Saturday, May 24, 2025

யாக்கை ‍பற்றி - சுமி ஹரி

மனித மனம் விசித்திரமானது. எப்போது, எதற்காக,எதை யோசிக்கும் என்று யாராலும் முன்கூட்டியே தீர்மானித்து விட முடியாது.சூழ்நிலை தான் பெரும்பாலும் அப்படியான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றாலும், சில சமயம் மனதுக்குள் தோன்றும் சலிப்பு, வெற்றிடம் என ஏதோ ஒன்று வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைத்து விடும்.
 

கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஒரு வெற்றிடம் ஏற்படும்போது, தன்னை அந்த குடும்ப அமைப்பில் இருந்து விலக்கிக் கொள்ள நினைக்கிறான் சுப்ரமணியன். அவன் மனம் எப்போதும் அலை பாய்ந்து கொண்டேயிருக்கிறது.இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கு சிறு வயதிலிருந்து அவன் நேரிட்ட அனுபவங்கள், அதனால் வந்த பாதிப்பால் ஆன்மீகம்,தனக்கான குரு அதில் கிடைக்கும் அமைதி என தன் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறான் சுப்பிரமணியன். 


இந்த நாவல் சுப்பிரமணியம், அவன் மனைவி பத்மலக்ஷ்மி என இருவரையும் அறிமுகப்படுத்தி அவர்கள் மூலம் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வாக நகர்ந்து கொண்டேயிருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் தொடங்கிய நட்பு காதலாக மலர்கிறது.பத்மலக்ஷ்மி அழகி,அவளுடன்தான் வாழ்க்கை,அவள் பரிசாகத் தந்த ஒரு பேனாவைக் கூட பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்,இதுபோன்ற எண்ணங்கள் அவனுள்  தோன்றுகிறது.ஆனால் அதிலும் சிறு சிறு சந்தேகங்கள் அவன் மனதை கேள்வியால் அரித்துக் கொண்டே இருக்கின்றன.இவள் அவ்வளவு பெரிய அழகியா என்ன...சின்னச் சின்ன பரிசுகளைக் கொடுத்து என்னை அடிமைப்படுத்துகிறாளா, தவறு செய்துவிட்டோமா என பல சஞ்சலங்கள் அவனுக்கு. 


அனைத்தையும் மீறி திருமணம் நடக்கிறது. தன்னையும் வீட்டையும் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட பத்மாவை அவனால் விலக்கி நிறுத்தவே முடிவதில்லை. வீடும் அவன் சுற்றுப்புறமும் அவனுக்கு அந்நியமாகவே தோன்றுகிறது. தனக்கெனத் தனிமை என்பது இல்லாமல் நாட்கள் செல்வதை அவனால் ஜீரணத்திக் கொள்ளவும் முடிவதில்லை. அழகிய மனைவி,திருப்தியான தாம்பத்தியம், உயர்ந்த பதவி,கை நிறைய சம்பளம் இவை எதுவுமே அவனை மகிழ்ச்சிப் படுத்தாமல், இனம் புரியாத ஒரு ஏக்கத்திலேயே கழிகிறது அவன் வாழ்க்கை.தன் மனம் எதைத் தேடி அலைகிறது எனத் தெரியாமல் குழப்பத்திலேயே இருக்கிறான்.


இந்த குழப்பத்திற்கான விடை  இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து பல வருடங்களுக்குப் பிறகு அவனுக்குக் கிடைக்கிறது. 


        அடுத்து பத்மாவின் மாற்றம். திருமணத்திற்கு முன்பு வேலைக்கு சென்று கொண்டிருந்தவள், கொஞ்சம் அதீதமாகவே தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியவள், சுப்ரமணியத்தின் காதலியாக இருந்த சமயத்தில், அவனிடம் தன் மனதை முழுமையாக பகிர்ந்து கொண்டவள், திருமணத்திற்குப் பிறகு அடியோடு மாறிவிடுகிறாள். அவளின் கவனம் சொந்த வீடு,அதன் வளமை, அக்கம் பக்கத்தினருடனான நட்பு, குழந்தைகள் பிறந்த பிறகு கவனம் முழுவதும் அவர்கள் மீது. போதாததற்கு தன் தோற்றம் பற்றி சற்றும் அக்கறை இல்லாதது. அனைத்திற்கும் மேலாக குழந்தைகள் சுப்பிரமணியத்துடன் விளையாடுவது, அன்புடன் இருப்பது பிடிக்காமல் கோபப்படுவது.அவன் என்ன சொன்னாலும் பதிலுக்கு கத்துவது, கணவனின் மனதைப் பற்றி யோசிக்காத அந்த அலட்சியமே அவர்களின் பிரிவுக்கு வித்திடுகிறது. தன் கணவன் தன்னிடம் இருந்து எதையோ மறைக்கிறான் என்ற எண்ணம் அவளைக் கொஞ்சம் கலங்க வைக்கிறதுதான்.


முக்கியமாக எப்போதும் அவன் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பது குறிப்பாக ஆன்மீகம், சித்தர்கள் பற்றிய புத்தகங்கள்.இவை அவளுக்கு ஒரு பதிலை சொல்லத் தொடங்கும் போது காலம் கடந்து விடுகிறது. ஒரு கடிதம் எழுதியதோடு தன் கடமை முடிந்தது என புறப்பட்டு விடுகிறான் சுப்பிரமணியன்.அவனின் ஆன்மீகத் தேடல் எங்கெல்லாமோ சுற்றியலைந்து காசி வரை நீள்கிறது. குடும்ப வாழ்க்கையின்போது எப்படி இருந்தானோ அதே சஞ்சலம் அவனை இப்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. துறவறம் ஒருவனுக்கு அத்தனை எளிதானதா என்பதையும், எப்படியான கடும் சூழல்களை அவன் சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதையும் பல கதாபாத்திரங்கள் வழியாக விளக்கியிருப்பார் ஆசிரியர். 


அடுத்து ரேஷ்மி. கருணாகரன் என்ற தன் பிறப்பிலிருந்து, தன்னை உணர்ந்து கொண்டு ரேஷ்மியாக மாறிய திருநங்கை.அவர்களின் வாழ்க்கையில் கொடுமை நிறைந்த பக்கங்களையும் சில அத்தியாயங்கள் சொல்கின்றன. சுப்ரமணியன் ரேஷ்மி இருவருக்கும் இடையேயான அறிமுகமும், ஈர்ப்பும் அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் சில சலசலப்பை உண்டாக்குகிறது. பத்மாவின் உடல்நிலைக்காகத் திரும்ப வரும் சுப்பிரமணியம், உறவுகளோடு இருப்பதில் அமைதி இல்லாமல்,இடையிடையே எழும் ஆன்மீகத் தேடலால்,அந்தக் குடும்ப அமைப்பில் இருந்து மறுபடியும் விலகி ஓடவே முயற்சிக்கிறான்.
 

ஒருவன் துறவறம் ஏற்க முடிவு செய்துவிட்டு,அனைத்தையும் விட்டு விலக முயற்சிக்கும்போது ஏற்படும் மனப் போராட்டம், சந்திக்கும் சிக்கல்கள்,அவமானம் என அனைத்தையும் சுப்பிரமணியம் என்ற கதாபாத்திரத்தின் வழியாக நாவல் விளக்குகிறது.அவனின் அந்த தடுமாற்றம் காரணமாக அவனைச் சுற்றியுள்ளவர்கள் நேரிடும் வேதனைகளையும் சொல்கிறது.கூடவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்லும் ஒரு ஆன்மீகப் பயணம் எப்படி இருக்கும் என்பதையும் காட்டுகிறது. எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துக் கொள்ள மனம் தவிக்கும்போதும்,
 

ஏதோ ஒன்றை விடுவித்துக் கொள்ள முடியாமல் அலைபாயும் சுப்பிரமணியம் மனதைக் கவர்ந்த கதாபாத்திரமாகிவிடுகிறார்.
 

இந்த புத்தகம் என் பிறந்தநாளுக்காக Rhea Roshan அனுப்பியது.அன்பும் நன்றியும் ரியாமா.

 (வாசிப்பை நேசிப்போம் முகநூல் பதிவில் சுமி ஹரி அவர்கள் எழுதியது)

No comments: