Monday, December 31, 2018

நட்ராஜ் மகராஜுக்கு ஒரு கூட்டம்


தஞ்சைக்கூடலின் டிசம்பர் (29/12/18) இலக்கிய கூடல் சந்திப்பு கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்த எப்போது போன்ற கூட்டமாக அல்லாமல் எழுத்தாளர் தேவிபாரதியின் சிறப்பு பங்கேற்பாகவும், அவரது பிறந்தநாள் விழாவாகவும் அமைந்து விட்டது. இதுவரை நடந்த கூட்டங்களிலிருந்து சிறிது திளைப்பாகவும், கொண்டாட்டமாகவும் இந்த ஆண்டின் கடைசியில் அமைந்தது அடுத்த ஆண்டிற்கு இன்னும் சிறப்பாக செய்ய உத்வேகமாகஇருக்கிறது. எளிய பண்பான மனிதராகவும் தன்னை இன்றும் சாதாரண மனிதனாக காட்டிக் கொள்வதில் பெருமிதத்துடன் இருக்கிறார் தேவிபாரதி. அவர் எழுதிய நடராஜ் மகராஜ் நாவல்தான் இந்த மாத கூட்டத்தின் கலந்துரையாடல் பேசுபொருள்.

Thursday, December 20, 2018

சிலுவைராஜும் புஷ்பராஜும்

ராஜ் கெளதமன் எழுதியிருக்கும் சிலுவைராஜ் சரித்திரத்தை படிக்கும் வாசகன் நாவலாக அணுகுவதா அல்லது தன்வரலாறின் கூறாக அதை அணுகுவதாக என்பதை ஓவ்வொரு பக்கத்தை தாண்டும்போதும் வாசகன் குழம்புவான் என நினைக்கிறேன். ஏனெனில் நாவலாக பார்ப்பதில் இருக்கும் தன்முனைப்பு தன்வரலாற்றிற்கு தேவையிருக்காது. அது தன்பாட்டிற்கு நிகழ்ந்ததை 'கவனத்துடன்' கூறும் நேர்மையை மட்டுமே தன் வழியில் கொண்டிருப்பதை வாசகன் அறிந்தேயிருப்பான். நாவல் புனைவு எனும் சுதந்திரத்துடன் பலவழிகளில் தன்னை முன்னிறுத்து முயற்சியின் சாயலை உடையது. நாவலுக்குரிய விரிவும் வாசக இடைவெளிகளும் வாசகனை தொடர்ச்சியாக சிந்திக்க தூண்டிக் கொண்டேயிருக்கும். தன்வரலாற்றின் எடுத்துரைப்புகள் ஒரளவிற்குமேல் வாசகனை உள்நுழையவிடாமல் தடுப்பவையும் கூட. ஆனால் சிலுவைராஜின் சரித்திரம் ஒரு தன்வரலாறாக (?) இருந்தாலும் அதில் வரும் அங்கதமும், சூழல்விவரிப்பும் நம்மை மிக நெருக்கமாக கொண்டு செல்கின்றன. சிலுவைராஜை ஒரு நெருங்கிய தோழனாக உருவங்கொள்ள செய்கிறது.

Wednesday, December 5, 2018

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2018 சாகித்ய அகாடமி விருது


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2018 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழில் தொடர்ச்சியாக எழுதிவரும் எழுத்தாளர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். அதில் முதன்மையானவர் எஸ்.ரா. நாவல், சிறுகதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், பயணஇலக்கியம், திறனாய்வு என்று பல ஜானர்களின் எழுதி குவித்திருக்கிறார். 125 நூல்கள் இதுவரை அவர் எழுதியுள்ளார்.

