Showing posts with label அவனுக்கு பிடித்த நட்சத்திரம். Show all posts
Showing posts with label அவனுக்கு பிடித்த நட்சத்திரம். Show all posts

Friday, October 18, 2019

அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அசோகமித்திரன் சிறுகதை வாசிப்பனுபவம்




எளிய மனிதவாழ்வில் நடக்கும் கனமான சம்பவங்கள் பேய்க்காற்றில் அறுந்து நொடியில் வானத்து பரப்பிலிருந்து காணாமல் போய்விடும் பட்டம் போன்றது. ஆனால் அதன் நினைவுகள் முகத்து வடுக்கள் போல நம் மனதிலிருந்து நீங்குவதேயில்லை. அசோகமித்திரன் எழுதிய கதைகளில் இம்மாதிரியான பொதுத்தன்மை ஒன்றுண்டு. மிக எளிய மக்களின் அன்றாட பிரச்சனைகளை கொண்ட கதைகள் என்கிற பிம்பத்திற்கு பின்னால், தினசரி வறுமையும், தோல்வி பற்றிய சித்திரமும், கைவிடப்பட்ட நிலையையும் எவ்வித உணர்ச்சிகரமான எதிர்வினைகளற்று சொல்லப்பட்டிருக்கும். உணர்ச்சிகரமற்ற என்பதை இங்கு அழுத்திச் சொல்லவேண்டும். ஏனெனில் உத்வேகத்துடன் சொல்லப்படுதலை, உச்சஸ்தாதியில் குரலெடுப்பதை முற்றிலுமாக தவிர்த்து, அப்படியானவைகளைகூட சாதாரண சம்பவங்களோடு பிணைத்து மனிதர்கள் இவ்வளவுதான் என்று சொல்லிவிடுபவர் அசோகமித்திரன். கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் இது நிகழ்கிறது. ஆனால் அதே அன்றாடப் பிரச்சனைகளை மெல்லிய நகைச்சுவை பின்ன சொல்லிவிடுவதில் இருக்கும் அழகு அசோகமித்திரனின் முத்திரை என்று சொல்லலாம்.