Sunday, September 29, 2019

காடு - வாசிப்பும் மறுவாசிப்பும் - கலைச்செல்வி


இருவாசிப்புகளுக்கு இடைப்பட்ட காலம் கிட்டத்தட்ட நான்காண்டுகள். இந்த நான்காண்டுகளில் நிறைய புத்தகங்கள் வாசித்தாயிற்று. நிறைய எழுதியுமிருக்கிறேன். இடையில் நகர்ந்த காலங்களுக்குள் என்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள தோன்றுகிறது. பொதுவாக ஆழ்ந்த வாசிப்பு அல்லது தன்னை ஒப்புக்கொடுக்கும் வாசிப்பு நேரும்போதெல்லாம் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அல்லது பின்பக்கத்திலிருக்கும் வெற்றுத்தாளில் யார் யாருக்கு உறவு, அவர்களின் பெயர்கள், பிடித்தமான அல்லது கவனம் கோரும் பக்கங்கள் குறித்த பென்சில் குறிப்புகள் போன்றவற்றறை எழுதிக் கொள்வது என் வழக்கம். (மஹ்ஷர் பெருவெளியில் ஒரு குடும்ப மரமே வரைந்திருந்தேன். பிறகுதான் பின்னட்டை பக்கம் திருப்பினேன். அவர்கள் குடும்பமரத்தை அச்சிட்டே வைத்திருந்தார்கள். ஹாஹா..) அப்படியாகதான் 2015ல் நான் காடு நாவலை வாசித்திருந்தேன். அன்று நான் குறித்து வைத்திருந்த பக்கங்களுக்கும் இன்று நான் என்னை மறந்து கதைக்குள் ஊடுருவி நின்ற சம்பவங்களுக்குமிருந்த இடைவெளி என் மாற்றத்தை காட்டி நின்றது. (கிண்டிலில் அடிக்கோடிடலாம். ஆனால் முன்னட்டை, பின்னட்டையில் பென்சில் குறிப்புகள் எழுதிக் கொள்ள முடியாதது குறைதான்.) 

Wednesday, September 11, 2019

சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் - தி.ஜானகிராமன் சிறுகதை வாசிப்பனுபவம்



தி.ஜானகிராமன் எழுத்துக்களில் இருக்கும் உரையாடல்தன்மை வாசகனை கட்டிபோட்டுவிடக்கூடியது. அவைகள் பேசிப்பேசியே காலத்தை கொண்டாட நினைக்கும் மனிதனின் வார்த்தைகள் என்பதால் இருக்கலாம். இடையூராது சளசளத்து ஓடும் நீர் போன்ற வார்த்தைகள். தோல்வியை மறைக்கும் லாவகமும், வெற்றியை ருசித்தேயிராத வரண்ட வண்டல்மண் போன்ற மனித புலம்பல்கள். அவர் எழுதிய கதைகளில் சிறந்த கதைகளாக பாயாசம், சிலிர்ப்பு, பரதேசி வந்தான், அக்பர் சாஸ்திரி, பிடிகரணை போன்றவைகளைச் சொல்லலாம். அவர் எழுதியவைகளில் அதிகம் பேசப்படாத சில கதைகளும் உண்டு. நுண்வாசிப்பில் மட்டுமே புரிந்துக் கொள்ளகூடியவையாகவும், ஆழ்மன மெளனங்களை வெளிப்படுபவையாகவும் இருக்கும் கதைகள் சில உண்டு. பசி ஆறிற்று, காண்டாமணி, சாப்பாடு போட்டு 40 ரூபாய் போன்ற கதைகள்.

Thursday, September 5, 2019

கானல் நதி விமர்சனம் - கலைச்செல்வி

எந்த முன்முடிவுமின்றி ஒரு நாவலை அணுகுவதே ஒரு சுவாரஸ்யம்தான். கானல்நதியை அப்படிதான் அணுகினேன். தபலா மேதை குருச்சரண்தாஸ் தனது நண்பனான இந்துஸ்தானி இசை பாடகன் தனஞ்செய்முகர்ஜியின் வாழ்க்கையை நாவலாக எழுதும்படி கேசவசிங்சோலங்கியிடம் கேட்டுக் கொள்கிறார் என்ற கேசவ்சிங்சோலங்கியின் முன் அறிமுகத்தோடு நாவல் தொடங்குகிறது. ஆனால் அது நாவலின் தொடக்கம் என்பதை அறியமுடியாமல், முன் அறிமுகத்தில் இருந்தபடி சாரங்கன் என்பவரால் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட நாவல் என்று எண்ணிக் கொண்டேன். பிறகு எங்கிருந்து யுவன்…? நாவலின் களம் வங்காள கிராமத்திலிருந்து துவங்குவது வேறு என் குழப்பத்தை கூடுதலாக்கியது.

Tuesday, September 3, 2019

இசைவாகா வாழ்க்கை - கானல் நதி விமர்சனம்


இசை வாழ்க்கை என்பது ஒரு பழமையான வாழ்க்கை முறையோடு இயைந்துவிட்டது என்கிற எண்ணம் நம் மனதில் எங்கோ இருக்கிறது. கிராமபோன், அதன் இசைத்தட்டுகள், வால்வு ரேடியோக்கள், ஹார்மோனியம், பழைய வீணை ஆகியவைகளின் நினைவுகள் நம் அந்த உணர்வுகளை உறுதிப்படுத்துகின்றன. பழமையடையும்போது இசைக்கு திடமான ஒரு அழுத்த உணர்ச்சி கூடிவிடுகிறது போலும். இசை பழமை அடைய அடைய அது எளிமையடைகிறது, கூடவே இசையின் நுணுக்கங்கள் புரிபட ஆரம்பிக்கின்றன. புதிதாக இருக்கும்போது மெட்டின் மேல் குவியும் மனம் பழையதாகும்போது வார்த்தைகளின் மேல் குடிகொள்கிறதே அதுபோல.