முழுநேர எழுத்தாளராக இருக்கும் எஸ்.ரா. வாழ்நாள் சாதனைக்காக இயல், தாகூர் போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார். இலக்கியம் மீது தீராத காதல் கொண்டு அவர் படிக்காத புத்தகங்களே இல்லை என்று சொல்லலாம். கவனத்திற்கு வரும் அத்தனை சிறந்த புத்தகங்களையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

கரிசல் பூமி அவரது எல்லா படைப்புகளிலும் வெளிபட்டிருக்கிறது. சஞ்சாரம் நாவல்கூட கரிசல் பூமியில் அழைந்து திரியும் நாகஸ்வர கலைஞர்களின் கதை தான். கி,ரா, தேவதச்சன், கோணங்கி போன்ற தன் முன்னோடிகளை போல எஸ்.ராவும் தொடர்வது இயங்கி வருகிறார். இவ்வாண்டு அவர் பெரும் சாகித்ய அகாடமி விருதிற்கு எம் வாழ்த்துகள்.

Monday, October 29, 2018

பொன்னகரம் : விதியின் வழி வாழ்க்கை


1
மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம். இந்த மூன்றையும் தருகின்ற ஒரு இடத்தை விட்டு மனிதர்கள் பிரிந்து செல்லமுற்படுவதில்லை. பிறப்பிலிருந்தே பெற்றுக் கொண்டிருக்கும் ஒன்றை விட்டு எளிதில் சென்றுவிடமுடியாத மனிதர்களாக தங்களை வைத்துக் கொள்வதில் ஆழ்ந்த நம்பிக்கைகளும், வெறுப்புகளையும் ஒரு சேர கொண்டவர்கள். அவர்கள் நகரத்தில் ஒதுக்கப்பட்ட யாரும் எளிதில் உள்நுழையாத, யாருக்கும் தெரியாத பகுதிகளில் வாழ்பவர்கள். அவர்களின் மீதான நம்பிக்கைகளை அவர்களே இழந்தவர்கள். தங்களிடமிருந்து பிரிந்து வேறு ஒரு மனித கூட்டத்தில் சேர்ந்து வாழ முடியும் என்கிற நம்பிக்கையையும் இழந்தவர்கள். அவர்களது மொழியும், பழக்கங்களும் தனியே வரையரை செய்யப்பட்டவையாக உருவாக்கிவிட்டபின் அதுவே அவர்களின் பலமாகவும், பலவீனமாகவும் மாறிவிட்டிருக்கின்றன.

Thursday, October 11, 2018

நூற்றாண்டுகளை கடக்கும் சிறுகதை


1
பெரிய விஷயங்களை பேசும் இலக்கியங்கள் இருந்த காலத்தில் சின்ன விஷயங்களின் கலையை சொல்ல வந்த வடிவம் சிறுகதை. முதலில் சிறுகதைகள் கேளிக்கைக்காகதான் உருவாக்கப்பட்டன. காலப்போக்கில் கேளிக்கைகள் மாறி தீவிரத்தன்மை கூடி இன்று நாம் படிக்கும் சிறுகதைகளாக வளர்ச்சியடைந்தன

Friday, October 5, 2018

எட்டாவது அதிசயம் - கனவுப்பிரியன் (சிறுகதை)


கனவுப்பிரியனின் 'சுமையா' சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள எட்டாவது அதிசயம் கதை. அந்த தொகுப்பின் சிறந்த சிறுகதையாக தோன்றுகிறது. அதை இங்கே வெளியிடுகிறேன். நண்பர்கள் படித்து கருத்துரைக்க வேண்டுகிறேன்.

-கே.ஜே.


எட்டாவது அதிசயம்

21 வருடம் ஊரை விட்டு வெளியே தங்கி விட்டவனுக்கு ஊருக்குள் என்ன நட்பு மிச்சம் இருக்கப் போகிறது. அதனால் நேரம் போக வேண்டி தனியாய் நடந்தே, மாலை வேளைகளில் கொஞ்சம் தொலைவில் உள்ள அந்த பூங்காவுக்கு நான் செல்வது வழக்கம். 

Sunday, September 30, 2018

உப்பு நாய்கள்: முதிரா நகரத்தின் கதை

மாற்றத்தை சொல்வதற்குதான் இருக்கிறது நாவல். ஒரு தெருவின் கதை, ஒரு பகுதியின் கதை, ஒரு மரத்தை பற்றிய கதை, ஒரு பெருநகரத்தின் கதை என்று ஒரு இடம் அல்லது இருப்பை சொல்லும் நாவல்கள் நமக்கு இருக்கின்றன. ஆனால் கூடவே அதன் காலத்தையும் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. காலமும் இடமும் சேர்ந்து ஒரு மாற்றத்தை நோக்கி நகர்வதை நாவல்கள் பொதுவாக செய்து கொண்டிருக்கின்றன.
 
பள்ளிகொண்டபுரம் ஒரு நகரத்தின் வளர்ச்சியையும் அதன் வீழ்ச்சியையும் பேசுகிறது. புளியமரம் இருக்கும் ஒரு பகுதியையும் அந்த நகரத்தையும் பேசுகிறது புளியமரத்தின் கதை. ஒரு தெருவில் வாழும் குடும்பங்களின் கதை ரெனீஸ் அய்யர் தெரு. காவல் கோட்டம் மதுரை பற்றிய கதை என்றும் சொல்லலாம். விஷ்ணுபுரம், நெருங்குருதி எல்லாமே ஒரு நகரத்தின் ஒரு இருப்பிடத்தின் கதைதான்.

Friday, September 14, 2018

மதுரைக்கு வந்த சோதனை



சோழநாட்டு தலைநகரிலிருந்து புதுக்கோட்டை சமஸ்தானத்தைத் தாண்டி பாண்டிய நாட்டிற்கு பல்வேறு நதிகளைக் கடந்து காலடி வைக்க மூன்று நாட்களாவது ஆகும் பயணத்திற்கு சரியான கட்டுசோறு தேவையைதாண்டி திருடர் பயமும் இருந்திருக்கும் அப்போது. இன்று நடுவில் புதுக்கோட்டையில் ஒரு கடையில் மதியஉணவை முடித்துக்கொண்டு மதுரைக்கு செல்ல நான்கு மணிநேரம்தான் ஆகியது. 

பதினைந்து நாட்களுக்கு முன்னால்வரை பயணத்திற்கான திட்டம் எதுவும் இருக்கவில்லை. ஒருநாள் தினேஷ் தொலைபேசியில் மதுரை வரமுடியுமா என்றார். அவர் முன்பே வாசகசாலை தோழர்கள் கார்த்திகேயன், அருண் இருவரின் வழிகாட்டுதலால் என்னை தொடர்புகொண்டிருந்தார். உடனே தயார் படுத்திக்கொள்ள முடியுமா என்று சற்று தயக்கமாக இருந்தது. முன்னே லைப்ரரி புத்தகமாக படித்திருந்தாலும் புத்தகம் கிடைக்கட்டும் என்றேன். வாசகசாலை கண்ணம்மாள் அவர்கள் புத்தகம் இருக்கிறது என்று கையோடு வாங்கிக் கொடுத்துவிட்டார். ஆகவே மனம் கொள்ளும் விடுபடல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை. சரி என்று சொல்லவேண்டியதாகிவிட்டது. பதினைந்து நாட்களும் நெடுங்குருதியும், லேட்டாப்புமாக இருந்தேன்.

Monday, September 10, 2018

கறிச்சோறு: நிறைவேறா வேண்டுதல்கள்


கடந்த ஐம்பதாண்டுகளில் தஞ்சை வட்டாரத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கு சாட்சியாக விளங்குபவர் சி.எம் முத்து என்று .முருகேசபாண்டியன் ஒரு கட்டுரையில் அவரைப் பற்றி குறிப்பிடுகிறார். கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது உண்மை என்றே படுகிறது. தி.ஜா. கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், குபாரா போன்றவர்கள் இசை, நடனம், போன்ற கலைகளின் உயர்குடிகளின் ரசனைக்கு ஏற்றவகையில் நாவல்கள் படைக்கப்பட்டபோது வயல்களில் மனித வாழ்க்கை, குடும்ப உறவுகளில் சிக்கல், சாதிய மனநிலை ஏற்றத்தாழ்வுகள், மிதமிஞ்சிய அன்பு, மிதமிஞ்சிய கோபதாபங்கள் என்று வாழ்வின் மிக அடித்தட்டில் இருக்கும் மக்களின் சுகதுக்கங்களை ரசனைகளின் மேல் பெரிய ஈடுபாடுமில்லாத வாழ்க்கையை பற்றி பேசுகிறார். எந்த பெரிய லட்சியங்கள், கொள்கைகள் இல்லாத மனிதர்கள் நேரடியாக மற்ற மனிதர்களை சார்ந்து வாழும் வாழ்வை, தன் இயல்பிற்கும் தன் சிந்தனைக்கும் மீறாத வாழ்வு கொடுக்கும் கரிசனத்தை எந்த கேள்விகளுமற்று எற்றுக்கொள்ளும் கதாபாத்திரங்களை படைப்பதில் கடந்த 50 ஆண்டுகளாக சலிப்பின்றி இயங்கிக் கொண்டிருக்கிறார் சி.எம்.முத்து.

Monday, September 3, 2018

நெடுங்குருதி: வெக்கை நதியின் துயரம்



சொற்களற்ற தொடர்பு (nonverbal communication) என்று சொல்லப்படுகின்ற ஒரு வகை தொடர்புறுத்தல் முறை நம் உடல்வழியாக எப்போது வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம், அதை உடல்மொழிம் என்று சொல்லலாம். ஒருவரது நேரடி மற்றும் மறைமுக சைகைகளை அதன்மூலம் அவருக்கு தெரியாமல் நாம் படித்துவிடமுடியும். அவர் நமக்கு உணர்த்துவதை புரிந்துக் கொள்ளவும் அவரது பொதுஇயல்புகளைப் புரிந்துக் கொள்ளவும் முடியும். அந்த சொற்களற்ற தொடர்ப்பு அல்லது உடல்மொழியை நம் இலக்கியத்திலும் காணமுடியும். குறியீடுகளாக, படிமங்களாக இலக்கியத்தில் சொல்லப்படுபவைகளை மறைமுகமாக இந்த தன்மையைதான் உணர்த்துகின்றன என்று சொல்லலாம்.

Sunday, August 26, 2018

காச்சர் கோச்சர்: படிமங்களற்ற பாழ்வெளியின் தனிமை


காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக் (தமிழில்: கே.நல்லதம்பி) - காலச்சுவடு பதிப்பகம்

1

குடும்ப அமைப்பு என்பது ஒருவரது ஆளுமையின் கீழ் மெல்லமெல்ல உருவாகிவருவது. குடும்ப உறுப்பினர்களுக்குகூட அவர் உழைப்பையும், தியாகத்தையும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த ஒருவர் குடும்பத்திலிருந்து விலகும்போதோ அல்லது இறக்கும்போதோ சர்வநிச்சயமாக குடும்பம் சிதைந்துவிடுகிறது. பொதுவாக அப்பாக்கள் தான் அந்த ஆளுமையை உருவாக்குகிறார்கள். சில குடும்பங்களில் தாத்தா, பாட்டி, அம்மா என்று யாராவது ஒருவர் தீவிரமாக நிலைப் பெற்றிருப்பார்.

மிக வறுமையான நிலையில் இருக்கும் குடும்பங்கள் மேலேறுவது, மிக செழிப்பாக இருக்கும்.
குடும்பங்கள் கீழிறங்குவது அதில் இருக்கும் ஒரே ஒரு உறுப்பினரால் தான் என நினைக்கும்போது இந்த தீவிரத்தை ஓரளவு நாம் புரிந்துக் கொள்ள முடியும். கூடவே குடும்பம் என்கிற அமைப்பு சிதைவுறாமல் இருக்க ஒருவர் செய்யும் பிரயத்தனங்கள், முயற்சிகள், திருட்டுதனங்கள் எல்லாம், வறுமை நிலையில் இருக்கும்போது ஒன்றும் வளமைநிலையில் இருக்கும்போது ஒன்றுமாக இருக்குமா என்கிற சந்தேகம் நம்மை ஆட்டிவைக்கவே செய்யும்.