Wednesday, October 30, 2019

ஒருநாள் கழிந்தது - புதுமைபித்தன் சிறுகதை வாசிப்பனுபவம்

அரைநாள் கழிந்தது என்றுதான் சொல்லவேண்டும். கதையில் அரைநாள் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் மாலையிலிருந்து இரவுவரை தான் கதை. காலை, மதியம், நடுஇரவெல்லாம் முருகதாசர் என்ன செய்தார் என்கிற குறிப்பு எதுவும் இல்லை இதில். இப்படி புறவயமாக கதையை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்றாலும் புதுமைபித்தனின் நிஜகதையை ஒட்டியிருப்பதால் அவர் வாழ்க்கையை படிக்கின்ற சுவாரஸ்யம். பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் பகுதியில் இக்கதை இருக்கிறது. அன்றிலிருந்து பல சமயங்களில் இக்கதையை வாசித்து வருகிறேன். சொல்லப்போனால் அதில் இருக்கும் இரு கதைகள் மட்டுமே நினைவில் இருக்கின்றன். ஒன்று இது மற்றொன்று ஜெயகாந்தன் எழுதிய நந்தவனதில் ஒரு ஆண்டி.

Wednesday, October 23, 2019

விடியுமா - கு.ப.ரா. சிறுகதை வாசிப்பனுபவம்


பிரிவை மனித மனம் எப்படி எடுத்துக் கொள்கிறது என பல்வேறு வரையறைகளின் வழியாக பொருள் கொள்ள முடியும். அது தத்துவங்களின் வழி. ஆனால் உண்மை அகத்தின் மொழியை உணர்ந்தவர்கள் மிகக் குறைவு. மனம் ஒரு நேரடி துயர நிகழ்வுக்கு முன்னும் பின்னும் பல்வேறு வகைகளில் கூட்டி தொகுத்து சொற்களாக வைத்துக் கொள்கிறது. சொற்களை முன்னும் பின்னுமாக மாற்றி வேறு பொருள் அதற்கு உண்டா என சோதிக்கிறது. மற்றவர்களுடன் அது குறித்து பேசி தனக்கு தேவையானவைகளை ஒரு கூட்டுக்குள் அடக்கி வைத்துக் கொள்ள விரும்புகிறது.

Friday, October 18, 2019

அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அசோகமித்திரன் சிறுகதை வாசிப்பனுபவம்




எளிய மனிதவாழ்வில் நடக்கும் கனமான சம்பவங்கள் பேய்க்காற்றில் அறுந்து நொடியில் வானத்து பரப்பிலிருந்து காணாமல் போய்விடும் பட்டம் போன்றது. ஆனால் அதன் நினைவுகள் முகத்து வடுக்கள் போல நம் மனதிலிருந்து நீங்குவதேயில்லை. அசோகமித்திரன் எழுதிய கதைகளில் இம்மாதிரியான பொதுத்தன்மை ஒன்றுண்டு. மிக எளிய மக்களின் அன்றாட பிரச்சனைகளை கொண்ட கதைகள் என்கிற பிம்பத்திற்கு பின்னால், தினசரி வறுமையும், தோல்வி பற்றிய சித்திரமும், கைவிடப்பட்ட நிலையையும் எவ்வித உணர்ச்சிகரமான எதிர்வினைகளற்று சொல்லப்பட்டிருக்கும். உணர்ச்சிகரமற்ற என்பதை இங்கு அழுத்திச் சொல்லவேண்டும். ஏனெனில் உத்வேகத்துடன் சொல்லப்படுதலை, உச்சஸ்தாதியில் குரலெடுப்பதை முற்றிலுமாக தவிர்த்து, அப்படியானவைகளைகூட சாதாரண சம்பவங்களோடு பிணைத்து மனிதர்கள் இவ்வளவுதான் என்று சொல்லிவிடுபவர் அசோகமித்திரன். கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் இது நிகழ்கிறது. ஆனால் அதே அன்றாடப் பிரச்சனைகளை மெல்லிய நகைச்சுவை பின்ன சொல்லிவிடுவதில் இருக்கும் அழகு அசோகமித்திரனின் முத்திரை என்று சொல்லலாம்.

Friday, October 11, 2019

கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் - காடு விமர்சனம்



குட்டப்பனின் வாழ்க்கையை வாழவேண்டும் என்கிற ஆசை கொண்டதனாலேயே கிரிதரன் தன் வாழ்வை தொலைக்கிறான் என்கிற எண்ணம் வந்தபோது காலை தூக்க கனவிலிருந்து எழுந்தமர்ந்தேன். உண்மைதானா என்கிற எண்ணம் நாள் முழுவதும் தொடர்ந்தது. அப்படிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது இஞ்சினியர் அய்யரையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். குட்டப்பனின் தெளிவு, எல்லாவற்றிற்கும் தீர்வு காணும் குணம், சோர்வேயறியாத உடல்பலம், எல்லோருக்கும் பயன்படும் அவன் சேவைகள் கண்டு வளரும் கிரி தன்னை குட்டப்பனாக நினைக்கிறான். அதுஒரு எல்லை, மற்றொரு எல்லையில் அய்யர் இருக்கிறார். அவரது இலக்கிய ரசனை, எப்போதும் அவரிடமிருக்கும் உச்சநிலை, வேலைமுடிந்ததும் இடங்கொள்ளும் வனப்பிரஸ்தம், என்று மற்றொரு எல்லையை நோக்கி செல்ல எத்தனித்துக் கொண்டேயிருக்கிறான். நீலியும், வேணியும், அவன் அம்மாவும் அவனை அலைக்கழிக்க விடுகிறார்கள். வாழ்வின் எந்தப்பக்கத்திற்கும் செல்ல அவனால் முடியவில்லை. மாறாக அவன் மாமா சதாசிவத்தின் வழிசென்று காணாமல் ஆகிறான்.