பள்ளி வாழ்க்கையை நினைவு கூர்வதில் இருக்கும் ஆனந்தம் தன் நிகழ்கால துன்பங்களை மறப்பதற்குதான் என்று சொல்லப்படுவதுண்டு. மிக இளவயது பள்ளி நினைவுகள் நினைவில் இருப்பதில்லை. ஆனால் வளரும் பதின்பருவத்தில் ஏற்படும் நினைவுகள் பெரிய காலமாற்றத்தை நோக்கியதும், வயதடைவதை உடல்ரீதியாக உணர்ந்துக் கொள்வதும் நடக்கும் காலம் என்பதால் அதன் அதிர்வலைகளை நினைவுகளாக வைத்திருப்போம்.
ஆறாவதில் பெரிய பள்ளிக்கு சென்றபோது ஆசிரியர்களை அவன் என்று தங்களுக்குள் விளித்து, சகட்டுமேனிக்கு திட்டிய சக மாணவர்களை கண்டு அதிர்ச்சியடைந்தது நினைவிருக்கிறது. அதற்கு முந்தைய காலங்களில் ஆசிரியர் என்பவர் குரு சிஷ்ய மரபின் தொடர்ச்சியாக இருந்ததை சொல்லும் மனிதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பத்தாண்டுகளில் பதின்வாழ்க்கை-ஆசிரியர் தொடர்பு சமூக, பொருளியல் மாற்றங்களைப் பொறுத்து மாறிக்கொண்டேயிருக்கிறது. கிடைக்கப்போகும் வேலையை பொறுத்து படிக்கும் வகைகளுக்கு மதிப்பு கூடுவது குறைவதும் இருந்தது. பள்ளியின் தரம், ஆசிரியர்களின் தரம், எல்லாம் கவனத்தில் கொள்ளப்பட்டன. இன்றைய படிப்பு நேற்றைய மாணவர்களான பெற்றோர்களுக்கு புரியாததாகியது.