தி.ஜானகிராமன் எழுத்துக்களில் இருக்கும் உரையாடல்தன்மை வாசகனை கட்டிபோட்டுவிடக்கூடியது. அவைகள் பேசிப்பேசியே காலத்தை கொண்டாட நினைக்கும் மனிதனின் வார்த்தைகள் என்பதால் இருக்கலாம். இடையூராது சளசளத்து ஓடும் நீர் போன்ற வார்த்தைகள். தோல்வியை மறைக்கும் லாவகமும், வெற்றியை ருசித்தேயிராத வரண்ட வண்டல்மண் போன்ற மனித புலம்பல்கள். அவர் எழுதிய கதைகளில் சிறந்த கதைகளாக பாயாசம், சிலிர்ப்பு, பரதேசி வந்தான், அக்பர் சாஸ்திரி, பிடிகரணை போன்றவைகளைச் சொல்லலாம். அவர் எழுதியவைகளில் அதிகம் பேசப்படாத சில கதைகளும் உண்டு. நுண்வாசிப்பில் மட்டுமே புரிந்துக் கொள்ளகூடியவையாகவும், ஆழ்மன மெளனங்களை வெளிப்படுபவையாகவும் இருக்கும் கதைகள் சில உண்டு. பசி ஆறிற்று, காண்டாமணி, சாப்பாடு போட்டு 40 ரூபாய் போன்ற கதைகள்.
