Tuesday, February 18, 2020

சி.எம்.முத்துவின் மிராசு நாவல் விமர்சனம் - கலைச்செல்வி


ஒரு இலக்கிய நிகழ்வில் மீண்டும் மீண்டும் பேசத்துாண்டுவது இலக்கியம் ஏன்? எதற்காக? என்பது குறித்துதான். அரங்குக்கு வெளியே தஞ்சை சுறுசுறுப்பாக மந்தமாக இளகுவாக எரிச்சலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இடைவிடாத பயணத்திலிருக்கிறார்கள். போக்குவரத்து நெரிகிறது. அலுவலகம் எதன்பொருட்டோ விடுமுறையிலும் இயங்குகிறது. இதிலெ்லாம் தற்சமயத்துக்கு அக்கறையின்றி எதன்பொருட்டோ நாம் இருபது பேராவது புறவுலகை விட்டு தனித்து இயங்க இங்கு கூடியிருக்கிறோம். இலக்கியக்கூட்டங்கள் குறித்து கேள்விப்படுபவர்கள் கூட  இது உப்புக்காகுமா..? புளிக்காகுமா..? என்று நம்மை நகர்த்தி விட்டு ஓடி மறைகிறார்கள். பிறகேன் இலக்கியம்? ஒரே வார்த்தையில் கூற வேண்டுமெனில் நிகழ் வாழ்வுக்கும் மேலதிகமான விரிந்த வாழ்வை இங்கே வாழ முடிகிறது. அதனை மொழியின் வழியே புனைந்தளிக்கும் மயக்கம்தான் இலக்கியம். அதுதான் நம்மை கடத்திக் கொண்டு வந்து இங்கு சேர்த்திருக்கிறது. இலக்கியம் புனைவு மட்டுமல்ல. அது கற்பனையை கொண்டு போடப்பட்ட அறிவுக்கான பாதை. இங்கு பலரின் அனுபவங்களை இலக்கியத்தின் வழி ஒருவரே அடைந்து விடலாம். நிகழ்ந்த வாழ்க்கையிலிருந்து நிகழவிருக்கும் வாழ்க்கைக்கு இலக்கியத்தில் ஏறி சென்று விடலாம். அதுதான் போதை. அதுதான் அதன் பாதை.அந்த பாதையில்தான் சி.எம்.முத்துவும் பயணிக்கிறார். 
பழந்தஞ்சை என்றாலே பொதுவாக மனதில் தோன்றுவது ஆண்டையும் அடிமையுமான வாழ்க்கைமுறை. மிட்டா மிராசுகளின் டாம்பீகத்தனமும் ஏக்கர்கணக்கில் திரண்டுக்கிடக்கும் அவர்களின் சொத்துகளும், விளைந்து கிடக்கும் வயல்களும்தான். சேது காளிங்கராயர்தான் மிராசு. அவரின் மனைவி ராஜாமணி அம்மாள். அவர்களுக்கு மூன்று வாரிசுகள். ஆண் இரண்டும் பெண் ஒன்றுமாக மூன்று வாரிசுகள். தவிர, ராஜாமணியின் அண்ணன் குடும்பம், காளிங்கராயரின் தங்கைக் குடும்பம் என்று மூத்த தலைமுறை வாழ்க்கை. காலையில் எழுந்ததும் மொடமொடப்பான சட்டையை தேடியெடுத்து போடுவதிலிருந்து, அழைத்தக் குரலுக்கு கார்வாரி, கணக்குப்பிள்ளையிலிருந்து ராஜாமணி அம்மாள் வரைக்கும் என்னங்க.. என்னங்க.. என்று நிற்க வைக்கும் மிடுக்கான வாழ்க்கை அவருடையது. கூடவே தொடுப்பு வேறு.

மிராசுக்கு எழுதப்படிக்க தெரியாது. ஆனால் அது குறித்து அவருக்கு கூச்சமேதும் இல்லை. கூடவே கணக்குப்பிள்ளை இல்லாதிருப்பதுதான் வெட்ககேடான விஷயம். நல்லவேளையாக அவருக்கு எல்லாமே வாய்த்திருக்கிறது. ராஜாமணியின் பிறந்த வீடு காலியான பெருங்காயடப்பாவை போலதான். குடிக்கும் கூத்தியாளுக்குமாக அழிந்துபோன பிறகு வெற்று பெயரைக் கொண்டு நகர்கிறது. சேது காளிங்கராயர் கிளம்ப வேண்டுமென்றால், மாடுகள் பூட்டிய வண்டி தயாராகி விடும். சுப்பையாவுக்கு அந்த சாத்தியம் இருக்கவில்லை. ஓடும்பிள்ளை ஒடியாரும் பிள்ளையான கார்வாரி தனது பெரிய இடத்து அந்தஸ்தை சமூகத்தில் எப்படி பிரயோகித்திருப்பார் என தெரியவில்லை. மிராசுவின் நல்லது கெட்டதுகளை அருகிலிருந்து பார்ப்பவர் அவர். கணக்குபிள்ளையும்தான். மிராசுக்கு எழுதப்படிக்க தெரியாது. எல்லாவற்றையும் கணக்குப்பிள்ளைதான் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுதுான் கவுரவம். காளிங்கராயரின் பிள்ளைகளும் படிக்கவில்லை. அது கொஞ்சம் மனவுறுத்தலாக இருக்கிறது சேதுவுக்கு. அந்த நேரம் ஊரார் பிள்ளைகளின் கல்விக்கு வாத்தியார் ஒருவரை ஏற்பாடு செய்கிறார்கள். தன்னை கலந்துக் கொள்ளாமல் செய்து விட்டது குறித்து அவருக்கு வருத்தம். தன்னிடம் உதவிக்கோரி வந்த வைரமுத்து வம்பாளியாரிடம் தன் ஆதங்கத்தை அதட்டலாக கொட்டுகிறார்.

அதே சமயம் ஊராரி்டம் நயந்தும் கொள்கிறார். கோவில் எடுப்பிக்க பணவுதவி செய்ய முன்வருகிறார். பணம் போதாமைக்கு மைத்துனரிடம் கடனாக வாங்கிக் தருகிறார். மைத்துனருக்கும் அவருக்குமிருக்கும் உறவு, மரியாதை, அன்பு இவையெல்லாம் அபிரிதமாக எழுதப்பட்டுள்ளது. தன் அண்ணன் சுப்பையா வரும்போது இந்த உபசரணையெல்லாம் இல்லையே என்று ராஜாமணிக்கு வருத்தம். அதை கணவரிடம் வெளிப்படுத்தும்போது, கத்தி பிடுங்கி மனைவியை அடக்கினாலும் பணம் கண்ட பக்கம் உறவு நீள்வதை அவர் உணராமலில்லை.

சுதந்திரத்திற்கு பிறகான காலக்கட்டம் அது. மைத்துனரிடம் அடிக்கடி அரசியல் பேசுகிறார். கம்யூனிஸ்ட் வருகை அவர்களுக்கு கலக்கம் ஏற்படுத்துகிறது. ராசாசியின் குலக்கல்வியை சாடுகின்றனர். காமாராஜு நாடாரின் மீது நம்பிக்கை இருக்கிறது. இருவரும் பல சந்தர்ப்பங்களில் அரசியல் பேசுகிறார்கள். ஆனால் அன்றைய அரசியலில் பேச எத்தனையோ இருந்தும் மீண்டும் மீண்டும் பேசிய அரசியலே பேசப்படுகிறது. காலம் மாறுகிறது. காட்சிகள் எல்லாம் மாறுகிறது. பெரியவன் அசோகன் சரியாக பிழைக்கவில்லை. இரண்டாமானவன் வெங்கடேசன் பிழைத்துக் கொள்கிறாள். ஒரே மகள் கண்ணுக்கெதிரில் வாழாமல் போய் விடுகிறாள். மிராசு என்ற வார்த்தை அர்த்தமிழந்துக் கொண்டே போகிறது. ராஜாமணியும் மிராசுவும் தனித்திருக்கும் சமயத்தில் பின்கட்டு சுவர் பழுதடைந்து விழ, ராஜாமணி என்னவென்று பார்க்க எழுந்திருக்க, போக வேண்டாம் ராஜாமணி.. நான் இருக்கறவரைக்கும் எனக்கு நீ வேணும்.. பின்கட்டு செவுறுதான் விழுந்திருக்கும்.. அடுத்ததா சமயக்கட்டுச்சொவரு வுளுந்துடும்..“ என்பதை கால மாற்றத்தின் குறியீடாக எடுத்துக் கொள்ளலாம்.

நாவல் மூன்றிலிருப்பகுதி தெளிவும் நிதானமுமாக சொல்லப்பட்டுள்ளது. பக்கத்திற்கொரு பழமொழியும் சொலவடையும் வாசிப்பிற்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன. தஞ்சை விவசாயத்தை, விவசாயிகளை, சமூக மாற்றங்களை, விவசாய மாற்றங்களை பேசும் தெளிவான வரலாற்றுப்புனைவு என்று இந்நாவலைக் கூறலாம். கூடவே கள்ளர் சமூகத்தாரின் வரலாற்றையும். முத்து அவர்களுக்கு இந்நீண்ட நெடிய வரலாறு நன்றாக தெரிந்திருக்கிறது. அதை நாவலாக்கவும் தெரிந்திருக்கிறது. சொல்ல வந்த விஷயங்களை சொல்லியாக வேண்டுமே என்ற தவிப்பில் அதிகப்படியான தகவல்களும் உண்டு.  தன்னிலை மறந்து எழும் எழுத்து, தன்னிலைக்கு திரும்பும் சிற்சில தருணங்கள் அவை. உதாரணமாக இழுப்பு நோய் கண்ட சிறுவனை வைத்துக் கொண்டு தாய் உட்பட அனைவரும் ஆக வேண்டிய விஷயங்களை பார்க்காமல் பேசிக் கொண்டே இருப்பதை கூறலாம். மற்றபடி வாசிப்புக்கு அலுப்பு ஏற்படுத்தாத எழுத்து முத்து அவர்களுடையது. நுண்ணிய தகவல்களை அலுக்காமல் தருகிறார். அதன் மூலம் காட்சிகளை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. அது எழுத்தாளரின் வெற்றியே.

நாவலின் மூன்றாவது பகுதி, மற்ற இரு பகுதிகளை போல விரிவானதாக கூறப்படவில்லை. அவரே கூறுவது போல பக்கங்கள் ஆயிரத்தை கடந்து விடுமோ என்ற தவிப்பாக இருக்கலாம். பெரும்நிகழ்வுகள் கூட ஒருவரி செய்திகள் போல கடந்து செல்கின்றன. அதுவே சிலசமயம் டாகுமெண்டரி போல ஆகி விடுகிறது. ஆனால் அது வெகு சிலசமயம் மட்டுமே. நாவலின் இறுதியில் பதிய வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.  பசுமைப்புரட்சி விவசாயத்திற்கும், விவசாயிக்கும் செய்தவை எவை? செயற்கை விவசாயம் கொண்டு வந்தவை எவை ? கொண்டு சென்றவை யாதை? விவசாயிகள், “கடனாளிகள்“ என்ற நிலைப்பாட்டுக்குள் வந்ததெப்படி? ரியல் எஸ்டேட் வணிகம் உள்ளே நுழைந்தது என பல பகுதிகள் தெளிவாக வந்திருக்க வேண்டும். நாவலை இரண்டு பாகங்களாக வெளியிட்டு, இரண்டாம் பாகத்தை அசோகனிலிருந்து ஆரம்பித்து, தற்காலம் வரைக்கும் சொல்ல அத்தனை செய்திகளுண்டு. அதற்குரிய அத்தனை மூலப்பொருட்களும் முத்து அவர்களிடமும் உண்டு. அவரிடம் அதை எதிர்பார்க்கும் உரிமையும் எனக்குண்டு.

பொதுவாக வாழ்க்கை எந்த அர்த்தத்தையும் மையத்தையும் நோக்கிப் பயணிப்பதில்லை. நாம்தான் சூழலுக்கேற்ப அர்த்தங்களை அதில் நிரப்பிக் கொள்கிறோம். வாழ்க்கையில் யாரும் கதாநாயகர்கள் இல்லை. அவரவர்க்கு முக்கியமானவர்கள் அவரவர்க்கு நாயகர்கள். இந்நாவலும் அதைதான் சொல்கிறது.  நாம் அன்றாடங்களால் சூழப்பட்டுள்ளோம். கடந்தவைகள் மறைந்துக் கொண்டே வருகின்றன.  இன்று எல்லாமுமாக தோன்றுபவற்றை காலம் நாளை ஏதுமற்றதாகி விடுகிறது. இன்று எண்ணத்தில் கூட தென்படாதவைகளை காலம் நாளைக்கு இயல்பானதாக்கி விடுகிறது. நேற்றுக்கும் இன்றுக்குமான இயல்பான தொடர்பை இலக்கியம்தான் அறுபடாமல் காக்கிறது. அதற்கு சி.எம்.முத்து தன் பங்களிப்பை சிறப்பாக செலுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவருக்கு என் வாழ்த்துகள்.

(16/2/2020 அன்று தஞ்சைகூடலின் 'முத்து 70' நிகழ்வில் பேசியது)

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் படிக்க வேண்டிய நூல் என்பதை விமர்சனம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது
நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மண்ணின் மைந்தனுக்கான விழா. சிறப்பாக நடத்திய உங்களுக்கும், குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
அதே நாளில் கும்பகோணத்தில் என் நண்பர்களின் நூலினை வெளியிட்டு, கருத்தரங்கப் பேராளர்களுக்கு சான்றிதழ் வழங்கச் சென்றதால், நல்ல விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போயிற்று.