ஊர்களுக்கென்று சில குணங்கள் இருக்கும். கும்பகோணமென்றால் வெற்றிலை மணக்கும் வாய், மல்லிகை மணம் வீசும் மதுரை என்பது போல தஞ்சாவூருக்கு என்ன இருக்கும். கலவையான சிலவற்றை சொல்லலாம். சாக்கடை, சின்ன சந்துகள், சந்திரகலா, அசோகா இனிப்புகள், பழமையான எல்லா ராஜ்ஜியங்களின் ஒருங்கிணைந்து காணப்படும் கட்டிடங்கள். இப்படி பலவற்றை சொல்லாம். இதெல்லாம் உண்மையில் மற்ற ஊர்களில் இல்லாதது. நையாண்டி மேளம், பொய்கால் குதிரை, கரகாட்டம், பட்டுநெசவு, நெட்டிவேலை, தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியங்கள் என்று இன்னும் சொல்லக்கூடியவை நிறைய உண்டு. முக்கிய காரணம் சோழ அரசு, அதன் பின் நாயக்கர், மராட்டியர், ஆங்கியேலர் என்ற ஒரு வரிசை ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் தலைநகரம் தஞ்சையாக இருப்பதனால் எல்லாவகை கலாச்சாரங்கள் இணைந்த பகுதியாக ஒருமாதிரியான கலப்பாக இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.