuesday, August 29, 2017

ஆகஸ்ட் மாத தஞ்சைக் கூடல் கூட்டம் (19-08-17)



ஒவ்வொரு முறை கூட்டம் முடிந்ததும் இந்த கூட்டத்தோடு போதும் என்று தோன்றும். இந்தமுறையும் தான். ஆனால் அது அடுத்த கூட்டம் வரும்வரை மட்டுமே நீடிக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் புதுப்புது நண்பர்கள் வருவது உற்சாகத்தை அளித்துவிடுகிறது. புத்தம் புதிய விஷயங்கள் கூட்டத்தில் சேர்ப்பதும் நடக்கிறது. அதனால் ஒவ்வொரு சமயமும் ஒரு புதிய அனுபவம் கிடைத்துவிடுகிறது. இந்த முறை ஹைலைட் சி.எம்.முத்து அவர்கள்தான். அவர் பங்கேற்பாளராக வந்திருந்தாலும் பேசும் ஒவ்வொரு சமயமும் சிரிப்பு பீரிட்டது. இதற்கு முன்பு முத்தமிழ் விரும்பி அவர்கள் கூட்டியிருந்த கூட்டத்தில் சி.எம். முத்து தன் எழுத்து அனுபவங்களை பேசும்போது வந்திருந்த அத்தனைப் பேரும் சிரிப்பை சிரிப்பை நிறுத்தமுடியாமல் தவித்தோம். அவர் எழுதி சாகித்ய அகாதமி வெளியீட்டில் சில எழுத்தாளர்களின் கட்டுரைகளாக தொகுக்கப்ட்டிருந்த எழுத்தும் வாழ்வும் என்கிற நூலில் இருந்த அவரை கட்டுரையைதான் அன்று வாசித்தார். பெரும் அனுபங்கள் கொண்ட யாவர்க்கும் தங்கள் வாழ்வை சொல்லும்போது அதில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வேடிக்கையாகவே இருக்கிறது.

Friday, August 25, 2017

கிராமத்தின் பாடல்கள்



ஒரு தனியார் பேருந்தில் சமீபத்தில் பயணம் செய்தேன். தனியார் வண்டி என்பதால் கிராமமக்கள் எல்லாம் ஏறினார்கள். அவர்கள் நிற்கும் இடங்கள் ஓட்டுனர் நடத்துனருக்கு தெரிந்திருந்தது. அரசு பேருந்தைவிட கட்டணம் மிகக்குறைவு, எல்லா இடங்களிலும் நிற்கிறார்கள், ஆனால் குறித்த நேரத்தில் அரசு பேருந்தைவிட முன்பே சென்றுவிடுகிறார்கள். ஆச்சரியம்தான். நடத்துனரின் சிடுசிடுப்புகள் இல்லாமல் சரியாக கொண்டு சென்றுவிடுகிறார்கள். ஆகவே கூட்டம் அம்முகிறது.

என்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள், நின்றிருந்தவர்கள், ஆண்கள், பெண்கள் எல்லாருமே கிராமத்துகாரர்கள். ஒயர் கூடையை வைத்திருக்கிறார்கள் அல்லது பெரிய துணிப்பை வைத்திருக்கிறார்கள் அல்லது பெரிய தூக்குவாளி. மெல்லிய புன்னகையுடன் ஒவ்வொருவரிடமும் நலம் விசாரித்து பேசியபடி வருகிறார்கள். திரும்பி பார்ப்பதற்குள் அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்கிறார்கள்.

Sunday, August 20, 2017

யுவன் சந்திரசேகரனின் பரமபதம் (அ) அறுந்த சரம்




எனக்கு தெரிந்து மூன்று வகையான எழுத்துகள் இலக்கிய வகை எழுத்திற்கு உண்டு என நினைக்கிறேன். ஒன்று நேரடியான அனுபவங்களை எந்த சிக்கல் இல்லாமல் விவரிப்பது, எளிய முயற்சியால் அதை படித்துவிட முடியும். இரண்டாம் வகை இரண்டாம் முறை படித்தால் மட்டுமே புரிந்துக் கொள்ளக் கூடியது. நம் அனுபவதளத்தை சற்று ஒருபடியேனும் உயர்த்தி காட்டிவிடுபவையாக இருக்கும். மூன்றாம் வகை படிக்க எளிதாக இருக்கும் அனுபவ தளமும் நாம் அறிந்தஒன்றாக இருக்கும். இருந்தும் புரிந்துக் கொள்வதில் சிக்கல் இருக்கும். எப்போது படித்தாலும் புதியதாக படிப்பது போலிருக்கும். முதல்வகைக்கு நிறைய உதாரணங்கள் உண்டு. மூன்றாம் வகைக்கு மெளனி, கோணங்கி போன்றவர்களை சொல்லலாம். இரண்டாம் வகைக்கு உள்ளவர்களில் யுவன் சந்திரசேகரும் உண்டு. அவர் எழுதிய பரமபதம் (அ) அறுந்த சரம் அப்படியான ஒன்று. சற்று முயற்சி எடுத்து மட்டுமே புரிந்துக்கொள்ளக் முடியும். (காலச்சுவடு ஆகஸ்ட்'17 இதழ் கதை.)

Friday, August 18, 2017

களிமண் பட்டாம்பூச்சிகள் (சுப்ரபாரதி மணியன்) கதைப் பற்றி ஹரணி



கதையின் தலைப்பு ஒரு ஜென் அனுபவக் கவிதையின் முதல் அடியைப் போல இருந்தது பிடித்துப்போனது வாசிக்கத் தொடங்குமுன். ஆகவே இக்கதையை வாசித்து முடித்தேன். அப்புறம் இதுகுறித்த விமர்சனத்திற்காக ஐந்துமுறை வாசித்து முடித்தேன்.

Thursday, August 17, 2017

பெயரில் என்ன இருக்கிறது?



எங்களுக்கு ஒரு நண்பர் இருந்தார். மிகவும் நல்லவர். எந்த நண்பருக்கும் உதவி என்றால் ஓடிவருவார். அவர் பெயரை பிரியமாக கூப்பிடதான் எங்களுக்கு சங்கடமாக இருக்கும். பொதுஇடத்தில் அவர் பெயரை சொல்லவே முடியாது. ஒருமுறை நகர பேருந்தில் பண்டத்தை ஈக்கள் மொய்பது போலிருந்த மக்களை விலக்கி வண்டியைவிட்டு கீழே இறங்கி அவரை தேடினால் ஆளைக் காணாம். அவர் பெயரை சொல்லி அழைத்து இறங்க சொல்லலாம் என்றால் நா எழவில்லை. எங்கே வண்டியில் வெளியில் தொத்தியிருக்கும் மக்கள் எல்லோரும் என்னைப் பார்த்து சிரித்துவிடுவார்களோ என்று பயம். வண்டியும் கிளம்பி போய்விட்டது. அவரது பெயர் ஆடியபாதம்.

Wednesday, August 9, 2017

தஞ்சைக் கூடல் ஜூலை மாதக் கூட்டம் (29/7/17)



எப்போதும் போன்றதொரு பதட்டம் இந்தமுறையும். பதட்டத்தின்படி எதுவும் நடந்துவிடப்போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் இயல்பாக இருக்க முடியவில்லை. இடத்திற்கு போனதும் எல்லாம் மறைந்து கொஞ்சம் இயல்பிற்கு திருப்பியது. பிரசன்ன கிருஷ்ணன் முன்பே வந்திருந்தார். அவர் திருச்சியில் இருந்து பஸ் பிடித்து இடந்தேடி வந்துவிட்டிருந்தார். இலக்கியம் ந்ம்மை எப்படியெல்லாம் அழைத்துச் செல்கிறது. அவர் பெங்களூருவில் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறார்.

