Showing posts with label சொல்வனம். Show all posts
Showing posts with label சொல்வனம். Show all posts

Thursday, November 3, 2022

குதிரை மரம் பற்றி - ‍குமார நந்தன்


கே.ஜே. அசோக்குமாரின் குதிரை மரம் சிறுகதையை கடந்த சொற்சுனை கூட்டத்திற்காக சிவப்பிரசாத் தேர்ந்தெடுத்திருந்தார். 

படித்தவுடனே கதையைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சந்தர்ப்ப நிலையால் முடியவில்லை. இப்போதுதான் எழுதுகிறேன்.
கதையைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, கதை, எழுத்தாளன் என்ற நிலைமைகளைத் தாண்டி இக்கதையை அவர் எழுதி இருக்கிறார் என எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. கதையில் அவ்வளவு உயிரோட்டம்.
ஒரு நெசவாளியின் துயர் மிகுந்த வாழ்க்கையைப் பதிவு செய்துவிட வேண்டும் என அர்ப்பணிப்புடன் எழுதி இருக்கிறார்.

Thursday, July 12, 2018

'புரியாதவர்கள்' கதை குறித்து பாவண்ணன்



அன்புள்ள அசோக்குமார்

வணக்கம். சொல்வனத்தில் வந்திருக்கும் சிறுகதையைப் படித்துவிட்டேன்.  தொடர்ந்து வீட்டைத் தேடிவரும் சிறுவியாபாரிகளுக்கும் மருமகளுக்கும் இடையிலான உரசல்/உறவு புதிய களமாக இருப்பதால் படிக்க உற்சாகமாக இருந்தது. வியாபாரிகளின் ஒட்டுறவை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளுடைய வேகத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமலேயே வாழ்க்கை ஓடுகிறது. ஒரு புதிர்போல போய்க்கொண்டே போகிறது. யாருக்கும் நேரமில்லை, யாரும் யாருக்கும் தேவையுமில்லை என்கிறபோது வேறெப்படி இருக்கமுடியும்?

எனக்கு அந்த இறுதிவரிக்கு நீங்கள் சற்றே கூடுதல் அழுத்தம் கொடுத்துவிட்டீர்கள் என்று தோன்றவைக்கிறது.  விற்பவர் போகிறார், மருமகள் பார்க்கிறாள், வாசல்முன் வந்து கூவக்கூடும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அந்த வீட்டை கூச்சலின்றி கடந்துவிடுகிறார். வேணுமா பாப்பா என்று கேட்கவில்லை. அந்தச் சித்தரிப்போடு சொல்லியிருந்தாலே போதும். தேவையின்றி ‘ஒருநாளும்’ என்றொரு சொல்லால் நீங்கள் தரும் அழுத்தம் ‘ஒரு துளி உப்பு’ கூடுதலாவதுபோல கூடிவிட்டது. அது வெறும் சித்தரிப்பு என்னும் நிலையைக் கடந்து நீங்கள் விரும்பும் முடிவாக மாறிவிட்டது.

அன்புடன்

பாவண்ணன் 

 

Thursday, January 11, 2018

தெய்வமரம் (சிறுகதை)



பெரிய சாலையில் மாலைஒளி படும்படி அமர்த்தலாக அமைந்திருந்ததுமங்களவிலாஸ்வீடு. மழைக்கும் வெய்யிலுக்கும் சோர்ந்து காரைகள் பெயர்ந்த பழையபாணி வீடு. அந்த இடம் வந்ததும் தன்னையறியாமல் தலைதூக்கிப் பார்த்துவிடுவது சிவமணியனின் வழக்கம். ஏதோ ஒரு பய உணர்ச்சியோடுதான் அந்த வீட்டிற்குள் நுழைவான் சிவமணியன். அந்த வீடு தரும் அமைதியின்மையை அவனால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. முத்தையாவிற்குப் பரம்பரையாக வந்திருக்கும் சொந்த வீடு அது. முத்தையா சாந்தியைத் திருமணம் செய்து கொண்டு வந்தபின்னே வீட்டிற்கு வண்ணப்பூச்சு அடிக்கப்பட்டது. அதற்குமுன் இதைவிட மோசமாக இருந்தது. காம்பவுண்ட் சுவரைத் தாண்டி நீண்ட வாசற்படியில் சரியாகக் கண் தெரியாத முத்தையாவின் அம்மா எப்போதும் அமர்ந்திருப்பாள். உள்ளே வருபவர்களை நோக்கி அவள் எதையோ சொல்கிறாள் எனத் தோன்றும். மாறாத கண்களுடன் வெற்றிலை பாக்கு மெல்வதை உள்ளே வருபவர்கள் தாமதமாகப் புரிந்துக் கொள்வார்கள். இன்று அந்த இடத்தில் முத்தையா அமர்ந்திருந்தார். ஏதோ சிந்தனையில் அமர்ந்திருப்பவன்போல உடலிலிருந்து நகர்த்தி வேறு திசையில் முகத்தை வைத்துக்கொண்டிருந்தான்.

Saturday, October 21, 2017

சுயபுராணம்



என்னைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கும் வாசகர்களின்/நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க(!!) அவர்களை திருப்திபடுத்த வேண்டி இந்த பதிவு செய்யப்படுகிறது. மற்றவர்களுக்கு இது சற்று அதீதமாகப் படலாம். அல்லது இணைய உலகின் வேறு பயனுள்ள தளங்களை பார்க்க வேண்டுகிறேன். இருந்தாலும் தலைப்பு சுட்டுவதுபோல் இக்கட்டுரையை சுயபுராணமாக அமைத்துவிடாமல் இருக்க முயற்சிசெய்கிறேன். 

Tuesday, October 10, 2017

பெயர் தெரியாப் பறவையின் கூடு (சிறுகதை)

சமீபகாலங்களில் காலையில் எழுந்ததும் கூடத்தின் ஜன்னலுக்கு வந்து அந்த மரத்தையும் அதில் உள்ள பறவையின் கூட்டையும் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது தினேஷ் குமாருக்கு. மனைவியின் கேலியையும் மீறி அதை ரசிப்பது அவனுக்கு பிடித்திருந்தது. மஞ்சள் நிறம் கொண்டசின்ன அலகால் வாய்திறந்து தன் தாயின் அலகிலிருந்து வரும் உணவிற்காக மூடிய கண்களோடு நம்பிக்கையோடு அந்தமூன்று குஞ்சுகள் காத்திருக்கின்றன. மரகுச்சிபோன்ற கால்களுடையதாய் அருகே வந்ததும் மூன்று குஞ்சுகளும் மேலும் அகலதிறந்த அலகுகளுடன் நாக்குகள் துடிக்க பல விசித்திர ஒலிகளை எழுப்ப ஆரம்பிக்கும். உணவு வாய்க்கும் வரும்வரை கத்தி கூப்பாடு போட்டுவிட்டு பின் அமைதியாக உறங்கிவிடும்.
இரண்டாவது தளத்தில் இருந்த கருப்பு கண்ணாடி ஜன்னல்கள் மறைத்தஅவன் வீட்டிலிருந்து அந்த கூட்டை அவைகளுக்கு தெரியாமல் அவன் காணமுடிந்தது நாளுக்கு நாள் குஞ்சுகள் வளர்வதை காண்பது பெரும் பாக்கியமாக நினைத்தான். சில நேரங்களில் ஒருவயது மகனுடன் அமர்ந்துவிடுவான். குஞ்சுகளைக் கண்டு .. என்று கூவும் அவனின் ஆச்சரியங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியளிப்பவைகள். நீண்ட கூரிய அலகுள்ள தாய்ப் பறவையை கிட்டத்தில் பார்க்கும்போது அதன் கால்களும் இறகுகளும் மரத்தால் செய்யப்பட்டபொம்மைபோல் இருக்கும். யாரும் அவைகளை தொல்லை செய்யக்கூடாது என கட்டளை இட்டிருந்தான். ‘பாவம் குஞ்சிங்க…’ என்று சொல்லிக்கொண்டான். அவனின் விசித்திர செயலால் அம்மாவும் அவன் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

Thursday, August 16, 2012

21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள்



ஆழி பதிப்பகத்தின் வெளியீடாக திரு கீரனூர் ஜாகிர்ராஜாவின் தொகுப்பாக 21 சிறுகதைகள் இந்த 12 ஆண்டுகளில் வந்தவைகளை தொகுத்து 21ஆம் நூற்றாண்டு சிறுகதைகள் என்ற பெயருடன் வெளியாகிறது. இதே போல

Thursday, May 17, 2012

சொல்வனம் 70: சிறுகதை


சொல்வனம் 70ஆம் இதழில் என் சிறுகதையான 'கைக்கு எட்டிய வானம் அல்லது காட்சிப்பிழை அல்லது ஜூஜூ தவளை சொன்ன குட்டிக்கதை' இடம்பெற்றுள்ளது.

Monday, February 20, 2012

சொல்வனம் - சிறுகதை


முக்கியமான சிறுகதையாக நான் நினைக்கும் என் சிறுகதை ஒன்று சொல்வன இணைய இதழில் வெளியாகியுள்ளது. இணைய இதழ்களில் முக்கிய இதழாக திகழும் சொல்வனம் பல நல்ல கட்டுரைகளையும், கதைகளையும் வெளியிட்டு வருகிறது. அதில் சிறுகதை வெளியாவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 



உங்கள் பார்வைக்கும் கருத்திற்காகவும் அந்த‌ பக்கத்தை பகிர்ந்துகொள்கிறேன்.  


Wednesday, October 12, 2011

அப்ரஞ்ஜி: சிறுகதை



இன்றைய தினம் ஏதோ ஒரு வகையில் முக்கியவிதமாக அமையப்போகிறது என்ற எண்ணம் காலையில் எழுந்ததுமே ஏற்பட்டுவிட்டது. ராஜேஸ்வரியின் மகளின் சாந்தாவின் 25ஆம் வருட திதி இன்று. மஞ்சள் காமாலையில் இறந்த அவ‌ளுக்கு கூழுற்றும் தினம், இந்த வருடம் சிறப்பாக செய்துவிடவேண்டுமென ராஜேஸ்வரி நேற்றே கூறிவிட்டார்.

விடியாகாலை வேளையில் அடுப்பு வெப்பத்தின் காரணமாக உடலில் பரவியிருந்த வியர்வை குளிராய் இதமாய் இருந்தது. துடைக்க மனம் வராமல் வேலை செய்துகொண்டிருந்தாள் அப்ரஞ்ஜி. கொழுக்கட்டையின் மணம் அந்த தோட்டத்து ரேழி முழுவதும் பரவியிருந்தது. பெரிய சுவாலைகள் பாத்திரத்தின் பாதியளவிற்கு மேல் பரவி அமானுஷ்ய சத்தத்துடன் எரிந்துகொண்டிருந்தது அடுப்பு. சாயம்போடும் கரிபிடித்த பெரிய பாத்திரங்களும் கரண்டிகளும் தாறுமாறாய் ஒரு பக்கமும், மறுபக்கம் விறகுகளின் அடுக்கு ரயிலொடு சார்புவரைக்கும் உயர்ந்திருந்தன. வெப்பம் தாளாமல் நீர்கொழுக்கட்டைகள் பாத்திரத்திலிருந்து வெளியேவர எத்தளிப்பது போல‌ தத்தளித்துக் கொண்டிருந்தன. சூரியன் இன்னும் வெளியே வரவில்லை. வரும் நேரம்தான், காகங்கள், குயில்களின் கத்தும் ஒலிகள் கேட்க தொடங்கிவிட்டன. விடிவதற்குள் முடிந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் கண்களும் கைகளும் வேகமாக செயல்பட்டன.

அப்ரஞ்ஜி…..’ இருட்டிலிருந்து ஒருகுரல் நீண்டகுரல் வெளிப்பட்டது.

…’ பதிலளித்தாள்.

ஆயிடுச்சா…’ இது நாகமனியின் மருமகள் ராஜியின் குரல்.

ஆயிட்டே இருக்குடியம்மா…, இதோ முடிஞ்சிடும்

ராஜியின் மருமகள் தனத்தின் மாப்பிள்ளைக்கு போனவிருந்தின் போது அவர்கள் ஊரில் கிடைக்காத இந்த நீர்கொழுக்கட்டையை விரும்பிச் சாப்பிட்டதால் இம்முறையும், தனம் கேட்டுக்கொண்டதன்பேரில், ஊரிலிருந்து வரும் அவருக்காக விசேஷமாக தயாராகிவருகிறது.

அளவாக இருந்த கொழுக்கட்டைகளாக பார்த்து எடுத்து இரண்டு குண்டான்களில் வைத்துக்கொண்டு, மிச்சத்தை கட்டைகள் இழுத்துவிடப்பட்ட அடுப்பிலேயே விட்டுவிட்டு எதிர்கொண்டுவந்த தனத்திடம் கொடுத்தாள் அப்ரஞ்ஜி. நினைத்ததைவிட வேகமாக முடித்துவிட்ட சந்தோஷத்தில் விரிந்த உதடுகளில் காவிபடர்ந்த பற்களிடையே சிரிப்பாக பெற்றுக்கொண்டாள் தனம். அப்ரஞ்ஜி என்றாலே வேகம்தான். எத்தனை பேருக்கு எத்தனை வகை என்றாலும் சொன்ன நேரத்தில் செய்துமுடித்துவிடக் கூடியவள்.

தனத்தின் மகள் பிருந்தாவிற்கு சந்தோஷில்பெரிய செலவழித்து பிறந்த ஆண்குழந்தையை கவனிக்க சென்றது அப்ரஞ்ஜிதான். ராசியான கையென்று வீட்டிற்கு வந்ததும் குழந்தைக்கு முதல் சக்கரைத் தண்ணி கொடுத்தது அப்ரஞ்ஜிதான். முன்பெல்லாம் பிரசவத்திற்கு அவளைதான் அழைத்தார்கள். மொட்ட வீட்டு நாகமணி, கீழத்தெரு காவேரியம்மாளுக்கு பத்து பத்து பிள்ளைகள் சளைக்காமல் பிரசவம் பார்த்தாள், பிற்பாடு ஆஸ்பத்திரி, கிளினிக் என வந்துவிட அவளுக்கு உடல் ஒத்துழைப்பு குறைந்துவிட பார்பதை நிறுத்திக்கொண்டாள். ஆனால் இன்றைக்கும் குழந்தைக்கு முதல் சக்கரைத்தண்ணி அவள் கையால்தான், பிறகு குழந்தையை குளிப்பாட்டுவதிலிருந்து பீதுணி அள்ளுவதுவரை அவள்தான் செய்வாள்.

பஞ்சுபஞ்சாக பறக்கும் வெள்ளைமுடி, லேசான கூன்விழுந்த முதுகு, இறுக்கிகட்டப்பட்ட சேலையில் அப்ரஞ்சியை பார்க்க தொண்ணூறு வயது என்று சொன்னால் யாராலும் நம்பமுடியாது. இதுவரை அப்ரஞ்ஜி நோய், நொடியென்று படுத்தது கிடையாது. தண்ணீர் இறைப்பது, இந்த தெருவில் நாலு வீடுகளுக்கு வாசல் தெளித்து கோலம் போடுவதும், துணிதுவைப்பதும் இப்போதும் செய்கிறாள். கோரா சாயம் வெளுக்க கும்பகோணத்தில் இப்போது கூப்பிட்டாலும் போய் செய்வாள். லெட்சுமி வீட்டில் முன்பு தொடர்ச்சியாக செய்துகொண்டிருந்தாள். நாகமணி இருக்கும் வரை அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள். நல்லா பொறுப்பா வேலைய பாக்க்குற அப்ரஞ்ஜி நீ, அங்க கூப்பிறாங்க இங்க் கூப்பிறாங்கனு எங்கேயும் போயிற கூடாது ஆமா, நம்ம கூடவே இருக்கனும்என்பாள். ஆபத்துல உதவுற நா உன்னைய விட்டு எங்க போயிறப்போறேன் நாவமணிஎன்று அப்ரஞ்ஜியும் சளைக்காமல் கூறுவாள். அவளின் பத்து பிள்ளைகளையும் பிரசவம் பார்த்து வளர்த்தவள் அன்றுமுதல் என்ன விசேஷங்கள் என்றாலும் அவள்தான் முன் நிற்பாள்.

கொழுக்கட்டைகளை வாங்கிகொண்ட தனம், ‘அப்ரஞ்ஜி, நேத்து சொன்னமாரி இன்னிக்கு நாள் நல்லாயிருக்கு மொன பொங்கல் வச்சிடு, இந்தா காசுஎன்று பணத்தை கொடுத்துவிட்டுச் சென்றாள்.

சரிடியம்மா, கூலுத்தி முடிஞ்சொன்ன, பதினொருபன்னன்டு மணிக்கா வெச்சுறேன்’.

எப்போதும் மொனபொங்கல் செய்வது அப்ரஞ்ஜிதான். லச்சுமியம்மா வீட்டு கொல்லையில் மூன்று செங்கல்லும், ஒரு சிறு சட்டியும், ஒரு செம்படமும் இருக்கின்றன அந்த தெரு மொனைக்கு தோதாக. கொஞ்சம் அரிசியும், வெல்லமும் வாங்கி அந்த சின்ன சட்டியில் போட்டு மூன்றுகல்லில் அடுப்பு மூட்டி கொதித்ததும் வடித்து மொகனையிலேயே உள்ள திரிசூலமோ, பிள்ளையாரோ, அல்லது வேறு ஏதேனும் சாமிக்கோ படைத்துவிட்டு, சுற்றியிருக்கும் பிள்ளைகளுக்கு கொடுத்ததுபோக மிச்சத்தை அங்கிருக்கும் சிறுகல்லில் வைத்துவிட்டு வருவாள். தெரு தாண்டி புருஷன் வீட்டிற்கு பிறந்த குழந்தையோடு செல்பவளுக்கு, குழந்தைக்கும், அவளுக்கும் எந்த காத்து கருப்பு அண்டாமலிருக்க மொனபொங்கல் செய்வது ஐதீகம்.

மொனபொங்கல் என்றில்லை வளைகாப்பு, காதுகுத்து, கல்யாணம், கருமாதி இப்படி விசேஷ நாட்களில் முறையாக செய்ய‌ அப்ரஞ்ஜி இல்லாமல் முடியாது. சில நேரங்களில் எல்லா வீட்டு விசேஷங்கள் ஒரேநாளில் அமைந்துவிட்டால் எல்லா வீட்டிற்கும் போகமுடியாமல் அவள் பாடு திண்டாட்டமாக இருக்கும். இதுபோக‌ பாவில் சிக்கல் எடுக்க, சாயம்போட, பிறந்த குழந்தைக்கு குளிப்பாட்ட, தீட்டுக்கழிக்க, காட்டேரி பூசை செய்ய, அரிவுரி அம்மன் பூசை செய்ய எல்லாவற்றிற்கும் அப்ரஞ்ஜிதான்.

தீபாவளி சீசனில் பட்டுஜவளி கும்பகோணத்தில் அமோகமாக இருக்கும். வேலையும் அதற்குதகுந்தாற் போல அவளுக்கு இருக்கும். வீதியில் பாவுபோடும் சம‌யங்களில் வாசு ஆள்சொல்லி அனுப்பிவிடுவார். அப்ரஞ்ஜியின் விரல்களின் அசைவுகளுக்கு மட்டுமே பாவின் சிக்கல்கள் விரைந்து நேராகும்.

பெண் பிரசவத்தின்போது. அப்ரஞ்ஜிபச்ச உடம்பு, பொண்ண பாத்துக்கஎன்பார்கள் இரண்டுநாள் வீட்டோடு இருந்து முதுகு, கால், தொடையில் எண்ணைவிட்டு நீவி பச்ச உடம்பு பெண்ணை சுகப்படுத்துவது அவளுக்கு கைவந்த கலை. குழந்தை பிறந்ததும் கவனித்தது போக பதினோராம் நாளோ அல்லது பதிமூன்றாம் நாளிலோ அரிவுரிஅம்மன் பூசை இருக்கும். வீட்டின் கிழக்கு பார்த்த சுவரில் கண்மையால் நான்கு குமிழுடைய கோலம்போட்டு இரண்டு பக்கம் பொம்மைகள் வரைந்து வைத்து - குழந்தை அதைபார்த்து சிரிக்கும் என்பாள். அதற்கு ஐந்து வகை காய்கறியுடன் பூசை செய்வாள் அப்ரஞ்ஜி.
 
குழந்தை ரொம்ப அழுதால் அப்ரஞ்ஜியை கூப்பிட்டுவிடுவார்கள். எண்ணெய் தேய்த்து நீவி , சாம்பிராணி போட்டு பாட்டு படிப்பாள்

தாள மாமையா - தசரத
ராம சந்திரையா

கஞ்சி வரதையா ‍- எனை

கொஞ்சி வருதையா

மடியில் வைத்து குழந்தைக்கு லட்டுபிடிப்பது போல காட்டி அப்ரஞ்சி பாடும் போது குழந்தை சொக்கி சிரிப்பதை கண்டு ஊரே மகிழ்ந்துபோகும்.

செத்தவர்களின் திதிநாள், பொங்கபடைப்பை அய்யர் வந்து கூறுவதற்கு முன்பே ஞாபகப்படுத்துவது அப்ரஞ்ஜியாகத்தான் இருக்கும். சரியான நாளில் அவளின் கனவில் வந்து இறந்தவர்கள் சோறு கேட்டுவிடுவார்கள். சோறு கேட்டபின் பூஜை வைக்காமல் விட்டுவிட முடியாதே? திதி வைக்கும்நாளில் செத்தவர்கள் அன்றிரவு அவர்கள் வீட்டிற்கு வருவது அவளுக்கு மட்டுமே தெரியும். தனக்கு பிடித்ததை வைத்து படைத்தற்கு நன்றி சொல்லிவிட்டோ அல்லது பிடிக்கவில்லை என்று அவளிடம் திட்டிவிட்டோ செல்வார்கள். இருபது வருடம் முன்பு ராஜேஸ்வரியின் எட்டுவயது மகள் மஞ்சகாமாலை நோய்வந்து செத்தபின் ஒவ்வொரு சித்திரையிலும் அந்த நட்சத்திரத்தில் நாள் மாறாமல் அவள் வந்து அப்ரஞ்சியிடம் கூல் ஊற்றச் சொல்வாள். இன்று அந்த கூல் ஊற்றும் நாள்.
தனம் கொடுத்த பழையதை எடுத்து செல்பின் மீது வைத்துவிட்டு அரசலாறிற்கு குளிக்க கிளம்பும்போது இறந்த ராஜேஸ்வரியின் மகளை நினைத்துக்கொண்டாள். நேற்று மாதிரி இருக்கிறது அதற்குள் இருபதுஐந்து வருடஙகள் ஆகிவிட்டன. சட்டென போய்விட்டாள். அவளிடம் பேச்சு கொடுத்து மாளாது. அத்தனை சுட்டி. கிள்ளிபோடும் வெத்தலை தொடுமைகள் அவளுக்கு பிடிக்கும். பாட்டி பாட்டி என்று அவள் பின்னாலெயே சுற்றுவாள். அவள்தான் கேட்டாள் அப்ரஞ்ஜின்னா என்ன பாட்டி என்று.

ம்.. தங்கம்டி தங்ககட்டி பாத்திருக்கியா அதான் அர்த்தம்

அப்ப தங்க க‌ட்டியா நீஎன்று கூறிவிட்டு சீவலை வாயில் போட்டபடி ஓடினாள்.

நாகமணி வீட்டில் சாயம் போட்டுக்கொண்டிருந்த சின்னையாவைத்தான் அப்ரஞ்ஜிக்கு கட்டிவைத்தார்கள். உண்மை பெயரான செல்லம்மா, பருவத்தில் ‍ கல்யாணம் கட்டிவந்த சமயத்தில், அவள் அழகில் மயங்கி அப்ரஞ்ஜி என்று மாமியாகாரி செல்லமாக அழைக்க அதுவே நிலைத்துப் போனது. கூற‌ப்பட்டு சேலையில் அவ்வளவு பாந்தமாக இருந்தாளாம். சின்னையாவை பார்த்து, இந்த பழத்துக்கா இவளை கட்டிக்கொடுத்தார்கள் என்று கேட்காதவர்கள் இல்லையாம். மாமியாகாரி போடி, உங்க வேலைய பாத்துக்கிட்டுஎன்பாள்.

என்ன சாபமோ, கொடுப்பினையோ தெரியவில்லை, கொஞ்ச நாளில் சின்னையா சித்தபிரமை பிடித்துபோனது. வறுமையில் உழன்ற அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டாள். தெருக்களிலேயே அழைந்துகொண்டிருந்தவன் அப்புறம் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவில்லை.

அவன் மூலமாக பிற‌ந்த அவளின் மகள் அம்புஜம் வளர்ந்தபின் இருக்கும் காசை வைத்து தாராசுரத்தில் கட்டிக்கொடுத்தாள். கொஞ்சநாளில் அவளும் காணாமல் போனாள். ஆற்றில் விழுந்து செத்துவிட்டதாகவும், அவ்வூரின் வியாபாரி ஒருவரை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும், அவளின் ஒரு கொழுந்தனை வைத்துக் கொண்டு அம்மாபேட்டையில் குடித்தனம் நடத்துவதாகவும் பேச்சு அடிப்பட்டது. அப்ரஞ்ஜி என்னஏது என்று புரியாமல் காலத்தை ஓட்டினாள்.

சின்னனையா காணாமல் போனபோதும், அம்புஜம் விட்டுபோன போதும் ஆறுதலாய் இருந்தவர்கள் நாகமணியும் காவேரியும் தான். ஒன்னுக்கும் கவலபடாத ஒன்னைய அப்படியே விட்டுடமாட்டோம்என்று ஆறுதல் சொன்னார்கள். மூன்று தலைமுறைகள் தாண்டியும் இப்போதும் அதே பாச‌த்துடன்தான் பார்க்கிறார்கள். அவர்கள் போய் பல ஆண்டுகள் ஆனபிறகும், அவர்கள் சந்ததியர்கள் லெட்சுமி, மல்லிகா, மீனாட்சி என்று அத்தனை பேரும் அவளுக்கு துணையாக இருக்கிறார்கள். அவர்கள் போனபின்பும் அவர்களின் மகன்கள் மகள்கள் அவர்களின் மகன்கள், மகள்கள் என்று பார்த்துவிட்டாள், எல்லாருக்கும் அவள் பிரியம்தான்.

இத்தனை காலத்திலும் தலைசுற்றலை தவிர‌ நோய்நொடி என்று வந்து படுத்ததுகிடையாது. மற்றவர்களுக்கு பாரமாக இருந்துவிடுவோமோ என்ற பயம் அவளுக்கு இருந்தாலும் அப்படி நம்பள ஆண்டவன் வைக்கமாட்டான் என்று திடமாக நம்பியிருந்தாள்’. அவளுக்கு இன்றையதினம் இற்றோடு. இந்த நெசவாளர் குடியிருப்பில் வேலை செய்து கிடைக்கும் சொற்ப பணத்தில் அவர்கள் வீடுகளிலேயே ஆங்காங்கே தங்கிகொண்டு வாழ்க்கை நடத்திவந்தாள்.

பாதியிருட்டிலேயே அரசலாற்றில் குளித்துவிட்டு ஈரம் சொட்ட இன்று செய்யவேண்டிய கூழுற்றுதல், மொனபொங்கல் வேலைகளை பற்றி நினைத்தபடி நிதானமாக நடந்துவந்தாள், துவைத்த துணிகள் ஈரத்தோடு தோள்களில். சொட்டிய துளிகள் அவள் நடந்துவந்த பாதையை காட்டின. ரோட்டில் அந்த நேரத்தில் யாரும் இருக்கபோவதில்லை. மும்மூர்த்தி விநாயகர் கோவில் அருகில் வந்தபோது தலைசுற்றலாக‌ வந்தது. விநாயகரை நின்று வழிபட்டு செல்வது வழக்கம். முன்னாடி வச்சலா மட்டுமே பால் வாங்க குவளையோடு சென்றுகொண்டிருந்தாள். அவளை கூப்பிட நினைத்தாள் ஆனால் கொஞ்ச நேரத்தில் சட்டென மயங்கி விழுந்தாள்.

பொழுதுபுலர்ந்தபோது அப்ரஞ்ஜி மயங்கி விழுந்து கிடப்பது தெரிய, ரோட்டில் சென்றவர்கள் பயந்து வீடுகளிலும் கடைகளிலும் ஏறிக்கொண்டார்கள். டீக்குடிக்க வந்த ரெங்கா பார்த்துவிட்டு நாகமணியின் கொள்ளுபேரன் தினேஷிடம் பட்டுநூல்காரம்மா மய‌ங்கி விழுந்துகிடக்குஎன்ற செய்தி சொன்னான். வெய்யில் ஏறி அப்ரஞ்ஜி மேல் மென்மையாக அடித்துக்கொண்டிருந்தது. தெரு முழுவதும் இதே பேச்சாக இருந்தது. அப்ரஞ்ஜி இப்படி ஆயிட்டாளே என்றார்கள், அவளுக்கு நல்ல மனசு அதான் இப்படி சட்னு போய்டா என்றார்கள்.

சைக்கிள் மிதித்து வந்த தினேஷ், உதட்டோரம் ரத்தகரையைப் பார்த்துவிட்டு முனிசிபாலிட்டிக்கு உடனே தகவல் சொன்னான். கொஞ்ச நேரத்தில் முனிசிபாலிட்டிகாரர்கள் வந்து வண்டியில் தூக்கி போட்டு சென்றபின்னே கடைகளிலும், வீடுகளிலும் நின்றவர்கள் இறங்கி நடந்து செல்ல ஆரம்பித்தார்கள்.

_o0o_

Wednesday, August 17, 2011

சொல்வனம் 54ல் என் ஒரு கதை!!

அன்பர்களுக்கு,

ரொம்ப நாளாக மனதில் இருக்கும் விசயம் இது. நமக்கு வலியவந்து உதவும் வயதானவர்களை, அவர்கள் வெள்ளேத்தியாக இருக்கும் ஒரே காரண‌த்தினால், அவர்களின் உதவிகள், உழைப்பை உருஞ்சிவிட்டு தூக்கியெரியும் செயலை என்னவென்று சொல்வது. அதைதான் முடிந்தவரை சொல்லியிருக்கிறேன்.

இக்கதை மறுபடியும் சொல்வனத்தில் வந்ததில் பெருமையடைகிறேன்.



http://solvanam.com/?p=16360

_o0o_

Friday, May 28, 2010

'சொல்வன'த்தில் என் சிறுகதை





சொல்வனத்தின் இந்த இதழில் என் சிறுகதை வெளியாகியுள்ளது, நன்பர்களே, படித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.


லிங்க்:
http://solvanam.com/?p=8563


- o0o -