என் நண்பர் ஒருவர் புத்தகம் பற்றி பேச்சு வந்தவுடன் எங்கங்க
படிக்க நேரமிருக்குது, அந்தவேல இந்தவேலன்னு எல்லாம் சரியாக
இருக்குது என்பார். படிக்கிறதுக்கு நாமதான் நேரத்த உருவாக்னும் என்றால், நீங்க சொல்றது சரிதான் ஆனா நேரமே அமைய மாட்டேங்குதே என்று மீண்டும்
அதேயே கூறுவார். பலபேருக்கு படிக்க ஆசை இருக்கிறது மனைவியின் தொல்லை, மக்களின் தொல்லை என்று பல அவர்களுக்கு இடையூராக அமைக்கின்றன. வாசிப்பை
சில நாட்கள் மட்டும் தீவிரமாக செய்துவிட்டு மற்ற நாட்களில் சும்மா இருப்பார்கள். பொதுவாக
நிலைத்தன்மை (consistency) இருப்பதில்லை. ஒரு புத்தகத்தை
ஆரம்பித்துவிட்டு பாதியில் விட்டுவிட்டு பல நாட்கள் கழித்து மீண்டும் வேறு ஒரு புத்தகத்தை
படிக்க ஆரம்பிப்பது, மீண்டும் சில நாட்களில் வேறு ஒன்றை புதியதாக
ஆரம்பிப்பது நடந்து கொண்டே இருக்கும்.
வாசிப்பு ஒரு தொடர் செயல் அதை ஒரு ரிலே ரேசாகத்தான் நினைக்கவேண்டும்.
ஒன்றை படித்தப்பின் அதன் தொடர்ப்புடைய மற்றொன்றை படிக்க வேண்டியிருக்கும். பின் அதன்
தொடர்ச்சி. இப்படி தொடர் சங்கிலியாக செல்லவேண்டியிருக்கும்.
அப்படி வாசிக்கும்போது தான் வாசிப்பு ஒரு முழுமையை பெறும். மனதிற்குள் தொடர் விவாதத்தில் இருப்பவர்களால்
தொடர்ந்து வாசிப்பை விடாமல் நிகழ்த்தமுடியும் என நினைக்கிறேன். அப்படி இல்லாதவர்களும்
வெகுஜன வாசிப்பை தொடரமுடியும். அத்தோடு ஒரு வாசிப்பு அடுத்த கட்ட வாசிப்பை தொடங்கிவைக்க வேண்டும். அதாவது அதைவிட தீவிரமான, அதிக நேரத்தை கோருகின்ற ஒரு புத்தகத்தை
வாசிக்க வைக்க வேண்டும். அதுவே சிறந்த
வாசிப்பு.