Saturday, April 2, 2022

ஆட்டிசம் என்னும் புதிர்

 

ஆட்சிசம் என்பது நோயல்ல, ஒரு குறைபாடு. வேறுவகையில் எப்படி சொன்னாலும் புரிந்துக் கொள்வது கடினம். மனங்களின் அரசன் மனிதன். மனதின் இண்டு இடுக்குகளில் இருக்கும் புரிதல்களை பல்வேறு கருவிகள் கொண்டு ஆராய்ந்தாலும் விடுபடல் இருக்கவேச் செய்கிறது. மனதை அறியமுடியாத ஒரு குறைபாட்டை எந்த பெயர்களில் அழைக்க விழைந்தாலும் அதற்கு ஒரு எல்லை வேண்டியிருக்கிறது. எல்லையற்ற வகையில் பலநூறு பிரிவுகளில் இருக்கும் ஒரு குறைபாட் டை ஆட்சிசம் ஸ்பெக்ரம் டிஸ்சாடர் (ASD) என்று பொதுமையில் அழைக்க வேண்டியிருக்கிறது.

ஆட்டிசம் ஏற்பட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. சுற்றுச் சூழல் பாதிப்பு, ப்ளாஸ்டிக் பயன்பாடு, கர்ப்பகால நோய்மை என்று. காரணங்கள் பல சொல்லப்பட்டாலும் அதன் சிக்கல்களை தீர்க்க முடியாதவையாக இருக்கின்றன. ஒன்னரை வயதில் கண்டுபிடிக்க முடியும் இக்குறைபாடு அதிகமும் ஆண் பிள்ளைகளைதாம் பாதிக்கிறது. கண் தொடர்பற்றிருந்தல், அம்மாவை அடையாளம்கண்டுக் கொள்ளாமை, ஒரே வார்த்தையை திரும்ப சொல்லுதல், கைகளை தொடர்ந்து ஆட்டுதல் போன்ற அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். பாதிப்பு குழந்தைக்கு குழந்தை மாறுபடுகிறது.

பொதுவெளியில் குறைபாடுடைய குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்திருப்பது நாளடைவில் குறைந்துவிடும். உறவுகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிடுவதும், கணவன் மனைவிக்கிடையே புரிதல் குறைந்துவிடுவதுமாக நாட்கள் நகரும். பிள்ளை வளர்வது விஸ்வரூபமாக பிரம்மாண்ட பூதாகர பிரச்சனைகளை நாளுக்கு நாள் சந்திக்க வேண்டியிருக்கும். எங்கோ எவருக்கோ நிகழும் அசம்பாவிதம் தனக்கு நிகழ்துவிட்டதாகத்தான் நினைக்கத்தழைப்படுவார்கள்.

பள்ளியில் சேர்ப்பது, பிற பிள்ளைகளுடன் பழகுதல், சமூக இணக்கம் பேணுதல் எல்லாமே ஒவ்வொரு நாளுக்கான பிரச்சனைகளின் தொடர்ச்சிதான் காண்பார்கள். ஒற்றை பெற்றோராக அம்மா மட்டும் ஆட்டிசம் பிள்ளையை வளர்ப்பது மயிரைக் கொண்டு மலையை இழுப்பதுதான். போன ஜென்மத்து பாவம் முதல் இந்த ஜென்மத்து பாவம் வரை எல்லாம் அலசி ஆராய்ந்து தீர்வுகளை தேடி மனமும் சலித்து போய்விடும். ஆட்டிசம் என்பது புரியாத புதிர் தான். தீர்வு காணமுடியாத, இலக்கில்லாத நீண்ட பயணத்தில் வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலிருந்தும் கிடைக்கும் சோர்வுகளை தாங்கிச் செல்லவேண்டிய பயணம்.

ஆட்டிசத்தின் மீதான நம்பிக்கை என்பது பிள்ளையின் சின்னஞ்சிறு மாற்றங்கள்தாம். சில பிள்ளைகள் வளர்ந்ததும் திருமணம்வரை செல்பவர்கள் உண்டு. ஆனால் இனி வரும் காலங்களில் ஆட்டிச மனிதர்களின் தனிக் கூட்டமாக வாழும் நிலை வரலாம். இப்போது வளர்ந்த ஆட்டிச பெரியவர்கள் மற்றவர்களின் உதவியுடன், அடல்ட் ஹோம் மாதிரி மூடிய சமூக அமைப்புடன் வாழும் இடத்திற்கு வந்திருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத சமூகங்கள் பெரிய பின்னடைவை சந்திக்ககூடும். ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வற்ற குடும்பங்கள் நிலை இன்று தலைகீழ் மாற்றத்தை அடைந்துவிட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆட்டிச குடும்பமும் சமூகத்திலிருந்து விலகி ஒரு மூடிய சமூக அமைப்பில்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

(உலகளவில் ஏப்ரல் 2, ஆட்டிசம் நாளாக கொண்டாடப்படுகிறது.)

No comments: