தூக்கத்தில் விழித்திருப்பது போலதான் எழுதுவது. அப்படி சொன்னால் எளிதாக புரியும். எப்படி தூக்கத்தில் விழித்திருப்பது. நம் கனவுகளில் பேசவும், உரையாடவும், மகிழவும், அழவும் திகைக்கவும், நடிக்கவும் முடியும். அதாவது நாம் நம் கனவுகளில் விழித்திருக்கிறோம். விழிந்திருக்கும் கனவில் நாம் தூக்கத்தைப் பற்றி யோசிக்கவும் செய்கிறோம். தூக்கமும் விழிப்பும் ஒன்றுக்கொன்று எதிரானதாக கொள்ளாமல், ஒன்றுக்குள் ஒன்றாக ஆகிவிடுவதாக எண்ணிக் கொள்ளலாம். இப்படியான இரட்டைநிலை நம் ஆழ்மனதின் அலைதல். அந்த அலைதல் சமன்படும் இடத்தில் படைப்பாற்றல் அல்லது எழுத்து உருவாகிறது.
சிந்தனையின் உந்துதலால் கருத்துகளாக மிக இளவயதில் நம் மனதில் மொழியாக படிந்து விடுகின்றன. நம் லட்சியங்கள், ஆர்வங்கள் அதை நோக்கி உந்தப்பட்டுக் கொண்டேயிருக்கும். நாமறியாத ஆழ்மனதின் அச்சங்கள், கற்றல்கள், சமூக தொடர்புகள், இன்னும் சில, நம் நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள் கீறல்களாக சில ஆழமாகவும், சில மென்மையாகவும், விழுந்து கொண்டிருக்கின்றன. சூழல், குடும்பம், சமூகம் எல்லாம் அந்த கீறல்களை வேறுவேறு தளத்தில் நகர்த்தி நம் சிந்தனையை மேலும் வளர்த்துவிடுகின்றன. அப்படியாக ஆழ்மனதின் சுயதேடல்களை பிற்காலத்தில் நாம் மொழியின் வழியாக எழுத்தாக மாற்றிக் கொள்கிறோம்