Saturday, June 28, 2025

யாக்கை நாவல் விமர்சனம் - தேஜூ சிவன்

 While readerly texts can derive pleasure, writerly texts can derive bliss. The difference between a readerly text and a writerly text is the reader’s position within that text. இது The death of the author போன்ற கட்டுரைகளை எழுதிய ரோலண்ட் பார்த்ஸ் என்ற பிரெஞ்ச் இலக்கிய கோட்பாளர் தனது The Pleasure of the Text என்ற சிறுநூலில்  கூறியுள்ளது. அவரது கோட்பாட்டின்படி  கே.ஜே.அசோக்குமார் எழுதிய யாக்கை நாவலை writerly text என மிகச்சுலபமாக அடையாளப்படுத்தி விடலாம்.

வாழ்க்கையிலிருந்து புனைவுகளக ஆக்கும் முயற்சிகள் ஆற்றுநீரிலிருந்து மணலைச் சலித்து அள்ளும் செய்கை போல இருந்தது  என இந்த நாவலின் ஆசிரியர் தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இதுவே நம் இனிய வாசிப்புக்கான திறவுகோலாய் இருந்தது.

பத்மாவதி, பத்மினி, காமாட்சி, வடிவு என்ற நான்கு சகோதரிகளின் இறப்புக்குப் பின் ஐந்தாவதாகப் பிறந்து  முதல் பெண்ணின் பெயர் சூட்டப்பட்ட பத்மலெட்சுமியில்  ஆரம்பித்து பத்மலெட்சுமியில் முடியும் இந்த நாவலின்  தடம் உள்ளுணர்வால் அறியப்படவேண்டியதாகிறது.  ஓர் இலக்கிய Google map ஐ யோ அல்லது ஒரு Literary Blueprint ஐ யோ வைத்துக் கொண்டு இதனை பின்தொடர முடியாது. 

பிறக்கும் போதே நமக்கு அருளப்பட்ட இந்த உடம்பை சாகும் வரைக்கும்  வைத்துக் கொண்டு நாம் துய்க்கும் இன்பங்களையும், நம்மைத் தீய்க்கும் அல்லல்களையும் அதனதன் மேன்மைகளுடனும், கீழ்மைகளுடனும் ஒரு லகுவான நடையில் சொல்கிறார் கே.ஜே.அசோக்குமார்.

மனதின் தொணதொணப்பு, தொந்தரவால்  உடலின் சமன்நிலை குலையும் பத்மா ஒரு விளிம்பு. உடலின் தொணதொணப்பு , தொந்தரவால் மனதின் சமன்நிலை குலையும் தனக்குதானே ரேஷ்மி என பெயர் சூட்டிகொண்ட கருணாகரன். 

கருணாகரனின் வாழ்க்கை கண்களில் விரியும் ஒரு பாலைவனப் பெரும் பரப்பில் அவன் மட்டுமே இருக்கும் சித்திரம். அவனுடன் வாழும் அப்பா,அம்மா,அண்ணன், அக்கா என குடும்பத்தினர்கள் அங்கு யாருமில்லை. அவனுக்கு இருப்பதெல்லாம் ஆண் உடம்பும், பெண்  உணர்வும் மட்டுமே.

பத்மா, ரேஷ்மி என்ற இரு விளிம்புகளையும் தொட்டுத் தொட்டுச் செல்லும் ஓர் உயிர் சுப்ரமணியன். பத்மாவால் சுப்ரம்..மணியன் என்றும் அப்பாவால் சுப்பு என்றும் மற்றவர்களால் சுப்ரமணீ என்வும் விளிக்கப்படும் சுப்ரமணியன். 

இந்த நாவல் சுப்ரமணியனின் கதையா அல்லது பத்மாவின் கதையா அல்லது ரேஷ்மியின் கதையா என்று யோசித்தால்  சுப்ரமணியனின் அப்பா, மூத்த மகள் வானதிசாமியப்பா, பிகாஸ் பைய்யா, விதானந்தா சுவாமி என் சுப்ரமணியனின் வாழ்வு முழுவதும் பின் தொடரும் நிழலின் குரல்களாய் ஒலிக்கும்  இவர்களின் கதையும் தான்.

பெண்ணை வெற்றிக்கொண்டவனால் மட்டுமே மற்ற ஆண்களையும் வெற்றிக்கொள்ளமுடிகிறது.  திருமணம் என்பது தூரத்து நகரம் போல அவனுக்கு இருந்தது. அதை அடையவேண்டி மேற்கொள்ளளும் பயணம் தன் வாழ்வின் ஒருபகுதியைத் தின்றுவிடும் என நினைத்திருந்தான். சிறு புல்லின் பெரு அசைவு போல பொருளற்று இருந்தது காமம் அவனுக்கு. அவன் நினைத்த பெருவெடிப்பு எதுவும் நிகழ்வதில்லை என்பதை ஒவ்வொரு சமயமும் உணர்ந்தபடி இருந்தான்.

பெண் திருமணத்திற்குப் பின் அடையும் சுதந்திரத்தை ஆண் இழந்து விடுகிறான். “டேய் உன் ஃபஸ்ட் நைட்டுக்கு நான் தான் மொதல்ல போவேன்” என்று சொல்லிக்கொண்ட நண்பர்கள், திருமணத்திற்குப் பிறகு சின்னத் தலையசைவுகளுடன் விலகிச் சென்றுவிடுகிறார்கள்.

உண்மையில் வீடு பெண்களுக்கானது மட்டுமே. அவர்கள் இல்லங்களை முழுவதும் தங்கள் வசமாக்கிக் கொண்டதும் ஆண்களுக்கு ஒரு சிறு இடம் மட்டும் அமைகிறது. அதுவும் அவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே கொடுக்க முடியும். மகனை, கணவனை, அப்பாவை வெளியேற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். பெண் உலகத்தில் பெண்களால் மட்டுமே இருக்க முடிகிறது.

உலகம் சிறுகுவளையின் அடியில் இருக்கிறது. அங்கு நீரில் மிதந்தபடி இருக்கிறது. சிறுகுழந்தையின் கைமட்டுமே அதில் நுழையும். பெரியவர்களுக்கு கை வருவதில்ல. அதை குழந்தையின் விளையாட்டுப் பொருள் மட்டுமே என்று நினைத்து குழந்தையிடமே கொடுத்து விடுகிறான்.

இந்த உலகம் செயல்படுபவர்களுக்கானது. லட்சியத்துடன் இருக்கும் மனிதர்களுக்கு இந்த உலகம் கனிந்த பழமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு கசப்பு நிறைந்த காய் மட்டுமே.

உலகின் முக்கிய விஷயங்களெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாமல் போகும் மாயத்தை நினைத்து வருந்தியிருக்கிறேன். எப்படி மனிதர்கள் வெறும் ஜடங்களாக இருந்து விட்டு மறைகிறார்கள் என்று நான் நினைக்காத நாளில்லை .நான் என் ஆன்மாவின் குரலைக் கேட்க வேண்டியிருக்கிறது. 

என் பயணத்தைத் தொடர்கிறேன்

இதுவே சுப்ரமணியன்.

கோழியக்கொல்லக்கூடாதுன்னு அதக்கட்டிப்பிடிச்சிட்டு ஒரே அழுகை. தனியே சிலவேளைகளில் தட்டாமாலை குடை சுற்றி அமரும் போது பெரிய பூவில் அமர்ந்த சரஸ்வதி நினைவிற்கு வரும். புலியின் அழகிய நடை போல் அவள் அவனை நெருங்கி வந்தாள்.  டேபிளின் முனையை அவள் விரல்கள் சின்னதாக மீட்டியபடி இருக்கும்.

சிறுமுத்துக்களைச் சேகரிக்கும் சிறுமியின் அகம்போல அப்போது இருந்ததாகத் தோன்றியது. அவள் தந்தையின் வடிவம் அவன். தன் மகளுக்கு எதைக் கொடுக்க வேண்டும், எதை விலக்க வேண்டும் என்கிற அறிவுடன் இருப்பது போலத்தான் அவனும் இருக்கிறான். 

இரண்டாவது மகள் பிறந்ததும் பத்மாவுக்கு தன் உடல் பற்றிய பிரக்ஞை இல்லாமல் ஆகிவிட்டது. எப்போதும் நைட்டியிலும் தூக்கிக்கட்டிய முடியுடனும், உலா வந்தாள். அவள் சட்டென்று வயதடைந்து கிழவியாகிவிட்டாள் என தோன்றியது.

பெரிய பெண்கள் கொள்ளும் அகந்தை தன் மேல் கவிவதை அவள் ரசித்து ஏற்றுக்கொண்டாள் என தோன்றியது. தோற்றுவிடக் கூடாது என்று நினைக்கும் போட்டியாளனின் முயற்சிகளைப் போல இருந்தன அவளது செய்கைகள்.

இந்த மாதிரி இலக்கியத்துல படிச்சேன்,பலாப்பழத்தைப் பறிச்சேன்னு ஏதாவது சொல்லிக்கிட்டே இரு. பிராக்டிகலா எதையும் யோசிக்க மாட்டே. புருசன்னு கம்பீரத்தோட இரு. குழந்தைகளுக்கு அப்பான்னு கம்பீரத்தோட இரு. பத்மாவின் சிந்தனைகள் எப்போது தரையில் படரும் கொடி போன்றது. எதையும் பற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கும் தவிப்பு கொண்டது.

இதுவே பத்மா.

சுப்பு நான் அடையாத இந்த உலகின் சொர்க்கங்களையும், பாதாளங்களையும் நீ அடையணும். நீ ஜெயிப்பாய் என்று சொன்ன அப்பா.

ஒரு வயசுக்கு மேல பொம்பளைங்களுக்கு ஆம்பளைங்களைப் பாத்தா புடிக்காது. எதையாவது சொல்லி நத்திக்கிட்டே இருப்பாங்க . சரி தவறு என்ற நிலைக்கு நம்பல வெச்சுக்கிறதே ஒரு வன்முறைதான். அறிதல் எத்தனை சுமைன்னு உனக்குத் தெரியுமா? எளிய மனிதனாக வாழ்வதில் இருக்கும் திருப்தி அறிந்த மனிதனுக்கு இருக்கிறதில்லை. சாதாரண மனிதனாக வாழ்வதில் இருக்கும் சங்கடம் உன்னைச் செயல்பட வைக்கிறது. துறவு என்பது சுதந்திரம் தான். சுதந்திரமாகச் சிந்திப்பதும், செயல்படுவதுமே துறவு என்று சொன்ன சாமியப்பா. 

தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், பணம், சொத்து, செழிப்பு, கவுரவம், அகங்காரம், இரக்கமின்மை என நான் அடைந்த எதுவும் நிம்மதி அளிக்கவில்லை. எத்தனை பாரங்களைத் தத்துவங்களாகவும், கொள்கைகளாகவும் மூளையில் ஏற்றிக் கொள்கிறோம். அனைத்தையும் இழக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு மற்ற பாரங்களை ஏற்றிக் கொள்கிறோம் என்று சொன்ன பிகாஸ் பைய்யா.

உனக்குத் தெரியுமா நீ ஒரு சிறு முதலையின் திறந்த வாய் முன்பு நிற்பவன் என்றுஉனக்குத் தெரியுமா நீ ஒரு தவளையின் நாவில் பனித்துளியாக நிற்பவன் என்று.நீ  அதைத் தொடர்வதும் உன்னை அது பின் தொடர்வதும் உன் ஜென்மத்து மிகப்பெரிய ஊழ் என்று சொன்ன விதானந்தாஜி.

எதுக்குப்பா இந்த வாழ்க்கை. சும்மா உண்டு ,உறங்கி,கல்யாணம் கட்டி, பிள்ளை பெத்து, செத்து போறதுக்கா. என்று கேட்ட மூத்த மகள் வானதி

யாக்கையை வாசிக்கும் ஒருவர்  இது ஓர் ஆண் மைய்ய நாவலெனவும், இன்னொருவர் பெண் மைய்ய நாவலெனவும், மற்றொருவர் ஓர் ஆன்மிக நாவலெனவும்பிறிதொருவர் இந்த மூன்றையும்  blend செய்து சொல்லப்பட்ட பிறிதொரு வகை நாவலெனவும் அடையாளமிடுவதற்கான சின்னஞ்சிறு ரகசியமலர்கள் வாசிப்பின் வழியெங்கும்  பூத்துக்கிடக்கின்றன.

ஒரு நாவலின் கட்டமைப்பு, பேசுபொருள், கதை மாந்தர்கள் , அழகியல் வாழ்க்கையோடான நெருக்கம் அல்லது நெருக்கமின்மை போன்ற இவைகளே அந்த நாவலின் தரத்திற்கான weighing methodology எனக் கொண்டால் யாக்கை ஒரு சிறந்த நாவலெனக் கொள்ளலாம். 

மட்டுமல்லாமல் ஒரு நாவலை செவ்வியல் நாவல் என கண்டறிய ஒரு கால இடைவெளி தேவைப்படுகிறது. யாக்கை நிச்சயமாக ஒரு செவ்வியல்தன்மை கொண்ட நாவலென வகைப்படுத்துவதற்குரிய அத்தனை சாத்தியங்களையும் இந்நாவல் நமக்கு அளிக்கிறது.  

இது காலம் செய்ய வேண்டிய பணி.

உடல்கூட ஒரு வீடுதான். மனித பிறவி கிடைப்பது மிக அரிதானது. ஆனால் அதைத்தான் கடைசியில் விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது. பாதை நீண்டுக்கொண்டே சென்றது. 

அவன் திரும்பிப் பார்க்கவில்லை.

இளம் சூரிய ஓளியில் உடைகளைக் களைந்து அவள் நினற கோலம்.  கலசங்கள் போன்று முலைகள், எழுந்து நின்றபோதும் அதிராத முலைகள். அதன் முனைகள் அத்திப்பழம் போல் சிவந்திருந்தன. மெல்லிய சிறுகோடாக அல்குல். அக்கோடினூடே இரு சரிபாதியாகப் பிரியும் உடல். பிருஷ்டம் வனத்தின் செழுமையைக் கொண்டிருந்தது. எதிர்பாராததன்மையின் செழுமை. வரப் போகும் உயிர்களைத் தாங்கும் செழுமை.

இந்த யதார்த்தமும், அழகியலும் ஒரு செவ்வியல் தன்மையை நமக்குத் தருகிறது. என்று வியந்து போற்றுதலின் மூலம்  இந்த நாவலுக்கு அதன் வாசிப்பு இனிமைக்காக வாசகனாக நான் செய்யும் நியாயமென உணர்கிறேன். 

நன்றி: அகழ் இதழ்

No comments: