Friday, December 8, 2017

கனவு (சிறுகதை)


எனக்கு கனவுகள் ஏன் தொடர்ந்து வருகின்றன என தெரியவில்லை. அதனாலேயே கனவுகளைப் பற்றி நாளெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன். அவைகள் நம் ஆழ்மனதின் வெளிப்பாடுகள் என்று எல்லாவற்றிலும் அழுத்தமாக சொல்லப்படுகின்றன. உண்மையில் கனவுகள் எனக்கு ஆழ்ந்த அமைதியையும், நிம்மதியின்மையையும் ஒருங்கே அளித்திருக்கின்றன. சில கனவுகள் அதீத கற்பனைகள் கொண்ட ஃபென்டசி கதை போன்றும், நீண்டு நெடிய பயணத்தை மேற்கொண்டது போலவும் அப்படியே நிறைவிருக்கும். சில பதறவைத்து காலமெல்லாம் இந்த பயத்துடன் வாழப்போகிறேனா என்கிற அலைகழிப்பை கொடுப்பதாக இருக்கும். ஒரு கனவின் தொடர்ச்சியை அடுத்தடுத்த நாட்களிலும் கண்டிருக்கிறேன். ஒரு மாதம் தொடர்ந்து கண்டதுகூட நினைவிருக்கிறது. ஒவ்வொரு நாளும் கனவுகள் ஓவ்வொரு விதமாக இருக்கும். கனவை நிறுத்த முடிந்ததில்லை. ஏன் கனவுகளை நிறுத்த முயற்சிக்க வேண்டும், அதன் போக்கில் இருந்துவிட்டு போகட்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் மற்றவர்களுக்கு இந்த கனவுகளை பயஉணர்ச்சியோடே பார்க்கிறார்கள். தலையில் தூக்கிவைக்கப்பட்ட நீர்குடம் போல பாரத்தை நம்மீது இறக்குபவை இந்த கனவுகள், இறக்கி வைத்தபின் கிடைக்கும் பாரமின்னையின் சுகவும் கூடவே அளிப்பவை. ஆகவே எந்தவித தொந்தரவுகள் செய்யாமல் அவைகளை அப்படியே விட்டுவிட நினைக்கிறேன்