Wednesday, June 4, 2014

தவப்புதல்வன் சிவாஜி



தவப்புதல்வனை பாதியிலிருந்துதான் பார்த்தேன். சட்டென ஒட்டிக் கொண்டுவிட்டது. படம் கருப்பு வெள்ளையில் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தாலும், ஒரளவிற்கு நேர்த்தியாகவே படம் செய்யப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான படம். அதனால் கதையில் பல ஓட்டைகளை கூற‌முடியும். கதை மிக எளிய நேர்கோடாகதான் அமைந்திருக்கிறது. ஒரு இசைகலைஞன் தன் பரம்பரை வியாதியான மாலைக்கண் நோய் தனக்கு வந்துவிடகூடாது என்பதும் அது தன் அம்மாவிற்கு தெரியகூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறான். ஒரு நாள் மாலைககண் நோய் வந்துவிடுகிறது. அம்மாவிடம் சொல்லாமல் இருக்கிறான் ஒரு டான்சர் தன்னை திருமணம் செய்ய சொல்கிறாள் அல்லது அவன் அம்மாவிடம் சொல்லப்போவதாக சொல்லி அவனை டார்சர் செய்கிறாள். கடைசியில் ஒரு வெளிநாட்டு டாக்டரின் ஆப்பரேசனில் குணமடைந்து அம்மாவை அவளிடமிருந்து காக்கிறான். 




சிவாஜியின் நடிப்பிற்கு தீனிபோடும் வகையில் காட்சிகள் உள்ளன. மேடையில் பாடும்போது அவரிடம் தெரியும் கம்பீரம், மற்றொரு இடத்தில் மாலை வேளையில் குழந்தைகளுக்கு கிருஸ்மத் தாத்தாவாக வந்து கண்தெரியாமல் நடிப்பதுபோல செய்யும் அவர் கண்கலங்க வைக்கும் அவரது சேட்டைகள் என்று படம் முழுவதும் அவர் வியாபித்திருக்கிறார்.
குறைகள் என்று சொன்னால் சோ‍ மனோரமா எப்படியாவது டான்சரை அம்மாவிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று செய்யும் முயற்சிகளும், சிவாஜி செய்யும் முயற்சிகளும் தனியாக் இருக்கின்றன. ஏன் இருவரும் சேரவில்லை என்பது படம் பார்க்கும்போதே தோன்றிவிட்டது. இந்த மாதிரியான படங்கள் கலரில் அழகான விவரிப்புடன் சொல்லப்பட்டிருக்க முடியும்.
ஆனால் பொதுவாக பார்க்கும்போது இசைகலைஞன்-மாலைக்கண் என்னும் சேர்க்கையே அழகாக இருக்கிறது.இந்துஸ்தானி இசைப்பிரியரான ஒருவர் மாலைக்கண் நோய் வரும்போது அதன் பிரச்சனைகளிலிருந்து வெளிவர அவன் செய்யும் முயற்சிகள் அதன் மீதான இந்த சமூகத்தின் தாக்கம் என்று கதை பின்னி செல்லமுடியும். மோகன்லால் நடித்த ஒரு மலையாளப் படம் ஒன்றில் இசைகலைபஞரான அவர் குடிபழக்கத்தில் அடிமையாகி, வெளிவர முடியாமல் தத்தளிப்பதை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். அவரது உடை, தாடி, உடல்மொழி என்று ஒரு முழுமையை கொண்டுவர முயற்சித்திருப்பார்.
தவப்புதல்வன் படத்திலும் சிவாஜி ஒருமாதிரி பாதி ஜிப்பா உடையை அணிந்துவருவார். அவருக்கான பிரச்சனை அம்மா, காதலி என்று மிக குறுகியதாக இருக்கும். தாத்தா, அப்பாவிற்கு இருந்த நோய் மகனுக்கு வந்துவிட்டால் அம்மா இறந்துவிடுவார் என்பது கொஞ்சம் அதிகமாகப்படுகிறது. அம்மா, காதலிக்கு தெரியத விசயம் ஒரு டான்சருக்கு தெரிவதும், அவர் அண்ணனுடன் அவரை ப்ளாக்மெயில் செய்வதும் ரொம்ப கத்துகுட்டியாக இருக்கிறது.
சிவாஜியிடம் தெரியும் கம்பீரமான நடிப்பு, டிஎம்எஸின் குரல்வளம் இரண்டும் எளிய கதைப் பின்னலில் முடிவது பெரிய ஏமாற்றம்தான். வெளியான (1972) சமயத்தில் போற்றப்பட்ட படமாக இருந்தாலும், பெரிய நடிகரான சிவாஜிக்கு கதையில் உலகதரம் இல்லாதது குறித்த அக்கறை ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
மேடைப்பேச்சில் நாசர் சிங்கத்திற்கு தயிர்சாதம் கொடுத்து கொன்றுவிட்டதாக சிவாஜியைப் பற்றி கூறியிருந்தார். அது உண்மைதான். ஊறுகாய்கூட இல்லாத தயிர்சாதத்தை சிங்கம்
உண்டிருப்பது சங்கடமாகத்தான் இருக்கிறது.

No comments: