Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

Tuesday, April 28, 2020

ஜெயமோகனின் பத்துலட்சம் காலடிகள்


சிறுசிறு கீற்று ஒளிகளின் வழியே முன்பு கண்ட இருள்சுரங்கத்தை நினைவிலிருந்து எடுத்துச் சொல்வது போன்றது பத்துலட்சம் காலடிகள் சிறுகதை அல்லது குறுநாவல். அப்படிதான் நினைக்கிறேன். ஓளச்சப்பன் அதுவும் குடியில் இருக்கும்போது தன் நினைவுகளில் இருந்து மீட்டு பலமுறை அசைப்போட்ட அல்லது ரகசியமாக சொன்ன ஒன்றை சொல்வது தான் கதை சாரம். அந்த கூட்டதில் கேட்டும் அரைதமிழ் எழுத்தாளன் போல நாமும் ஆர்வமாக இருக்கிறோம். ஓளசேப்பன் சொல்வது கேரளத்தில் இருந்த மாப்பிள்ளை முஸ்லீங்களை பற்றியது. அவர்களின் வாழ்க்கை முறை, கடல்கடந்துவந்த பயணம், இன்றைய  நிலை. ஆனால் கிருஸ்தவ, பிராமன, நாயர், முஸ்லீம், கம்யூனிஸ்ட் என்று எல்லோரை கிண்டலடிக்கிறார்கள்.

Monday, April 13, 2020

கொரோனா காலத்தில் எப்படி வாசிக்கலாம்?



பகத்சிங் தூக்கு மேடைக்கு செல்வதற்கு முன்புவரை வாசித்துக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுவதுண்டு. வாசிப்பினால் ஒருவர் அடையும் உணர்ச்சிகள் வெளிவுலகில் இருக்கும் உணர்ச்சிகளை விட உன்னதமானவை என்று சொல்லாமல் சொல்லும் சம்பவம் அது. புறஉலக இன்பதுன்பங்களை கடக்க வாசிப்பு எவ்வளவு பயன்பட்டாலும் புறஉலகை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் அதை சிறிது நேரம் மறக்கலாம் அல்லது ஒத்திப்போடலாம். பல சமயங்களில் வாசிப்பிலிருந்து அதற்கான தீர்வுகளும் கிடைக்கலாம். தமிழ் இந்துவில் (12/4/2020) ஜி.குப்புசாமி எழுதியிருக்கும் கரோனா காலத்தில் என்னென்ன வாசிக்கலாம்? என்கிற கட்டுரையிலிருந்து எப்போது அல்லது எப்படி வாசிக்கலாம் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்ததின் விளைவு இது. அதேவேளையில் இது என் அனுபவங்களின் தொகுப்பு மட்டுமே.

Wednesday, October 23, 2019

விடியுமா - கு.ப.ரா. சிறுகதை வாசிப்பனுபவம்


பிரிவை மனித மனம் எப்படி எடுத்துக் கொள்கிறது என பல்வேறு வரையறைகளின் வழியாக பொருள் கொள்ள முடியும். அது தத்துவங்களின் வழி. ஆனால் உண்மை அகத்தின் மொழியை உணர்ந்தவர்கள் மிகக் குறைவு. மனம் ஒரு நேரடி துயர நிகழ்வுக்கு முன்னும் பின்னும் பல்வேறு வகைகளில் கூட்டி தொகுத்து சொற்களாக வைத்துக் கொள்கிறது. சொற்களை முன்னும் பின்னுமாக மாற்றி வேறு பொருள் அதற்கு உண்டா என சோதிக்கிறது. மற்றவர்களுடன் அது குறித்து பேசி தனக்கு தேவையானவைகளை ஒரு கூட்டுக்குள் அடக்கி வைத்துக் கொள்ள விரும்புகிறது.

Thursday, June 29, 2017

வாசிப்பை நேசிக்கும் சமூகம்



எல்லோர் வீட்டிலும் தொலைக்காட்சி இருக்கிறது. தொலைக்காட்சியில் வரும் தொடர்களைப் பற்றி குடும்ப உறுப்பினர்களுக்கிடையே பேசிக் கொள்கிறார்கள். எது சிறந்த தொடர், அதில் வரும் கதாபாத்திரங்கள் எப்படி இயங்குகிறார்கள், அவர்களின் பாத்திர வடிவமைப்பைப் பற்றி, அவர்களின் குணநலன்களைப் பற்றி, தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை தவிர்த்து, நாளில் ஒரு சில நிமிடங்களேனும் பேசிக் கொள்கிறார்கள்.
குடும்ப உறுப்பினர்களிடையே நல்ல ஆரோக்கிய உரையாடலை உருவாக்குகிறது என்றுகூட சொல்லலாம். ஆனால் இதேவகையான உரையாடல்களை ஒரு புத்தகம் குறித்து அல்லது ஒரு முக்கிய புத்தகத்தின் மதிப்பு குறித்தும் நாம் விவாதிக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எந்த அளவிற்கு நாம் தொலைக்காட்சியை குறித்து பேசுகிறோமோ அந்த அளவிற்குகூட வேண்டியதில்லை, புத்தகம் குறித்து ஒரு சின்ன பேச்சுகூட நாம் பேசுவதில்லை. இந்த பேச்சுகள் முன்பு வாரப்பத்திரிக்கைகளில் தொடர்கதைகள் வெளிவந்த காலங்களில் இருந்தன. இப்போது அந்த இடம் தொலைக்காட்சிக்கு சென்றுவிட்டது.

Saturday, February 25, 2017

எது சிறந்த மொழி



இந்தி மொழி எழுதப் பயன்படும் தேவநாகரி லிபியை தான் மராட்டி மொழிக்கு பயன்படுத்துகிறார்கள். மராட்டியில் புதிய எழுத்துக்கள் இரண்டைதவிர இந்தியும் மராட்டியும் பார்க்க ஒன்றுபோலத்தான் இருக்கும். இரு மொழிக்காரர்களும் மற்ற மொழியை எளிதாக படித்துவிடமுடியும். மஹாராஷ்டிராவில் ஐந்தாம் வகுப்புக்குமேல் இந்தியும் இருப்பதால் இந்தியை அறியாதவர் அங்கு யாரும் இருக்க முடியாது. (இந்தி தெரியாதவர் ஐந்தாம் வகுப்பை தாண்டாதவர் என்று பொருள்.) ஆனாலும் இந்தியில் வரும் எல்லா இலக்கியங்களும் நூல்களும் மராட்டியில் உடனே மொழியாக்கம் செய்யப்பட்டுவிடும்


Monday, July 13, 2015

வாசிப்பு எப்படி இருக்க வேண்டும்.

என் நண்பர் ஒருவர் புத்தகம் பற்றி பேச்சு வந்தவுடன் எங்கங்க படிக்க நேரமிருக்குது, அந்தவேல இந்தவேலன்னு எல்லாம் சரியாக இருக்குது என்பார். படிக்கிறதுக்கு நாமதான் நேரத்த உருவாக்னும் என்றால், நீங்க சொல்றது சரிதான் ஆனா நேரமே அமைய மாட்டேங்குதே என்று மீண்டும் அதேயே கூறுவார். பலபேருக்கு படிக்க ஆசை இருக்கிறது மனைவியின் தொல்லை, மக்களின் தொல்லை என்று பல அவர்களுக்கு இடையூராக அமைக்கின்றன. வாசிப்பை சில நாட்கள் மட்டும் தீவிரமாக செய்துவிட்டு மற்ற நாட்க‌ளில் சும்மா இருப்பார்கள். பொதுவாக நிலைத்தன்மை (consistency) இருப்பதில்லை. ஒரு புத்தகத்தை ஆரம்பித்துவிட்டு பாதியில் விட்டுவிட்டு பல நாட்கள் கழித்து மீண்டும் வேறு ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பிப்பது, மீண்டும் சில நாட்களில் வேறு ஒன்றை புதியதாக ஆரம்பிப்பது நடந்து கொண்டே இருக்கும்.
வாசிப்பு ஒரு தொடர் செயல் அதை ஒரு ரிலே ரேசாகத்தான் நினைக்கவேண்டும். ஒன்றை படித்தப்பின் அதன் தொடர்ப்புடைய மற்றொன்றை படிக்க வேண்டியிருக்கும். பின் அதன் தொடர்ச்சி. இப்படி தொடர் சங்கிலியாக செல்லவேண்டியிருக்கும். அப்படி வாசிக்கும்போது தான் வாசிப்பு ஒரு முழுமையை பெறும். மனதிற்குள் தொடர் விவாதத்தில் இருப்பவர்களால் தொடர்ந்து வாசிப்பை விடாமல் நிகழ்த்தமுடியும் என நினைக்கிறேன். அப்படி இல்லாதவர்களும் வெகுஜன வாசிப்பை தொடரமுடியும். அத்தோடு ஒரு வாசிப்பு அடுத்த கட்ட வாசிப்பை தொடங்கிவைக்க வேண்டும். அதாவது அதைவிட தீவிரமான, அதிக நேரத்தை கோருகின்ற ஒரு புத்தகத்தை வாசிக்க வைக்க வேண்டும். அதுவே சிறந்த வாசிப்பு.

Tuesday, March 31, 2015

வாசிப்பு

 வாசிப்பு தினம் பத்துபக்கமாவது இருக்க வேண்டும் என்பார்கள். நூறு பக்கங்கள்கூட தினம் படிப்பவர்கள் உண்டு. ஆனால் எல்லாமே வாசிப்பு ஆகிவிடாது என்று தோன்றுகிறது. ஆழமான வாசிப்பைதான் வாசிப்பு என்று கொள்ளவேண்டும். நான் தினம் தினத்தந்தி படிக்கிறேன், வாரப்பத்திரிக்கைகளைப் படிக்கிறேன், இணையத்தில் பலபக்கங்களை படிக்கிறேன் என்பதெல்லாம் வாசிப்பு என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளமுடியாது.
தினப்படி செய்கையாக, ஊன்றி நம் வரம்பிற்கு அல்லது நம் வரம்பை தொடும் அளவிளாவது படிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒரு நாவல் அல்லது ஒரு அபுனைவாக இருக்கும் ஒரு முழுமையான நூல் ஒன்றை தினம ஒரு பத்து பக்கமாவது வாசித்து அதன் தொடர்ச்சியை அடுத்த நாளும் வாசிப்பதாக இருக்கவேண்டும். சிலர் ஒரு புத்தகத்தை ஒரே அமர்வில் முடித்துவிட்டு பின் பல நாட்கள் வாசிக்காமல் இருப்பதை கவனித்திருக்கிறேன். அதுவும் ஒருவகை வாசிப்பு என்றாலும் அதில் தொடர்ச்சி இல்லாத வகையில் சிறந்த வாசிப்பாக சொல்லமுடியவில்லை. தினமும் கம்பராமாயணத்தை வாசிக்க்கும் ஒரு நண்பரை எனக்கு தெரியும். அதில் சில கவிதைகளை வாசித்துவிட்டு அதன் தொடர்ச்சியை அடுத்த நாள் வாசிப்பார். அந்த தினத்தின் மற்ற நேரங்களில் கம்பராமாயணம் குறித்து எழுதப்பட்டிருக்கும்/விவாதித்திருக்கும் நூல்களை வாசிப்பார்.
ஆனால் வாசிப்பு பொதுவாக எளிதாக அமைவதில்லை. சிறுவயது முதல் வாசிப்பு கொஞ்சமேனும் இருந்தால் அல்லது அதில் ஒரு போதை இருந்தால் மட்டுமே நடுவயதில் வாசிப்பின் அடுத்தடுத்த கட்டத்தை எடுத்துச் செல்லமுடிகிறது. தமிழகத்தில் வாசிப்பு பழக்கம் உடையவர்கள் மிகக்குறைவு. அவர்கள் தொடர்ந்து எதாவது வாசிப்பது என்பது பல இடையூறுகளுக்கு இடையே தான் நிகழ்த்த வேண்டியிருக்கும். இதனால் உனக்கு என்ன பயன்? காசை ஏன் புத்தகம் வாங்கி வீணாக்குகிறாய்? இதை படிப்பதற்கு பாடபுத்தகத்தை படிக்கலாமே? என்று பல்வேறு தாக்குதல்களை ஒருவர் அனுபவிக்க வேண்டியிருக்கும். எல்லா மனங்களிலும் வாசிப்பு என்பது வெட்டிவேலை அல்லது ஒரு கெட்ட காரியம் என்கிற எண்ணம் வளர்ந்தே வருகிறது. இன்றைய தேதியில், புத்தகக் கண்காட்சி, புத்தக விற்பனை எளிதாகி இருக்கும் நிலையிலும் இந்த எண்ணம் தான் உண்டு.

Tuesday, February 3, 2015

எழுத்தாளனாக‌‌ பிரபலமடைய வழிகள்


எழுதுவதனால் மட்டும் எழுத்தாளன் என்று யாரும் ஒத்துக்கொள்வதில்லை. பொதுவெளியில் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் சொல்லிக்கொண்டாலும் யாரும் நின்று ஒரு விநாடி பார்ப்பதுகூட இல்லை. சிலர் பத்திர எழுத்தாளர் என்று நினைத்து அடமான வீட்டை எப்படி மீட்பது என்று கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். வேறுசிலர் ஏதோ அரசாங்க அலுவலகர் என நினைத்து எந்த டிபார்ட்மெண்ட் என்கிறார்கள்.
அந்த‌ எழுத்துக்களுக்குள் என்ன ஓளிந்து இருக்கிறதோ தெரியவில்லை எழுத்தாளன் என்றால் மு.வ. என்ற இரண்டு எழுத்துகளை நினைத்துக் கொள்கிறார்கள் இந்த மக்கள். அதன் விரிவாக்கம் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதுவும் கெட்ட வார்த்தையின் சுருக்கம்போல் இருப்பதால் எழுத்தாளன் யார் என்ற கேள்விக்கு உடனே சொல்லிவிடுகிறார்கள் போலும். திருவள்ளுவன், கம்பன் என்று பழமையான பெயர்கள் தான் எழுத்தாளனாக இருக்கமுடியும் என்று நினைத்திருப்பதன் விளைவால் மு.வ.வையும் டக்கென்று சொல்லிவிடுகிறார்கள் என்று தெரிகிறது. சிலர் பரவாயில்லை கல்கி, புதுமைபித்தன் என்கிறார்கள். கருப்புவெள்ளையில் ஒடுங்கிய முகத்தோடும், குச்சியான உடலோடும் கண்டுவிட்டு அவர்களை எழுத்தாளனாக இருப்பார்கள் என நினைத்துக் கொள்கிறார்கள். வண்ணப் புகைப்படத்துடன் ஒருவரை எழுத்தாளன் என்று காண்பித்தால், மேல‌ன்னம் ஒட்ட அதிர்ச்சியோடு திரும்பி பார்ப்பார்கள், அவர் நடிகராக தான் இருக்கலாம் என்பார்கள்.