அன்புள்ள திரு அசோக்குமார்,
இன்று உங்கள் குதிரை மரம் & பிற கதைகள் வாசித்து முடித்தேன். சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய 90 புத்தகங்களுள் ஒளிந்திருந்து இப்போதுதான் வாசிக்கச் சிக்கியது.
எந்த பரிந்துரையின்படி வாங்கினேன் என்று நினைவில்லை. எனவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசிக்கத் தொடங்கினேன். முதல் கதையிலேயே ஒரு அற்புதமான படைப்பினுள் நுழைந்தது தெரிந்தது. அனைத்து கதைகளும் அதே உயர் வாசிப்பனுபவத்தைத் தந்தன. எதிர்பாராமல் அமையும் நல்நிகழ்வு தரும் பரவசம் இன்னும் மீதமுள்ளது. சரளமான மொழிநடை. இயல்பான உரையாடல்கள். நுணுக்கமான பாத்திர படைப்புகள். கூரிய வாழ்க்கை அவதானிப்புகள்.
அதிலும் சிகரமாக குதிரைமரம் குறுநாவல். குடும்பத்தின் அடிப்படை தேவைகளுக்கான பொருளை ஈட்ட இயலாத குடும்பத் தலைவனின் அவலம், படைப்பில் இருந்து உற்பத்திக்கு மாறும் உலகில் உண்டாகும் சமூக சீர்குலைவு, கணவனின் மகிழ்ச்சிக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் இடையே ஊசலாடும் மனைவி என் பல தளங்களில் சஞ்சரிக்கிறது. படைப்பாளியின் படைப்பூக்க மகிழ்ச்சியும் வீழ்ச்சியும் தந்தை மகன் ராமர் கதை மூலம் மனம் தொடுகிறது. எவ்வளவு ஆழமான நுணுக்கமான சித்தரிப்பு. வறுமையிலும் பசியில் வாடாமல் காக்கும் விலையில்லா ரேஷன் அரிசி, வறுமையிலும் பீஸ் வாங்கும் பள்ளியில் பசங்க படிப்பது என ஒரு வரியில் வந்து செல்லும் செய்திகள் பல.