நான் அவருடன் பேசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் வியாகுலனும், மா.கோவிந்தராஜுவும் வந்துவிட்டார்கள். இலக்கியமும் நடைமுறை வாழ்க்கையும் மாறிமாறி பேச்சில் கலந்திருந்தது. ஹரணி, கவிஜீவன், ராகவ் மகேஷ் வந்ததும் பேச்சில் சுவாரஸ்யங்கள் கூடின. அதே வேகத்தில் கூட்டத்தை தொடங்கிவிடவேண்டும் என்கிற எண்ணத்தோடு அறிமுக பேச்சை தொடங்கினேன். ராகவ் மகேஷின் நண்பர்களான ரா.பிரபு, கணேஷ்ராவ் இருவரும் வந்திருந்தார்கள். தமிழம்மா அன்பரசி டீச்சர் முதல் முறையாக வந்திருந்தார். பார்க்கும் ஒவ்வொரு சமயமும் வர்வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

Monday, August 7, 2017

தீராத திருநாள் (குமார நந்தன்) கதைப் பற்றி - எஸ். பிரசன்னகிருஷ்ணன்


ஜம்பு, ஒரு திருவிழா நடக்கும் ஊரின் உணவகத்துக்கு தோசை மற்றும் புரோட்டா மாஸ்டரின் தட்டுப்பாட்டால் அங்கு செல்கிறான். மற்ற மாஸ்டர்கள் வேறு சில கல்யாண நிகழ்வுகளுக்கு உள்ளூரிலேயே வேலைக்கு சென்றுவிட்டனர். ஜம்பு கடந்த நான்கு நாட்களில் பிழிந்தெடுத்த துணியை போன்ற உழைப்பினால் இன்று முழுநேர ஒய்வு எடுக்கலாம் என்று காத்திருந்தான். ஆனால் காலையில் வந்து கேட்ட இள வயது முதலாளியின் பேச்சை தட்டமுடியாமல் சென்று விட்டான். கூடுதல் கூலி என்ற ஒப்பந்தம் இவனை உந்தியது. அலை போல் மக்கள் கூட்டம் உணவகத்துக்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். திருவிழா என்பதால் இடைவெளியின்றி ஜம்புவின் பணி தொடர்ந்து தேவைப்பட்டது. மதியம் பொதுவாக எடுக்கும் ஒய்வு கூட அறவே கூடாதென்று அந்த இள வயது முதலாளி கூறிவிட்டான். இவனுக்கும் மெஷின் போன்ற உடலியக்கம் பழகிவிட்டது. அந்தியில் ஊரில் விழாவுக்கான கலை உருவாகி இவன் கண்ணில் தென்பட்டது. இரவு ஒருவழியாக மக்கள் வரத்து நின்று போயி, வேலைகளை முடித்து, கூலி வாங்கி கடை ஆட்களுடன் குடித்தும் உணவருந்திவிட்டும், அருகே ஒரு மைதானத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தனியாக செல்கிறான். போன இடத்தில் எதிர் பாரா வண்ணம் சில முகம் தெரியா நபர்களுடன் மேலும் குடியில் மூழ்குகிறான். நிகழ்ச்சியின் இடையில்  குழம்பிய நிலையில் இவனிருக்கும் போது, மக்கள் கூட்டம் கூட்டமாக தெறித்து ஓடுகின்றனர். காக்கி சட்டை காரர்களின் வாகனங்கள் அங்குமிங்கும் ஒலி எழுப்பிய படி அலைந்து கொண்டிருந்தன. இவன் பயத்தினால் உந்தப்பட்டு நடைவேகத்தை கூட்டி கடையின் அருகில் வந்து படுத்து கொள்கிறான். பின்புறத்தில் லத்தியினால் பலமாக விழுந்தது ஒரு அடி. மைதானத்தில் கொலை நடந்ததற்கு அவன் தான் காரணம் என்று பழி சுமத்தப்படுகிறான். தலை கால் புரியாமல் காக்கி சட்டையின் மிரட்டலுக்கு இணங்கி அவர் பின்னால் சென்றான். வேறு ஏதோ ஒரு நபருடன் நீண்ட நேரம் வாக்கிடாக்கியில் பேசிக்கொண்டிருக்கிறார். காக்கி சட்டையின் அலட்சியத்தை பயன்படுத்தி, வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் அந்த வழியாக சென்ற ஒரு பேருந்தில் ஏறிவிடுகிறான்.