பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் இன்றைய தேதியில் பைக் வைத்திருப்பது ஒரு கெளரவமான விஷயமாக கொள்ளப்படுவதில்லை என்றார். அப்போது உண்மையில்லை என்று தோன்றியது. சில வருடங்களிலேயே
பல்வேறு மாடல்கள் வந்து பைக் என்பது சாதாரண ஒரு நுகர்வுப் பொருளாக மாறி எல்லோர் கையில்
இருந்தது. ஒரு புதுமாப்பிள்ளைக்கு பைக் வாங்கும் வரதட்சனை பந்தாக்கள் பெரிய கவனிப்புகளுக்கு
இல்லாமல் போய்விட்டது. நான் சிறுவனாக
இருந்தபோது என் வீட்டிற்கு கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு மாமாவிடம் ஒரு டிவிஎஸ் வண்டி இருந்தது.
அதை அவர் தினம் காலையில் துடைப்பதும், அந்த வழிய எடுத்துச் செல்ல குளத்திலிருந்து
கலிமண்ணை எடுத்துவந்து கொட்டி கெட்டி படுத்தியிருந்தார். மழைகாலத்தில் சாதாரண மணலை
போட்டால் கரைந்து ஓடிவிடும் என்பது அவரது எண்ணம். அந்த நேரம் அந்த தெருவில் இருந்தவர்களிடம்
சைக்கிள் தான் இருந்தது. என் அப்பா ஒரு சைக்கிள் வைத்திருந்தார். அதை ஓட்டவே அவருக்கு
சிரமாக இருந்தது. ஆனால் புல்லட், லம்படார்
போன்ற கனமான வண்டிகளை வைத்திருந்தவர்கள் பரம்பரை வண்டி ஓட்டிகளாகவோ அல்லது பெரிய பலசாலியாக
அல்லது வைத்திருக்கும் பணத்தை பந்தாவிற்கே செலவழிக்கும் ஒரு வகையினர் மட்டுமே வைத்திருந்தனர்.

