Showing posts with label சிவாஜி. Show all posts
Showing posts with label சிவாஜி. Show all posts

Wednesday, June 4, 2014

தவப்புதல்வன் சிவாஜி



தவப்புதல்வனை பாதியிலிருந்துதான் பார்த்தேன். சட்டென ஒட்டிக் கொண்டுவிட்டது. படம் கருப்பு வெள்ளையில் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தாலும், ஒரளவிற்கு நேர்த்தியாகவே படம் செய்யப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான படம். அதனால் கதையில் பல ஓட்டைகளை கூற‌முடியும். கதை மிக எளிய நேர்கோடாகதான் அமைந்திருக்கிறது. ஒரு இசைகலைஞன் தன் பரம்பரை வியாதியான மாலைக்கண் நோய் தனக்கு வந்துவிடகூடாது என்பதும் அது தன் அம்மாவிற்கு தெரியகூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறான். ஒரு நாள் மாலைககண் நோய் வந்துவிடுகிறது. அம்மாவிடம் சொல்லாமல் இருக்கிறான் ஒரு டான்சர் தன்னை திருமணம் செய்ய சொல்கிறாள் அல்லது அவன் அம்மாவிடம் சொல்லப்போவதாக சொல்லி அவனை டார்சர் செய்கிறாள். கடைசியில் ஒரு வெளிநாட்டு டாக்டரின் ஆப்பரேசனில் குணமடைந்து அம்மாவை அவளிடமிருந்து காக்கிறான். 



Wednesday, September 7, 2011

சிவாஜியின் மிகைநடிப்பு 3



சிவாஜி குறித்து எழுதியதும் பலர் தங்களது எதிப்பையும், நட்பையும் தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக, எதிர்ப்பை தெரிவித்தவர்கள் சிவாஜியை வேண்டுமென்றே மட்டம் தட்டுவதுபோல் இருப்பதாக கூறியிருந்தார்கள். முன்பே சொன்னதுபோல் ஆதர்சம் சிதைவதை பொருக்கமுடியாமல் கூறியதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சிவாஜி என்ற ஆளுமையை அத்தனை எளிதாக தமிழக மக்களின் மனங்களிலிருந்தது எடுத்துவிடுவதும் சாத்தியமானது அல்ல. என் பெரியம்மா சிவாஜியின் தீவிர ரசிகை, எழுபது வயதாகியும் இறப்பதற்கு முன்புவரையும் அவர் வீட்டில் இருக்கும் சின்ன தொலைக்காட்சியின் சிவாஜியின் படங்கள் ஒளிபரப்பாகும்போது தவறாமல் பார்ப்பார். சிவாஜியின் 50கள், 60கள் 70களின் படங்கள் அவருக்கு அத்தனையும் அத்துபடி, காட்சி காட்சியாக விவரிக்க அவரால் முடியும்.

ஆனால் ஒரு முறை பேசும் போது சிவாஜி நல்ல உயரமும் தாட்டியும் கொண்டு கம்பீரமாக இருக்கிறார் என்று சிவாஜியை தொலைகாட்சியில் நடந்துவருவதை பார்த்தபடியே கூறினார். அப்போதைய நடிகைகள் குள்ளமானவர்களாக இருந்ததால் அவருக்கு அப்படி தோன்றியிருக்கலாம். நான் மறுத்து சாதாரண இப்போதைய உயரதைவிட குள்ளம்தான் என்றேன். அவர் கண்களில் தெரிந்த விரோததத்தோடு உடனே மறுத்து கூறினார். அவர் மேல் இருக்கும் அபிமானங்களை மாற்றமுடியாது என்று புரிந்துகொண்டேன்.

அவர் வளர்ச்சிக்கு காரணங்களாக சிலவற்றை கூறலாம்: பல உண்மை கதாபாத்திரங்களை அவர் செய்ததுதான் என நினைக்கிறேன். கூடவே அவர் செய்த பீம்சிங் போன்றவர்களின் யாதார்த்த படங்களில் நடித்ததும்தான். அறுபதுகளின் பிற்பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், திருவிளையாடல், திருவருட்செல்வர், ராஜராஜ சோழன் போன்றபடங்கள் சிவாஜியை வாழும் ஒரு பாத்திரமாக மககள் மனதில் பதியவைத்துவிட்டது. அம்பதுகளின் இறுதியிலும், அறுபதுகளின் ஆரம்பத்திலும் பீம்சிங் மாதிரியான யாதார்த்த பாணி படங்கள் அவருக்கு நிரம்ப கைகொடுத்தன. அந்த கதாபாத்திரங்கள் நிஜமானதாகவும், மக்கள் மனதிற்கு மிக நெருக்கமானதாகவும் உணர்ந்துள்ளார்கள்.

சிவாஜியின் எதிரியான எம்ஜியாரின் பட‌ங்கள் வெற்றிகரமான படங்களாக அமைந்திருந்தாலும் அதில் யதார்தமாகவும், நிஜபாத்திரங்களும் இல்லாமல் இருந்தும் நடிப்பதற்கு வகையில்லாமல் அமைந்துவிட்டன. ஆனால் அன்பே வா முதற்கொண்டு மலைக்கள்ளன் வரை எந்த பாத்திரமும் அவரின் உடல்வாகுக்கு பொருத்தமாக அமைந்துவிட்டன் என்பதும் உண்மை.

எம்ஜியாருக்கு அழதெரியாது என்பது பொதுவாக சிவாஜி ரசிகர்கள் கூறும் வாதமாக இருக்கும். சிவாஜி அழுவது காட்சிக்கு பொருந்துகிறதோ இல்லையோ அவர் அழுவது இயற்கையாக இருப்பதாக நினைப்பார்கள். 5 பைட்டு 6 சண்டை என்பது மாதிரி, 5 அழுகாட்சி 6 மெய்சிலிர்ப்புகாட்சி என்று சிவாஜி ரசிகர்கள் கூறுவார்கள் எனக் கொள்ளலாம்.

சிவாஜி சினிமாவில் நுழைந்த சம‌யம் மிக முக்கியமானது. யாருக்கும் அமையாத அற்புதம் அது என நினைக்கிறேன். இரண்டு துருவ‌ங்களும் முக்கிய நடிகர்களுமான பாகவதரும், சின்னப்பாவும் விலகிய காலம் அது. நல்ல நிலையில் சினிமாவில் கொடிகட்டி பறந்த‌ பி.யூ.சின்னப்பா,  உச்ச நிலையில் இருக்கும்போதே திடீரென காலமானார். எதிர் துருவமோ கொலை, கைது என்று அழைக்கழிக்கபட்டு நிம்மதிய‌ழந்து தோல்விபடங்களாக கொடுத்து அவரும் திடீரென காலமானார். அம்பதுகளில் ஆரம்பத்தில் சட்டென ஒரு உயரத்திற்கு வந்த சிவாஜிக்கு நல்ல இடம் கிடைத்தது. சின்னப்பா செய்த உத்தமபுத்திரன் போன்ற படங்களை மீண்டும் செய்து தன்னை அடுத்த வாரிசாக நிறுவிக்க்கொண்டார். அவரே எதிர்பாராத ஒரு பாய்ச்சலுடன் சினிமாவில் நுழைந்ததும், வெற்றிடமாக கிடந்த மக்கள் மனங்களில் சட்டென சிம்மாசனத்துடன் அமர்ந்துகொண்டார். (அதே போல் எம்ஜியாரும் மற்றொரு இடத்தை பிடித்துக்கொண்டார்.) பின்பு மக்கள் மனங்களில் இருந்து அவரை பிரிக்கமுடியவில்லை. தொடர்ந்து எழுபதுகளின் ஆரம்பம்வரை ஒரு பெரும் பேரரசனாக‌ கொடிகட்டி பறந்தார்.

ஆனால்...

(மீண்டும் பார்ப்போம்)

_o0o_

Tuesday, August 30, 2011

சிவாஜியின் மிகைநடிப்பு 2

சிவாஜியின் மிகைநடிப்பைப் பற்றி மீண்டும் எழுதுவதற்கு காரணமிருக்கிறது. ஒரு எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன விசயம் வேடிக்கையாகவும் சிந்திக்கும்படியாகவும் இருந்தது.

முதல்மரியாதை படத்திற்காக சிவாஜியை ஒப்பந்தம் செய்துவிட்டு, நீங்கள் ஒரு இந்தபடத்தில் ஒரு கிராமத்தில் பெரியவர் பண்ணையாராக‌ நடிக்கிறீர்கள். உங்கள் மனைவி சரியில்லை, உங்களிடம் ஒரு சோகமிருக்கிறது என்று சொல்லிவிட்டுவந்து விட்டார்கள் உதவி இயக்குனர்கள். மறுநாள் எப்போதும்போல முதலில் வந்துவிடும் சிவாஜி இதற்கு முந்தைய படங்களைப் போல‌ பண்ணையாருக்கு தேவையான மேக்கப்பான, வெள்ளை விக், மீசை, அங்கவஸ்திரத்தோடு அமர்ந்திருந்தாராம். வந்ததும் பார்த்த இயக்குனர் வெறுத்துபோய் வேறு இடத்திற்கு போய் அமர்ந்துகொண்டாராம். அவர வீட்டுக்குபோ சொல்லுங்கபா, இன்னிக்கொன்னும் என்னால படம் எடுக்கமுடியாது என்று கூறிவிட்டார். உதவி இயக்குனர்கள் கூறியதை கேட்டு எனக்கு இன்னைக்கு காட்சி இல்லையா என அப்பாவியாக கேட்டாராம் சிவாஜி.

அறுபதுகளிலேயே அவரின் மிகைநடிப்பை விரும்பி வரவேற்க ஆரம்பித்துவிட்டார்கள் மக்கள். இப்போதுகூட அதை விரும்பும் ஒரு கூட்டம் இருப்பதை மறுக்கமுடியாது. இவைகள் ஒரு நடிகரை பின்னுக்கு தள்ளும் காரணிகள் என்று அவர் அறிந்திருக்கவேயில்லை. அறுபதுகளில் வந்த படங்களை நினைக்குபோது அப்போது மிகைநடிப்புகளுக்கு ஒரு தேவை இருந்ததை ஏற்றுக்கொள்ளவேண்டும். பாலாஜியுடன் அவர் செய்யும் சேட்டைகள், தேவிகாவுடன் அவர் செய்யும் சேட்டைகள் என்று பல படங்கள் நம் நினைவிற்கு வந்து மகிழ்ச்சியூட்டுகின்றனதாம்.

உதாரணமாக இதையே சொல்லலாம், 'சின்னஞ்சிறிய வண்ணபறவை என்னத்தை சொல்லுதம்மா' என்ற பாடலில், அவர் செய்யும் சேட்டைகள் ஒரு காட்சிக்கு இவ்வளவு தேவையா என இன்று கேட்க தூண்டும். 5 ரூவாய்க்கு நடிக்க சொன்னா 50 ரூவாய்க்கு நடிக்கிறாரு என்ற 'சொலவடை' நிச்சயமாக அவருக்கு பொருந்தியே தீரும்.

பின்னாளில் அவர் உடலும் மனமும் நடிப்பிலிருந்தும், சினிமாவிலிருந்தும் விலகிவிட்டதை அறிந்துகொள்ளமுடியும். முதல் மரியாதை, தேவர்மகன் தவிர‌ எழுபதுக்குபின் வந்த படங்கள் (ஆரம்ப எழுபதுகளில் வந்த படங்களை தவிர) எதுவும் அவரின் மற்ற பட‌ங்களை மிஞ்சி நின்றதில்லை. அலுப்பும் சோர்வுமாக ஒரேமாதிரியான உடலசைவுகளுடனும், நடிப்பிலுமாக படங்கள் வெளிவந்துள்ளன. அவரால் மீண்டும் பதிய உத்வேகத்துடன் நடிக்கமுடியவில்லை.


அமீர்கான் நடிப்பில் வெளியான தாரே சமீன் பர் படத்தை முதலில் இயக்கிய இயக்குனரை, அவரின் இயக்கம் பிடிக்காமல், நீக்கிவிட்டு தானே மற்றகாட்சிகளை எடுத்து வெளியிட்டார் அமிர். அதேபோல் தேவர்மகனில் பரதன் இயக்கம் பிடிக்காமல் தானே மற்ற காட்சிகளை இயக்கினார் கமல். ஏனெனில அவர்களுக்கு தெரிந்திருந்தது அந்த படத்தில் அவர்களின் பங்கு பற்றி. சிவாஜியை பற்றி குறைகூறும்போது சொல்லப்படும் வார்த்தைகளில் பிரதானமானது அவருக்கு இயக்குனர்கள் ச‌ரியாக அமையவில்லை என்பதுதான். அதுவல்ல காரணமென்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

சிவாஜியின் நடிப்பை பார்த்த மர்லன் பிரான்டோ இப்படி சொன்னாராம். 'சிவாஜியை போல் என்னால் ந‌டிக்க முடியாது'. அது அவரின் பெருந்தன்மையை குறிக்கிறது, ஆனால் சிவாஜியால் மர்லன் பிரான்டோவின் நடிப்பை நினைத்துகூட பார்க்க முடியாது.

_o0o_

Thursday, August 4, 2011

சிவாஜியின் மிகைநடிப்பு


சிவாஜி எம்ஜியார் காலம மட்டுமல்ல, சின்னப்பா பாகவதர் காலத்திலும், அதற்கு முன்னால் கிட்டப்பா காலத்திலும் இப்படி ஒரு வெகுஜன‌ கூட்டம் இருந்திருக்கிறது. அவர்களது ஆதர்சத்தை விட்டுக்கொடுக்கமுடியாமல் இப்படி புலம்பியும் இருப்பார்கள். இதற்கு உணர்ச்சி வசப்படாமல், உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்துடன் அணுகுவதுதான் சிறந்தவழி. சிவாஜியை மிகை நடிப்பு எனறு காரணமில்லாமலா கூறுவார்கள், அவர் தமிழகத்தில் பிறந்துவிட்டதால் அப்படி சொல்வார்களா? மிகைநடிப்பு நடிகர்கள் எல்லா மொழிகளிலும் இருக்கிறார்கள். நமக்கு தெரிவதில்லை, காரணம் மிகைநடிப்பு அந்தந்த இடத்திற்கு பொருந்தகூடியது. மிகைநடிப்பில்லா சிறந்த நடிப்பே மொழிகளையும், இனங்களையும் தாண்டி நம்மை வந்தடைகிறது என்று நினைக்கிறேன். ஜெயன் மலையாளத்தில் மிகைநடிப்பு நடிகர், நம‌க்கு இங்கு தெரியாது.

நாடகத்தில் நடந்துகொண்டே நடிக்கவேண்டும், வசன உச்சரிப்பு சரியாக வருவதற்கும், உணர்ச்சிகளை காட்டுவதற்கும்; வசனமும் பாட்டும்தான் அப்போது நடிப்பு. சினிமா அப்படியல்ல, லாங்சாட், குளோசப் தவிர எனைய பக்கங்களிலிருந்தும் காமிராக்களை பொருத்தி உணர்ச்சிகளை பார்வையாளர்களுக்கு அளிக்க முடியும். அது இயக்குனரின் தேர்வும், திறமையையும் பொருத்தது. அதை புரிந்துகொண்டு நடிக்க நடிகருக்கு தெரிவது சினிமாவில் அவசியம்.

சிவாஜியை பொருத்தவரை கட்டபொம்மன் போன்ற படங்களில் மிகைநடிப்பு கவரப்பட்டதால் அதை தொடர்ந்து செய்தார். அதுவே அவரது பாணியாகவும் ஆகிவிட்டது, அவரால் அதிலிருந்து வெளியே வரமுடியவில்லை. பைலட் பிரேம்நாத், ஜஸ்டிஸ் கோபிநாத் இன்னபிற படங்கள் ஒரே மாதிரியானவைதான். ஒரே பாணி படங்களை செய்ய போதுவாக எந்த நடிகரும் செய்யவிரும்புவதில்லை. ஒரே பாணியில் மாட்டிக்கொண்டு வேறுமாதிரி நடிக்க முடியாத அவரால் சில இயக்குனர்களால் மிகுந்த முயற்சி செய்து முதல் மரியாதை போன்றபடங்களை எடுக்கமுடிந்தது.

வசனங்களும் காட்சிகளும் ஒரு பாத்திரத்திற்கு அதன் சூழ்நிலைகளுக்குமானது. ஒரு குறிப்பிட்ட நடிகருகானது அல்ல என நினைக்கிறேன். உதாரணமாக பரிச்சைக்கு நேரமாச்சு என்ற படத்தில் சிவாஜிக்கு பதில் வேறுஒருவர் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும். அந்த மிகைநடிப்பும், அதிக வசனங்களும், காட்சிகளும் இல்லாமல் இருந்திருக்கும் அல்லவா? ஒரு நிஜதன்மை கிடைத்திருக்கும் அல்லவா? சிவாஜிக்கு நன்கு அழதெரிந்திருக்கிறது என்பதற்காக எல்லா படத்திலும் அவரின் எல்லா பாத்திரங்களும் ஒரே பாணியில் அழுதுகொண்டிருக்கவேண்டுமா?

ரசிகர்களின் உந்துதலால் தான் தொடர்ந்து ஒரே மாதிரி படங்களில் நடித்து ஒரு நடிகர் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ரஜினி, அஜித், விஜய் போன்றவர்கள் இந்த வகையினர் தாம். எம்ஜியார், கமல், சூர்யா, விக்ரம், போன்றவர்கள் ஒரேவகையில் மாட்டிக்கொள்ளாமல் ஒவ்வொரு படத்திற்கும் தெரிந்தோ தெரியாமலோ தங்களை மாற்றிக்கொண்டவர்கள். தேசிய விருது என்ற அங்கிகாரம் மிகைநடிப்பு இல்லாததால் தான் இரண்டாம் வகையினருக்கு கிடைத்தது என கொள்ளலாம்.

_o0o_