Thursday, April 29, 2010

நகரத்திற்கு வெளியே - சிறுகதை தொகுப்பு


விஜய் மகேந்திரன் எழுதியள்ள சிறுகதைகளின் தொகுப்பு 'நகரத்திற்கு வெளியே'. இது அவரது முதல் சிறுகதை தொகுப்பாக இருக்கும். மிக குறைந்த சிறுகதைகளை (10 சிறுகதைகள்) கொண்ட இத்தொகுப்பு எல்லா சிறுகதை ஆசிரியர்களின் முதல் தொகுப்பு போல குறைநிறைகளை கொண்டுள்ளது. சில சிறுகதைகள் கதைகளாக உருகொள்வதற்கு முன்பாகவே கீழிறங்கிவிட்டதாக தோன்றினாலும், வேறுசில கதைகள் நல்ல தரத்துடன் உள்ளன. குறிப்பாக ‍‍புயல்மழை சின்னம், நகரத்திற்கு வெளியே, சனிபெயர்ச்சி போன்றவைகள். அவைகள் கூட ஜனரஞ்சக தளத்தில் இருப்பதாக சில சமயம் தோன்றினாலும், கதைகளனும் அதன் திருப்பங்களும் மிக புதியவையே. நகரத்து வாழ்க்கையை பிரதிபலிக்கும் இக்கதைகளை நாம் எங்கே செல்கிறோம் என பதபதைக்க வைக்கினறன. ஒரு நல்ல தொகுப்பு. 
உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும் வெற்றிகளை பெற விஜய் மகேந்திரனுக்கு என் வாழ்த்துக்கள்.

Friday, April 23, 2010

இன்று உலக‌ புத்தக தினம்


ஆங்கில கவிஞரும் நாடகாசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்தநாளான இன்று புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது (1995லிருந்து பதிப்பக காப்புரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது).

தண்ணி அடிப்பவனையும் கஞ்சா அடிப்பவனையும் பார்பதுபோல் புத்தகம் படிப்பவனை பார்க்கும் இந்த சமூகத்தில் புத்தக தினத்தை எப்படி கொண்டாடிவிட முடியும். இருந்தாலும் சந்தோஷமாக கைகுலுக்கலாம், புத்தக‌ங்களை பரிசளிக்கலாம். கேலிபேசும் மனிதர்களை மறந்து மலையாள கவிஞர் குஞ்சுண்ணி எழுதிய கவிதையை நினைவில் கொள்லலாம்.

வாசித்தாலும் வளர்வீர்கள்
வாசிக்காவிட்டாலும் வளர்வீர்கள்
வாசித்தால் விளைவீர்கள்
வாசிக்காவிட்டால் வளைவீர்கள்.


-o0o-

Thursday, April 22, 2010

அன்பு இணைய நண்பர்களுக்கு,


இணைய எழுத்தாளர்கள், இணைய இதழ்கள் என்ற பெயர்களில் இந்த தளத்தில் ஏற்றப்பட்டுள்ள எழுத்தாளர்களின் பெயர்களும் இணைய இதழ்களும் முழுமையானதல்ல. எல்லா இணைய எழுத்தாளர்க‌ளின், இதழ்களின் பெயர்களை முழுமையாக இணைத்துவிட முடியாது என்றாலும், ஆரம்ப நிலை எழுத்தாளர்களுக்கு பயன்படும்வகையில் முக்கியமான இ.எ., இ.இ. பெயர்களை உங்கள் ஒத்துழைப்போடு இணைக்க முடியுமென்று நினைக்கிறேன். ஆகவே உங்களூக்கு தெரிந்த இங்கே இணைக்கப்படாத இ.எ., இ.இ. பெயர்களை இந்த பின்னுட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன். நீங்கள் சொல்லும் இ.எ., இ.இ. புனைவு எழுத்து சம்பந்தபட்டவராக/வையாக இருத்தல் நலம்.

தங்கள் பங்களிப்பிற்கு அட்வான்ஸ் நன்றிகள். 


-o0o-

Monday, April 12, 2010

சிறுவனுக்கு உதவுங்கள்

நண்பர்களுக்கு

சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. சிலமாதங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட ஐந்து நொடிகளில் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறுவனின் கைகளும் கால்களும் சில நொடிகளில் கருகி தூக்கி எறியப்பட்டான். பதறச்செய்த நொடிகள் அவை. எப்பாடுபட்டாவது அந்த ஐந்து நொடிகள் மட்டும் பின்னோக்கி பயணப்பட எந்தவிதமான செயலையும் செய்யும் நிலையிலிருந்தேன்.



எனது வீட்டிற்கு அருகில் சமீபத்தில் குடிவந்திருந்த ஒரு குடும்பம். அவர் வீட்டில் அந்தப்பையனையும் சேர்த்து மூன்று பேர் ஒரு அக்கா ஒரு தங்கை அவனுக்கு. எந்த நேரமும் எதாவதொரு குறும்பு செய்துகொண்டே இருப்பான். ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்திருந்ததில்லை. ஆனால் இப்போது அவன் எழுந்து நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. காரணம் விபத்து. ஒரு விடுமுறை நாளின் காலையின் வீட்டின் மாடியில் குச்சி வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது சக நண்பர்கள் உற்சாகப்படுத்த சுவர் அருகே ஆறடி தூரத்தில் அதிக மின்சக்திகளை தாங்கிச்செல்லும் மின் கம்பிகளை அந்த குச்சியால் தொட்டுவிட்டான். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பிஞ்சின் கை கால்கள் கருகத்தொடங்கிவிட்டன சுதாரிப்பதற்குள் முடிந்துவிட்டன. இப்போது அவனுக்கு தோல்பட்டை வரை ஒரு கையும் தொடை வரை ஒரு காலும் கருகிவிட்டன. மற்றொரு காலில் ஒரு விரல்கூட மிஞ்சவில்லை. மற்றொரு கையில் இரண்டு விரல்களில் மட்டுமே செயல்பாடு உள்ளது. ஆனால் அவனது முகத்தில் இருக்கும் பிரகாசம் மட்டும் குறையவே இல்லை. தனக்கு இப்படி ஆகிவிட்டது குறித்த கவலைகூட அவனுக்கு கிடையாது. மிகுந்த தன்னம்பிக்கை உடைய சிறுவன்.

கடந்த நான்கு மாதங்களில் தங்களது சக்திக்கும் மீறியே செலவு செய்து விட்டனர். தற்போது செயற்கைக் கை கால்கள் பொருத்த நிதி தேவைப்படுகிறது. இட்லிவடை பகுதியில் இதைப்போன்ற செய்திகள் முன்பே படித்திருக்கிறேன், உதவியும் இருக்கிறேன். இந்த செய்தியை தங்களது தளத்தின் வெளியிட்டு அந்த எளிய குடும்பத்திற்கு நிதி உதவி கிடைத்தால் மிகுந்த சந்தோஷமடைவேன். நண்பர்களே உங்களால் முடிந்த உதவியை செய்து அந்தக்குடும்பத்தில் ஒளியேற்றுங்கள்.

விபத்திற்கு முன்பும் விபத்திற்கு பின்பான அந்த சிறுவனின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

முதல் படம் தனது இரு சகோதரிகளுடன் சுமன் என்கிற சுரேந்தர். இரண்டாவது படம் விபத்திற்குப் பின்

இதை இட்லிவடையில் வெளியிட்டு உதவும் உள்ளங்களுக்கு தெரியப்படுத்திய இட்லிவடை நண்பர்களுக்கு நன்றி.

வங்கிக்கணக்கு விவரங்கள் கீழே

Bank name: Indian Bank
Acc num : 745331967
Account name : P.Madhavan
Branch : Kacharapalayam
city : Kallakurichi Taluk

முகவரி :

P.Madhavan
s/o pichamuthu
vedhakara theru
kachirapalayam post
kallakurichi tk
villuppuram dt


தொலைப்பேசி: 9791460680 கதிர்

அன்புடன்
கதிர்

-o0o-

Friday, April 9, 2010

கோபல்ல கிராமம் - கிரா

கதைசொல்லியின் நாவல். கோபல்ல கிராமம் எப்படி உருண்டு திரண்டு உருக்கொண்டதென்பது நாவலின் மையம்.

தெலுங்கு பேசும் மக்களின் ஒரு பகுதியினர், ஆட்சி செய்த துலுக்கர்களின் அராஜங்களுக்கு பயந்து தெற்கு நோக்கி பயமாகிறார்கள். அவர்கள் அடைந்த இன்னல்கள், அதைதாண்டி கிராமத்தை உருவாக்கி பெற்ற வெற்றிகளைப் பற்றி பேசும் நாவல். ஒரு சாதரண கதைசொல்லியின் குரலில் எந்தவித நம்பதகுந்த விவரங்கள் கையில் வைத்துக்கொண்டு பேசாமல், நடக்கும் விசயங்களை ஒரு அறியாமையுடனே அல்லது ஒரு கிராம மனிதர்களுக்கு தெரிந்த அதே அரைகுறை செய்திகளுடனே பயனிக்கிறது நாவல். அதுவே இந்நாவலின் சிறப்பும்கூட.

நாவல் முழுவதும், சம்பவங்களை நம்பாமல் தனித்தனி பாத்திரங்கள் அப்பாத்திரத்தின் குணாதிசயங்களை, அது கூறும் வார்த்தைளை கொண்டே முன்னேறுகிறது. எந்த இடத்திலும் தோய்வில்லை, அலுப்பில்லை. எளிய வார்த்தைகள், சின்ன சொற்றொடர்கள் சின்னச்சின்ன ஊர்களை கடந்து செல்லும் நீண்ட சாலையில் பயணிப்பது போல‌ பயனித்தபடி உள்ளது.


கழுவிலேற்றப்படும் திருடனை அவன் கொள்ளும் அவஸ்ததை, கழுவில் உள்ள தொழில்நுட்பங்கள், அப்போதைய சமூக விழுமியங்கள் என்று அத்தனை பக்கத்தில் நின்று அழகாக படம்பிடித்துக் காட்டுகிறார்.

வேறு ஆழமான எந்த சுயகண்டடைதலோ, வர்ணணைகளோ நாவலில் இல்லை, சொல்லபோனால் நாவல் படித்த முழு 'திருப்தி'யே இல்லை. கதைசொல்லியிடம் விடியவிடிய கதை கேட்ட திருப்தி மட்டுமே உள்ளது. இதுவே அதன் சிறப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். வர்ணனை என்றால் இந்நாவலில் பெண்களை வர்ணிப்பதுதான். ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஏதாவது ஒரு பெண் வந்துகொண்டேயிருக்கிறார். அவள் சிரிப்பு, கண் என்று அழகுகாட்டிக் கொண்டேசெல்கிறார். அதில் ஒரு கிண்டல் தொனி எப்போதும் இருக்கிறது.

கடைசியில் வெள்ளையர்கள் வரும்போது, அவர்களை எப்படி கிண்டலாக பார்த்தார்கள் என்று சொல்லி, அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல், மிக வயதான மங்கதாயாரிடம் கேட்கிறார்கள். அவன் நம் பெண்களை துன்புறுத்தினானா? பொருட்களை கொள்ளை அடித்தானா? என கேட்கிறார். இல்லை என்றதும், அப்படியென்றால் நாம் அவனுடம் சேர்ந்துகொள்வோம் என்கிறார், எப்படி நம் மக்கள் வெள்ளையனோடு சேர்ந்தார்கள் என்பதை மிக எழிதாக சொல்லிவிட்டதாக தோன்றுகிறது. 

கட்டபொம்முவின் மரணத்துடன், வெள்ளையனின் கைஒங்குவதாக் முடிகிறது நாவல்.


-o0o-

Thursday, April 8, 2010

உதவி தேவை

முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com - 9841489907
பாலபாரதி – kuilbala@gmail.com - 9940203132
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450 (http://www.writermugil.com)


முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம். அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.

-o0o-

Wednesday, April 7, 2010

காலாவதியும் கவர்மெண்டும்


எத்தனை பொருப்பில்லாமல் அரசியல்வாதிகள் நடந்துகொண்டாலும் அதை பொருத்துக்கொள்ளும் நல்ல மனசு நம் மக்களுக்கு. இல்லையென்றால் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் ஒன்று நடந்திருக்கும் போதும் எதும் கண்டுகொள்ளாமல் தம் வேலைகளை பார்த்துக்கொண்டு செல்லும் மக்களை என்னவென்று சொல்வது. எப்படி காலாவதி மருந்துகள் புழ‌க்கத்தில் உள்ளன என்று கேட்டபோது, முதல்வர் அவைகள் இப்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன, வேண்டுமானால் சிபிசிஐடிக்கோ அல்லது சிபிஐக்கோ உத்தரவிடஉள்ளதாக கூறினார். எதுவும் தெரியாது உன்னால் ஆனதை பார்த்துக்கொள் என்பதுதான் அதன் அர்த்தம்.
நம்மக்களுக்கு பொருமை அதிகம் என்று கூறியதற்கு காரணம் இருக்கிறது. மற்ற மாநில மக்களுக்கு அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்களை ஏதோ தேவதூதர்கள், ரட்சகர்கள் என்னும்படியாக பார்க்கும் பார்வை இல்லை. அவர்களை சாதாரண மனிதர்களாகவே நடத்துகிறார்கள். அவர்களை எளிதாக அணுகமுடிகிறது. தெருவிளக்கு சரியாக எரியவில்லை என்றால்கூட ஒன்றுகூடி சம்பந்த பட்ட அரசுஅதிகாரிகளை அடிக்கசெல்கிறார்கள்.
கொஞ்சநாள் முன்பு தெருகுழாயில் தண்ணீர்வரவில்லை என்பதற்காக தெருவாசிகள் ஒன்றுசேர்ந்து சம்பந்தபட்ட அலுவலகம் சென்று அந்த அதிகாரியின் முகத்தில் கரியை பூசினார்கள். இதேபோல் கர்நாடகவில் காவேரி பிரச்சனையின் போது அரசுஅதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அம்மக்கள் என்னபாடு படுத்தினார்கள் என்பது நாம் கண்டோம்.
இதய, சக்கரை நோயாளிகளும், கர்ப்பிணிகளும் தான் அதிகம் மருந்து எடுத்துக் கொள்பவர்கள். காலாவதி மருந்து உட்கொள்வதினால் அதற்கான பிரச்சனை உடனே தெரியப்போவதில்லை. முதலில் பாதிக்கபோவது உட்கொண்டவர்க‌ளின் கிட்னிதான். அதன்பின் ஒவ்வொரு பாகமாக பாதிக்கப்படும். கர்ப்பிணிகள் உட்கொள்வதால் பிறக்கும் குழந்தைக்கு என்ன பிரச்சனைகள் வரும் என்பதும் தெரியவில்லை. கொஞசநாள் முன்பு மர்மக்காய்ச்சல் பரவியதிற்கு இந்த மருந்துகள் முக்கிய காரணமாக கூட‌ இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கபட்டு இருப்பவர்கள் எத்தனை கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார்கள். சொல்லப்போனால் இது எதனால் என்று தெரியாத அறியாமையில்கூட‌ இருக்கலாம். எதுஎப்படியோ தமிழ்நாட்டு மக்கள் நல்ல மனது படைத்தவர்கள்.