Friday, May 9, 2025

குதிரைமரம் வாசிப்பனுபவம் - ஆதவன் சரவணபவன்

எழுத்தாளரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இந்தக் குதிரைமரம்.

பத்துக் கதைகள் கொண்ட தொகுப்பு. வாசக இடைவெளிகளுடன் அநேகமான கதைகள் இருப்பதால் ஆழ்ந்த வாசிப்பைக் கோருகின்றன. ஒன்றுக்கு இரண்டு தடவைகள் வாசிக்கும் போதே அவற்றின் உள்ளீடை அணுகமுடிகின்றது.

மனநலமருத்துவருக்கும் அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிக்கும் இடையிலான பூனை எலி விளையாட்டாக இருந்தது "தற்கொலை முகம்" என்ற கதை. உளவியல் அடிப்படையில் நோயாளியை அணுகும் மருத்துவர் எவ்வாறான மனச்சஞ்சலங்களுக்கு ஆளாகி தன்னிலை இழக்கும் தருணம் எதிர்பாராதது. தூக்கமின்மையின் காரணத்தை சுய மதிப்பீடு செய்யும் போது மனதின் கசப்பான பகுதியை உணர்வது என்ற முடிச்சில் கதை உச்சம் பெறுகிறது.  



பழையனவற்றை நினைவுகளில் இருந்து அகற்ற முடியாத தவிப்பும் சோகமும் சிலகதைகளில் வருகின்றன. அவை நிரந்தரமற்ற குறுகியகால அபத்தங்கள் என்று அறைந்து சொல்ல முயல்கின்றன. "கருடனின் கைகள்" மற்றும் "ஓசைகள்" இரண்டும் இப்படியான வகைமையில் அமைந்த கதைகள். கருடனின் கைகளில் வரும் அம்மாவும் ஓசைகளில் வரும் சுந்தரலிங்கமும் ஒரே வகையான மனநிலையிற்கு இறுதியில் வருவதாக எனது புரிதல். மகளின் பார்வையில் தகப்பன் இறந்து ஒரு வருடத்துக்குள்ளே அம்மாவின் மாற்றங்கள் அசூசையையும் தொந்தரவையும் கொடுப்பதாக வருகிறது. அம்மாவின் புதிய வெளிப்பாடு அவள் மீதான மகளின் பாசத்தையும் மதிப்பையும் மீள் பரிசீலனை செய்யத்தூண்டுகிறது. நவீனத்தை நோக்கிய வாழ்க்கையில் பயணிக்கும் மகளால் ஏன் அம்மாவின் விருப்பத்தையும் சந்தோஷத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற கேள்வி கதையின் மையம்.

மனைவியை இழந்த நண்பனின் குதூகலிப்பை ஏற்றுக் கொள்ள முடியாத சுந்தராலிங்கம் தனது மனைவியின் இழப்பில் துயருறுகிறார். கூடப்படித்த நண்பர்களின் ஒன்றுகூடலில் சிறு சலனம் ஏற்படுகிறது.  பள்ளியில் ஒன்றாகப் படித்த விஜயலட்சுமியைக் கண்டு பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. பாலிய கால நினைவுகளும் அவளின் துரு துரு பேச்சும் புதிய திறப்பினை அவரின் மனதில் ஏற்படுத்துகிறது.      

குதிரைமரம் நவீனமயமாதலின் கடைசிக் குமுறலாக வெளிவந்திருக்கும்  குறுநாவல். ஒரு காலத்தில் தொழில் என்பது கலையாகவும் ஆன்மாவின் உன்னதமான வெளிப்பாடாகவும் இருந்தது. அதற்காக தம்மை ஒப்புக் கொடுத்த மனிதர்கள் பொருளாதாரத்தை இரண்டாம் நிலையில் வைத்திருந்தனர். வறுமையிலும் செம்மையாக வாழ்வதை தந்தையின் மூலம் கற்றுக்கொண்ட மகனின் துயர் தோய்ந்த காலத்தைக் காட்டும் புனைவு. “படைக்கிற திறமை இருக்கிற வரைக்கும் வேலை செய்யணும்னு நினைக்கிறேன். அது போறதுதான் என் சாவு. என் உயிர் போறது எனக்கு சாவு இல்ல” என்ற தந்தையின் வார்த்தைகள் அவனுள் பதிந்திருந்தாலும் சூழலின் கட்டாயம் தனக்கான படைப்பினை விட்டுத் துரத்துவதை அருவருப்பாக முகம் கொடுக்கும் நாயகனின் முடிவுகள் அவனை தோல்வியடைந்த சமூகத்தின் முகமாக நிலைநிறுத்துகிறது. நவீனமும் நகரமயமாக்கலும் கலைகளின் தோல்வியும் ஆன்மாவின் தவிப்புமாக எமக்கு உணர்த்துவது இந்த குதிரைமரம். அண்மையில் வாசித்த இன்னொரு சிறுகதையான செந்தில் ஜெகநாதனின் அநாகதநாதம் கதையின் மையச் சரடுக்கும் இந்தக் கதைக்கும் பல ஒற்றுமைகளைக் காண்கிறேன்.

 “பாம்பு வேட்டை” சின்ன மீனை விட்டு பெரிய மீனை பிடிப்பது போல குறியீடாக பாம்புக் கதையின் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவனை ஏமாற்றுவதற்கு அவனின் ஆசையைத் தூண்டவேண்டும் என்ற சினிமா வசனமொன்று சட்டென்று நினைவில் வந்து போனது. ஆனால் அதையும் தாண்டிய வேறொன்று அது மதிப்பு, மரியாதை, அல்லது விசுவாசம் எதுவாகவும் இருக்கலாம். கிராமத்தில் இருந்து சென்னைக்கு விடுமுறைக்கு  வேலைக்கு வரும் பாஸ்கர். தட்டச்சு செய்து கொடுக்கும் கடை முதலாளி சிங்காரத்திடம் வேலைக்குச் சேர்ந்து கொள்கிறான். மெதலாளிக்கு நெருக்கமாகியவனுக்கு திரும்பிப் போகும் எண்ணமில்லாமல் வேலையிலே கட்டுண்டு கிடப்பதற்கான காரணம் வெளிப்படையாக சொல்லாமல் முதலாளியின் மேல் ஏற்படும் மரியாதையும் நம்பிக்கையும் அபரிமிதமாக கூடுவதால் உண்டாகிறது என்று கதையோட்டத்தினூடு காட்டுகிறார் ஆசிரியர். சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்து தொழில் பற்றுறுதி ஏற்பட்டுவிடுகிறது. கடைசியில் நன்றிக்கடன் என்ற எல்லையில் வந்து நிற்கிறது.

“அலர்” சூழலும் சமூகமும் ஒருவனின் எண்ணங்களில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காட்ட முற்படும் கதை. ஒரு மரணம் எவ்வாறு நடந்தது என்பதை ஊராரால் வெவ்வேறு காரணங்கள், கற்பிதங்கள் செய்யப்படுகின்றன. பொறுப்பற்ற விதத்தில் நினைத்தவாறு மனிதர்கள் வதந்திகளைக் கிளப்பிவிடுவதால் குழப்பமடையும் கதை சொல்லி ஒரு கட்டத்தில் தானும் அந்த இழி மனநிலைக்குத் தள்ளப்படுகிறான். புதிய கதையை அவிழ்த்துவிடுகிறான். இதில் ஆன்டன் செகாவின் சில கதைகளின் தாக்கம் தெரிகிறது.   

வாழ்க்கையென்பது தனியாக இருப்பதல்ல. அதன் முழுமை மற்றவர்களுடன் பழகுவது. ஒருவருடன் பழகுவதற்கு அடிப்படையே அன்பு. “புரியாதவர்கள்” கதை ஒரு பெண்ணின் எதிர்மறையான சுபாவங்களை காட்டுவது. மூன்றாவது மனிதரின் பிரியத்தையும் கரிசனையையும் வெறுப்பது என்று செல்லும் ஓட்டத்தின் இறுதியில் இவை தனக்கானவையில்லை என்று உணரும் தருணம். எதிரிகள் இலகுவாக உருவாகிவிடுவார்கள். நல்ல பெயரையும் நண்பர்களையும் சம்பாதிப்பது இலகுவான காரியமல்ல. அப்படி நிகழ்ந்தால் அவளின் பாட்டிக்கு அமைந்தது போல அது இறுதிவரை நிலைத்திருக்கும்.

 குழப்படிகார சிறுவனின் அகத்தையும் வலியையும் சொல்கிறது "மண்புழுவின் ஐந்து ஜோடி இதயங்கள்". பேச்சு வாக்கில் சொல்லும் இதயமற்ற செயல், இதயமற்ற மனிதர் போன்ற உரிச்சொற்கள் இதயத்தை நற்குணத்தின் உருவமாக காட்டுவது. மனிதர்கள் எல்லோருமே இதயம் உள்ளவர்களே. அது வெளிப்படும் விதத்தில் அதன் இன்மையை உணர்கிறான்.

கணக்கு என்ற கதை பெரியளவில் தாக்கத்தைக் கொடுக்கவில்லை. இகழ்ச்சிகளுக்கு ஆளாகும் பொது ஏற்படும் வைராக்கியம் எடுக்கும் முடிவுகளில் வெளிப்படுவதை சொல்கிறது.

காத்திரமான தொகுப்பாக சிறந்த வாசிப்பனுபவத்தைக் கொடுத்த கதைகள்.    

No comments: