Tuesday, February 28, 2017

தஞ்சை கூடலின் முதல் சிறுகதை கூட்டம்



சிறுகதைக்கு கூட்டம் கூட்டுவது என்பது பெரிய சங்கடமான விஷயம். பழந்தமிழ் இலக்கியங்களுக்கு பேசும் பேச்சாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பேசப்படும் படைப்பின் ஆசிரியர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள். அத்தோடு செல்லமாக அவன் இவன் சொல்லலாம். அந்த ஆசிரியரின் படைப்புடன் நெருக்கமாக இருக்கிறோம் என்கிற அர்த்தம் அதில் வந்துவிடுகிறது. .கா. கம்பன் என்ன சொன்னான்?, பாரதி இப்படி பாடினானே?

சிறுகதைக்கு கூட்டம் கூட்டும்போது ஆசிரியர் காலமாகியவர் என்றால் கொஞ்சம் தப்பிக்கலாம். அப்போது சாதிய அடையாளங்கள் அவர் மேல் போடப்பட்டு புகழ்ந்து/இகழ்ந்து பேசுபவர்களை நண்பராக/எதிரியாக பார்க்கப்படும். சமகாலத்து எழுத்தாளர்கள் என்றால் எங்கும் தப்பிக்க முடியாது. ஒவ்வொரு வார்த்தையும் மிக முக்கியம். கொஞ்சம் கிழிறக்கி பேசிவிட்டால் போச்சு. ஊரே பற்றி எறியலாம். அல்லது பெருமழை பெய்யலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

Saturday, February 25, 2017

எது சிறந்த மொழி



இந்தி மொழி எழுதப் பயன்படும் தேவநாகரி லிபியை தான் மராட்டி மொழிக்கு பயன்படுத்துகிறார்கள். மராட்டியில் புதிய எழுத்துக்கள் இரண்டைதவிர இந்தியும் மராட்டியும் பார்க்க ஒன்றுபோலத்தான் இருக்கும். இரு மொழிக்காரர்களும் மற்ற மொழியை எளிதாக படித்துவிடமுடியும். மஹாராஷ்டிராவில் ஐந்தாம் வகுப்புக்குமேல் இந்தியும் இருப்பதால் இந்தியை அறியாதவர் அங்கு யாரும் இருக்க முடியாது. (இந்தி தெரியாதவர் ஐந்தாம் வகுப்பை தாண்டாதவர் என்று பொருள்.) ஆனாலும் இந்தியில் வரும் எல்லா இலக்கியங்களும் நூல்களும் மராட்டியில் உடனே மொழியாக்கம் செய்யப்பட்டுவிடும்


Monday, February 20, 2017

தலையை கொடுத்தல்



அவன் வெட்டுக்கு போயிருக்கான், அவனுக்கு தலைக்கு மேலே வேலை, தலையை கொடுக்க போயிருக்கான், என்று முடிவெட்டிவருவதை இப்படி பல வகையிலும் குறிப்பிடுவதுண்டு. முடிவெட்டுவதை குறித்து தனி ஜோக்குகளாகவே கேலி சித்திரங்களுடன் ஆனந்தவிகடனில் முன்பு வெளிவரும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் நவீனத்துவம் முடிதிருத்துலாக இருந்திருக்கிறது. குறிப்பிட்ட சமூகத்திற்குள்ளேயே இருந்த முடிதிருத்தல்கள் பொதுவெளியில் வந்தபோது குழப்பமாகத்தான் எதிர்கொண்டிருக்கிறார்கள் மக்கள்

சில விநோதங்கள் அப்படியே தொடர்கின்றன, அவன் முடிவெட்டிகிட்டு வந்திருக்கான் அவனை தொடாதீங்க, என்று எச்சரிக்கை செய்ய வீட்டில் ஒருவர் இருப்பார். அணிந்திருக்கும் உடைகளை தனியே எடுத்து வைக்க வேண்டும். அதை தனியே அலசிப்போடவேண்டும். பின்புதான் துவைக்கவே செய்வார்கள். நீளமுடியை வைத்தால் கொஞ்சம் கிண்டல்களும், கொஞ்சம் புதுமைகளை செய்தால் அதிக அலட்சியங்களும் மக்களிடையே வெளிப்படும். சாதாரண முடிவெட்டலுக்கு மக்கள் ஏன் இத்தனை எதிர்வினைகளை செய்கிறார்கள் நினைக்கவே பயமாக இருக்கும்.

Tuesday, February 14, 2017

துரை சி3



சிவாஜிக்கு செளத்திரி மாதிரி, ரஜினிக்கு அலெக்ஸ் பாண்டியன் மாதிரி சூர்யாவிற்கு துரை சிங்கம். எம்ஜியார், கமல், விஜய், அஜித் போன்ற முன்னனி நடிகர்களால் செய்யமுடியாததை இந்த மூவரால் மட்டுமே முடிந்திருக்கிறது. விக்ரம்க்கு சாமி கைகொடுத்தாலும் பெரியளவில் இல்லை என்று சொல்லவேண்டும். இந்த கதாபாத்திரம் மிக தைரியமாக அதேவேளையில் புத்திசாலித்தனமாக செயல்படுவர். அந்த பாத்திரத்தின் முகபாவனைகள் ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி அமைய வேண்டும் என்பது முக்கியம்.

சிவாஜி, ரஜினியைவிட மிக நன்றாகவே அந்த பாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருக்கிறார் சூர்யா. விளையாட்டுதனமான ஆக்ரோஷத்தால் எதையும் செய்யும் விஜய், அமைதியான ஆக்ரோஷத்தால் எதையும் செய்யும் அஜித்தால், கட்டுப்படுத்தப்பட்ட ஆக்ரோஷமாக செய்யும் சூர்யாவை நெருங்கமுடியாது என தோன்றுகிறது. பாட்டுபாடும் முறைகளில் ஓபன் வாய்ஸ் பாடல் வகை என்று ஒன்று உண்டு. வாய் திறந்து உச்சஸ்தானியில் பாடுவது. எல்.ஆர்.ஈஸ்வரி, நித்யசீ போன்றவர்களின் பாட்டுபாடும் முறை இப்படிதான் இருக்கும். அந்த மாதிரியான ஓபன் ஆக்டிங் வகை சூர்யா செய்திருக்கும் துரை சிங்கம். இந்த வகை சூர்யாவிற்கு நன்றாகவே வருகிறது. இப்படி ஒரு படம் செய்யவேண்டும் என நினைத்தால் விஜய் அஜித் இருவரும் இதைதாண்டி செய்து காட்டினால் தான் பெயரெடுக்க முடியும் இல்லை என்றால் அந்த பாத்திரம் கேலியாக முடிய வாய்ப்புண்டு. அத்தோடு சூர்யாவின் உடற்கட்டு பொருத்தமாக இருக்கிறது. அழகிய வடிவமைப்பில் உடலை பேணும் சூர்யா தொடர்ந்து சிங்கத்தை தக்க வைக்க முடிகிறது

Friday, February 10, 2017

நெடுங்சாலைகளும் நெடும்பாலங்களும்



சொலவடை காலத்திற்கு ஏற்றாற்போலதான் வரும். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதுபோல பாலம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று ஒரு சொலவடை கூடியவிரைவில் உருவாகிவிடும். பாலம் இல்லாத ஊர் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்றுதான் அர்த்தம் ஆகிறது. எங்களூரில் சில ஆண்டுகளுக்கு முன்னால் பட்டுக்கோட்டைக்கும் போகும் வழியில் உள்ள ரயில்வே கிராசிங்கிற்காக ஒரு பாலம் கட்டப்பட்டது. சாலையை முழுவதும் அடைத்து பலமான பாலமாக அமைந்திருந்தது. வாகனங்கள் எந்த சிரமமும் இன்றி செல்லமுடிந்தது. அடிக்கடி ரயில் வருவதால் காத்திருக்கும் நேரம் இல்லாமல் பயணநேரமும் வெகுவாக குறைந்தது. நன்மைகள் ஏற்பட்டது போல் வேறு சில மாற்றங்களும் உருவாயின.