சின்னதாக தாடி முகத்தில் தெரிந்தால் வீட்டில் உள்ளவர்கள், நாயை கட்டாய குளியல் வைப்பதுபோல, எப்போது தாடி எடுக்க போறே என்று கேட்டு தொல்லை செய்து எடுக்கும் வரை வரமாட்டார்கள். அம்மா, மனைவி, பிள்ளை எல்லோருக்கும் அதில் தெரியும் சங்கடத்தை புரிந்துக் கொள்ள முடிவதில்லை. முக்கியமாக மனிதன் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் போலும். இத்தனைக்கும் எனக்கு குறுந்தாடியாக மட்டுமே முளைக்கும்.
மனைவி, அம்மா என்று வீட்டில் உள்ள பெண்கள், கல்யாணம், கோயில் என்று கிளம்பும்போது ஆளே மாறியிருப்பார்கள். முகத்தில் வெள்ளையாக சுண்ணாம்பு அடிக்கப்பட்டு பொங்கல் வீடு போன்று இருப்பார்கள். ஆனால் வீட்டில் எண்ணெய் வழியும் முகத்துடன் இருப்பது அவர்களின் சமையல் வேலைதான் காரணம் என்று கூறிக் கொள்வார்கள்.