Wednesday, April 30, 2025

தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம் - தஞ்சாவூர்க் கவிராயர்

 ஊர்களுக்கென்று சில குணங்கள் இருக்கும். கும்பகோணமென்றால் வெற்றிலை மணக்கும் வாய், மல்லிகை மணம் வீசும் மதுரை என்பது போல தஞ்சாவூருக்கு என்ன இருக்கும். கலவையான சிலவற்றை சொல்லலாம். சாக்கடை, சின்ன சந்துகள், சந்திரகலா, அசோகா இனிப்புகள், பழமையான எல்லா ராஜ்ஜியங்களின் ஒருங்கிணைந்து காணப்படும் கட்டிடங்கள். இப்படி பலவற்றை சொல்லாம். இதெல்லாம் உண்மையில் மற்ற ஊர்களில் இல்லாதது. நையாண்டி மேளம், பொய்கால் குதிரை, கரகாட்டம், பட்டுநெசவு, நெட்டிவேலை, தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியங்கள் என்று இன்னும் சொல்லக்கூடியவை நிறைய உண்டு. முக்கிய காரணம் சோழ அரசு, அதன் பின் நாயக்கர், மராட்டியர், ஆங்கியேலர் என்ற ஒரு வரிசை ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் தலைநகரம் தஞ்சையாக இருப்பதனால் எல்லாவகை கலாச்சாரங்கள் இணைந்த பகுதியாக ஒருமாதிரியான கலப்பாக இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

இவற்றுடன் குறிப்பாக‌ தஞ்சாவூர் சந்துகள் மிக பிரபல்யமானவை. பல தெருப்பெயர்கள் அங்கிருந்த, வாழ்ந்த மனிதர்களின் பெயர்களைக் கொண்டே அழைக்கப்பட்டு பிரபல்யமானவை. உதாரணமாக வரகப்பையர் சந்து (வரகப்பா ஐயர்). இவர் இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில் அவர் அவையில் அமைச்சராக இருந்தவர். வீரப்பிள்ளை சந்து, அழகுபிள்ளை சந்து, பெத்தநாயக்கன் சந்து, என்று உயிர் பதவியில் இருந்தவர்கள் அல்லது முக்கியஸ்தர்களின் பெயர்களை கொண்டவை. ஆனால் சில சந்துகள் தொழில் ரீதியான பெயர்களால் உருவானவை. நெட்டிவேலகார தெரு, மேளக்கார சந்து, கோழிக்கார சந்து, குரும்பர் சந்து என்று தொழில் பெயர்களாக சில இருக்கின்றன. மரங்களின் பெயர்களும் உண்டு அரசமர சந்து, நாகமர சந்து என்று.

தஞ்சாவூர் அரண்மனையை சுற்றி நான்கு பெரிய தேரோடு வீதிகள் உண்டு. தெற்கு வீதி, வடக்குவீதி, கிழவீதி, மேலவீதி என்று. இந்த நான்கு வீதிகளை ஒட்டி வெளிப்புறத்தில் ஓடும் தெருக்களுக்கு அலங்கம் என்று பெயர். தெற்கு அலங்கம், மேல அலங்கம் என்று நான்கு அலங்கங்கள். அலங்கம் என்பது கோட்டை சுவர்கள் கவசமாக அதை ஒட்டி இருக்கும் தெருக்கள் அதன் திசை கொண்டு அலங்கம் என்று அழைக்கப்படும். கோட்டை சுவர்கள் தற்போது தஞ்சாவூரில் இல்லை. ஆனால் அந்த தெருக்களுக்கு அதே பெயர்கள் தாம்.

உள்ளிருக்கும் இந்த நான்கு தேரோடும் முக்கிய வீதிகளுக்கு (வடக்கு வீதி, தெற்குவீதி, கீழவீதி, மேலவீதி) இடையே பல சிறிய தெருக்களும் சந்துகளும் இணைப்பாக உள்ளன. அந்த தெருக்கள் மிக பாதுகாப்பானவையாக அமைத்து எதிரிகளை குழப்பமடையவைப்பவையாக இருக்கும். எளிதாக ஒரு தெருவிலிருந்து மற்றொரு தெருவிற்கு சென்றுவிட முடியாதபடி அமைந்திருக்கும். ஆனால் சாக்கடை குடிநீர் வசதிகளும் கிணறுகள், கோயில்கள் போன்றவை அந்தந்த இடங்களில் சிறப்பாக எந்த இடைஞ்சலுமின்றி அமைந்திருக்கின்றன. நாயக்கர், மராட்டிய ஆட்சிகாலங்களில் முக்கிய அமைச்சர்கள், தொழிமுறை சிர்பந்திகள் வாழும் இடங்களாக நெருக்கமாக அமைந்திருந்தன.

காலமாற்றங்கள் நடந்து இப்போது 200 முதல் 400 ஆண்டுகள் பழமையான‌ பின்னும் அந்த பெயர்கள் அப்படியே உள்ளன. சில மாற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த பெயர்களின் வரலாற்றை தோண்டி எடுத்தால் பெரிய நாவலை எழுதுமளவிற்கு விஷயங்கள் கிடைத்தபடி இருக்கின்றன.

தஞ்சாவூர் கவிராயர் எழுதிய தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம் என்ற நூல் ஒரளவிற்கு தஞ்சாவூர் சந்துகளைப் பற்றியும் அதன் சிறு வரலாறுகளைப் பற்றியும் பேசுகிறது. சில பேச்சு வழக்கில் இருப்பவை. சில ஆவணங்களில் கிடைப்பவை.

இதில் 105 சந்துகளின் பெயர்களை பட்டியலிடுகிறார் தஞ்சாவூர்க் கவிராயர். அறுபதிற்கு மேற்பட்ட தெருக்களின் பெயர்களும் அப்போதைய குளங்களின் பெயர்களும், தோட்டம், லாயம் போன்றவற்றின் பெயர்களையும் பட்டியலிட்டிருக்கிறார்.

சந்துமுனையில் சிந்து பாடுவோர் என்ற (அண்ணா சொன்னது) பேச்சுவழக்கு இங்கிருந்து தோன்றியது. முன்பு சில சந்துகளின் முனையில் பந்தல் போட்டு சிந்து பாடல்களை பாடும் வரலாறு உண்டு. இப்படி பல விஷயங்களின் சுவாரஸ்யத்தை அறிய இந்த நூல் பயன்படலாம். அத்தோடு வேறு சில நூல்களையும் வாசிக்க இதிலிருந்து தொடங்கலாம். சோழர், நாயக்கர், மராட்டியர் என்று வரலாறு வளரவளர சந்துகளும் வளர்ந்து பெயர்களும் பெற்று செழிப்பாக வளர்ந்திருக்கிறது.

சந்தியா பதிப்பக வெளியீடு

 

No comments: