Wednesday, February 11, 2015

குரலரசி எஸ்.ஜானகி


சின்ன வயதில் இசைப்பற்றியும், இளையராஜா, எஸ்.ஜானகிப் பற்றியும் தெரியாத நிலையில் ஒரு பாடல் கேட்டு என்னை அசரவைத்தது. அது தன் குழந்தையை காணச் செல்லும் தாயின் தவிப்பு சொல்லும் பாடல். மழைவருவது மயிலுக்கு தெரியும் என தொடங்கும் பாடல். ஒரு இனிமையான‌ குழைவுடன் தன் மகனை நினைத்துபாடும் பாடல் இவ்வளவு அழகாக பாடமுடியுமா என்று தோன்றியது. படம் ரிஷிமூலம், அதில் கேஆர் விஜயா தன் மகன் வரவை எல்லோரிடம் சொல்ல நினைப்பார் முடியாமல் பாடலாக பாடுவதாக இருக்கும். பாடலின் முதலில் வரும் இசை அந்த குதுகுலத்தை முழுவதும் சொல்லிவிடும். ஸ்லோமோசன், வேகமான மாறும் காட்சிகள் என்று மாறிமாறி வரும். ஆனால் இன்றளவில் அந்த காட்சி, இசையை தாண்டி அந்த தாயின் குரலில் இருக்கும் வேகமும், ஏக்கமும், குழைவும்தான் சிறந்ததாகப் படுகிறது. அந்த பாடலை எஸ்.ஜானகி பாடியிருக்கிறார் என்று அறிந்தது அப்போதுதான். அத்தோடு அதிக பாடல்களை அவர் பாடியவரல்ல என்றும் தெரிந்தது.
அதன்பின் எல்லா பாடல்களிலும் ஜான்கியின் குரலை தேடி சட்டென கண்டுபிடிக்க முடிந்துவிட்டது. ஜானகியிடன் இருக்கும் பாடல்கள் மீதான ஆர்ப்பரிப்பு ஆச்சரியம் அளிப்பது. தமிழ் தவிர மற்ற மொழிகளை எளிதாக கற்றுவிட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தமிழில் எந்த உச்சரிப்பும் தவறாக செய்ததில்லை. அதேவேளையில் எவ்வளவு மென்மையுடனும் தேவையான ஏற்ற இறக்கத்துடன் குழைவுடன் பாடியிருப்பார். மலையாளம், கன்னட மொழியாளர்கள் மிகச்சரியாக உச்சரிப்பதாக கூறப்பட்டிருக்கிறார். இதில் மலையாளம் உச்சரிப்பு மற்ற மொழிக்காரர்களுக்கு மிக கடினம் ஆனால் மிக லாவகமாக பாடியிருப்பார்.


சுசீலாவும் வானிஜெயராமும், சொர்ணலதாவும் எனக்கு பிடித்த பாடகிகள்தாம். இருவரும் அழகான உச்சரிப்பு சொந்தக்காரர்கள். சுசீலாவின் பாடலகளுக்கு உதாரணம் தேவையில்லை. வாணிஜெயராம் பாடிய மல்லிகை என் மன்னன் மயங்கும் என்கிற பாடலை அவரின் உச்சரிப்புக்கு ஒரு சிறந்த பாடலாக சொல்லலாம். அவர் பேசும்போதும் அதே திருத்தமான உச்சரிப்புடன் பேசுவதாக தோன்றும். ஆனால் ஜான்கி உச்சரிப்புடன் என்பது அது உணர்ச்சிகளுடன் கலந்திருப்பது. கோபமாக, தாபமாக, அன்பாக, ஏக்கமாக என்று எத்தனை வகை உண்டோ அத்தனையும் பாட ஜானகியால் மட்டுமே முடிகிறது.
திரும்பதிரும்ப பாடல்களை கேட்கும்போது வெவ்வெறு உணர்ச்சிகளை சொல்வதாக தோன்றுவது ஜானகி பாடல்கள் மட்டுமே. மச்சானை பார்த்தீங்களா ஒரு சிறந்த உதாரணம். எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை. ஏக்கம் என்ற வரி ஒரு இடம் வரும், அப்போது மிக கவனமாக கேட்பேன். அதை ஏக்கத்திலேயே அவர் சொல்லும்போது புதியதாக ஒரு இசை சங்கதியை அறிந்த திருப்தி ஏற்பட்டுவிடும்.
மிக கவனமாகவோ அல்லது விட்டேத்தியாகவோ பாடல்களை பாடுவதில்லை. பொதுவாக இந்த சங்கதிகளை அவர் இயல்பாகவே செய்கிறார். இசைக்கென்று எந்த பிரத்யேக பயிற்சியும் அவர் எடுத்ததில்லை. ஐஸ்கீரிம், குளிர்ச்சியான இவைகளை மட்டுமே தவிர்க்கிறார், மற்றபடி எல்லா உணவுகளும், பாணங்களும் உட்கொள்வதாக பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
சில்க் சுமிதா ஆடிய ப‌ல ஐட்டம் பாடல்களுக்கு அவர் பாடியிருக்கிறார், அதே வேளையில் குழந்தைகளுக்கும் பாடியிருக்கிறார். பழைய பாடல்களில் குழந்தைகளுக்கு என்றால் ஜிக்கி/பி.லீலாவை கூப்பிடுவார்கள், அது 80லில் முடிந்து குழந்தைகளுக்கு என்றால் அது ஜானகிதான். அன்புக்கு நான் அடிமை படத்தில் குழந்தை பாடும் காட்டில் ஒரு சிங்ககுட்டியாம் என்ற பாடல் மிக பிரபலம்.
ஆரம்பத்தில் அவருக்கு பாடல்கள் அமைந்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அப்போது சுசீலா மாதிரி தெளிவாக எந்த ஏற்ற இறக்கமற்ற அதாவது ஒரே நேர்கோட்டில் பாடுவது போல பாடப்பட்ட பாடல்களும் பாடகர்களுமே விரும்ப பட்டார்கள். கொஞ்சம் மாற்றி மிமிக்ரி மாதிரி செய்தால் அவரின் பாடல்களை யாரும் கேட்பதில்லை. அதை பாடத்தெரியாதவர்கள் செய்யக்கூடியதாக நினைத்திருந்தார்கள். இளையராஜா வந்த பிறகே ஜானகிக்கு பெரியளவில் ப்ரேக் ஏற்ப்பட்டது. அதுவரை, படத்தின் நாயகியும், கவர்ச்சி நாயகியும் பாடாத அல்லது மிக வித்தியாசமான சத்தங்கள் கொண்ட பாடல்களுக்கு மட்டுமே ஜான்கி அழைக்கப்பட்டார். சிங்கார வேலன், ஜல்ஜல் எனும் சலங்கைஒலி, இது மாதிரியான பாடல்கள் மட்டுமே அவருக்கு கிடைத்தன.
இளையராஜா வந்த பின் ஜானகியின் பாடல்களை கேட்ட தமிழ் மக்கள் பிறகு சுசீலா, வாணிஜெயராமின் பாடல்களை விரும்பவில்லை என்பதை அவர்கள் பாடி வந்த பாடல்களின் தோல்வியிலிருந்து புரிகிறது. சித்ரா மட்டுமே அவருக்கு ஈடு செய்து அவரை தாண்டி செல்லமுடிந்தது. 90ல் வரை ஜான்கி சினிமாவில் தொடர்ந்து இருந்திருக்கிறார் என்பதும் தொடர்ந்து மென்மைநிறைய தன்குரலை தக்கவைத்திருந்தார் என்பது ஆச்சரியம்.

No comments: