Monday, February 9, 2015

ஆர் யூ டமிலியன்

இப்படி ஒரு கேள்வியை கேட்டதும் கொஞ்சம் திகைத்து எஸ் என்றேன். ஒரு கடையில் ரீசார்ச் செய்துவிட்டு என் ஊரில் உள்ள ஒருவருக்கு வழிச் சொல்லிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் சத்தம்போட்டு சொல்ல வேண்டியிருந்ததால் ரோட்டில் பக்கத்தில் இருந்தவர்களுக்கு கேட்டிருக்க வேண்டும். பின் நிறுத்தியிருந்த வண்டியை எடுக்க வரும்போது வண்டி பக்கத்தில் நின்றிருந்த அந்த நபர் 'ஆர் யூ டமிலியன்' என்றார். தொப்பி அணிந்து சட்டை இன் செய்யப்பட்ட பேண்ட் அணிந்திருந்தார். மாநிறம். 'எஸ்' என்றது ஒரு சிரிப்பு சிரித்தார். எதற்காக கேட்கிறார். ஒரு வேளை தமிழ்நாட்டிற்கு வந்தவராக இருக்கலாம். அல்லது தமிழ் நண்பர்களுடன் பழகியதில் அவருக்கு தமிழ் வார்த்தைகள் தெரிந்ததால் கேட்டிருக்கலாம். அவரிடம் பேச்சை தொடர்வதற்கு ஒரு சினேக சிரிப்புடன் 'அன்டு யூ' என்றேன்.

'அயம் ஆஸ்ஸோ டமிலியன்' என்றார். சட்டென அதிர்ச்சியில் சாவியை சொருக போன நான் திரும்பி பார்த்தேன். பல தலைமுறைக்கு முன்பே வந்துவிட்ட சில தமிழர்கள் இங்கு சில பகுதிகளில் இருக்கிறார்கள். தமிழ் எழுதபடிக்க தெரியாது, தமிழ கொச்சையாகத்தான் பேசுவார்கள் அவர்கள். அவர்களில் ஒருவராக இருக்கலாம். 'தென் ஒய் ஆர் யூ ஸ்பீக் இன் இங்கிலீஸ்', என்றேன். நோ நோ அயம் ரிடர்ட்டு 'எதோ' ஆபிசர், வீ ஸ்டேயிடு இயர் ஃபொர் சோ மெனி இயர்ஸ், ஐ அன்ட் மைய் ஒயிப்...' தொடர்ந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அது பொதுவாக தன், குடும்ப, வேலை விஷயமாகவே இருந்தது. உங்களுக்கு தமிழ் தெரியாதா? என்றேன். இல்ல தெரியும். நாங்க பிறந்தது எல்லாம் தமிழ்நாடுதான். ஊருல ஆட்களேல்லாம் இருக்காங்க. நாங்க தான் அவ்வளவாக் போறதில்ல. அக்சுவலி இ ஹடு... என்று சில விஷயங்களை சொல்ல ஆரம்பித்துவிட்டார். இப்போது யோசித்து பார்க்கும்போது அவர் தமிழில் சொன்ன வார்த்தைகள் மட்டும் நினைவில் இருக்கிறது. ஆங்கிலத்தில் சொன்ன அனைத்தும் நான் கவனிக்கவே இல்லை.

நான் முழுமையாக தமிழில் பேசியதும் வேறுவழியில்லாமல் தமிழில் பேசினார். சில வாக்கியங்களை ஆங்கிலத்தில் சொன்னாலும் தமிழில் தொடர்ந்தார். அவருக்கு தமிழ் ஆங்கிலம் தவிர இந்தி, மராட்டி நன்கு தெரிந்திருக்கிறது. ஆனால் தமிழ் பேசும்போது ஏதோ சங்கடமாக உணர்கிறார். ஆங்கிலத்தை தமிழர்களிடம் பேசும்போது அவர்கள் அதை வாழ்வின் உயர்ந்த படி நிலையை குறிப்பதாக நினைக்கிறார்கள்.

முன்பு சொன்ன நபரிடம் ஒரு பதினைந்து நிமிடம் பேசியிருப்பேன். சர்நேம் இங்க பிரச்சனை யாயிற்றே எப்படி சமாளிக்கிறீர்கள் என்றேன். சர்நேம் என்பதை தென் இந்தியா தாண்டியதும் முக்கியமானதாக அது இருப்பதை பார்க்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு சர்நேம் உண்டு. அது குடுப்ப பெயர், சாதிப் பெயர், வழிவந்தவர்களின் பெயர், ஊரின் பெயர் (சில தெலுகு குடும்பங்கள் உண்டு) இவற்றில் எதாவது ஒன்றாக இருக்கும். அது இல்லாமல் ஒருவரை அடையாளம் படுத்த முடியாது.
அதயேன் கேக்கறீங்க, இந்த ஆர். என்ன கேட்டு உயிர வாங்குவாங்க. எனக்கு ஒன்னு வரும் என் பொண்டாட்டிக்கு ஒன்னு வரும் (ரெண்டும் ஒன்றாக இருக்க வேண்டும்) பதில் சொல்லி மாளாது என்றார். என் புள்ளங்களுக்கு இதுதான் பிரச்சனை. அவர் ஊரில் உறவுகாரர்கள் இருக்கிறார்கள். வேலை கிடைத்ததும் இங்கு புனே வந்துவிட்டார். அவர் பிள்ளைகளுக்கு தமிழ் பேச மட்டும் வருகிறது. அதுவும் இவரைவிட கொஞ்சையாக, மராட்டி, இந்திதான் இனி அவர்கள் மொழி. அதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள். இனி ஊருக்கு சென்று உறவுகளை புதிப்பித்து கொள்ள அவர் விரும்பவில்லை. அத்தோடு அவரின் கூடபிறந்தவர்கள், அவர் காலத்தவர்கள் இப்போது இல்லை. ஆகவே அவரை தெரியவும் தெரியாது. பேச்சு சொந்த ஊர், நிலம், உறவுகாரர்கள், வாழ்க்கை என்று சுற்றி வந்தாலும் கடைசியில் இங்கு வந்தே முடிந்தது.
உங்களுக்கு என்ன சர்நேம் என்றார் சொன்னதும், அட நீங்க சொல்லலாமே கேசட்டுல போட்டு சேத்துடலாமே என்றார். இல்ல யாரும் விரும்பல, பல பிரச்சனைகள் அங்கு போனபின் உருவாகலாம். இங்கேயே இருந்தா செய்ய‌லாம் என்றேன்.

அவர் ஏன் சேர்க வில்லை என்பதைப் பற்றி நான் கேட்கவில்லை. அதற்கான பிரச்சனை என்னவாக இருக்கும்  என்பதை நாம் அறிந்ததுதான். தமிழகத்தில் நாம் சர்நேமை வைத்துக்கொள்ள முடியாது என்று நான் சொன்னதும். ஆமாமாம் எனக்கு தெரியும் பன்னாடைங்க... என்று சில கெட்டவார்தைகளை சொன்னார், இப்படியும் போகமுடியாது அப்படியும் போகமுடியாது உடமாட்டாய்ங்க‌ என்றார். எல்லாம் அரசியலுங்க என்றார். அவரிடம் பேசிமுடித்ததும் அலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு விடைப் பெற்றேன்.

தமிழர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியதும் சந்திக்கும் முதல் பிரச்சனை மொழி அதைப் பேசமுடியாமல் திணறுவது ஒருபுறம் இருந்தால் மற்றொன்று சாதிப் பிரச்சனை. இவைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று ஒவ்வொரு தமிழர்களும் நினைக்கிறார்கள் என தோன்றுகிறது. ஆகவேதான் தமிழையும், தமிழ் நிலத்தையும் முழுதாக விட்டு பிரிய நினைக்கிறார்கள். உயர் கனவானாக நினைக்க இருக்கவே இருக்கிறது ஆங்கிலம். தமிழ் இனி பொறுமையாக சாகட்டும்.

No comments: