Monday, December 23, 2019

சக்கை - நாவல் விமர்சனம்


கல்குவாரியில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையை நாம் அதிகம் இதுவரை அறிந்ததில்லை. அவர்களின் வாழ்க்கை சாதாரண வாழ்விலிருந்து மிகவும் பின்தங்கியது. கடுமையான உழைப்பில் கரைந்துவிடும் இம்மக்கள் தம் வாழ்க்கையில் கலை, பாரம்பரியம், கேளிக்கைகள் போன்றவைகள் என்னவென்று அறியாதவர்கள். கிராமங்களிலிருந்து விலகி தனித்த வாழ்க்கையை வாழ்பவர்கள். பல தசாப்தமாக தனித்து வாழும் இம்மக்கள் அறிந்த ஒரே சொல் கல்.

Thursday, December 19, 2019

இடலாக்குடி ராசா - நாஞ்சில் நாடன் சிறுகதை வாசிப்பனுபவம்



உடை இருப்பிடத்திற்கு முன்னே உணவு என்னும் அடிப்படையான விஷயம் வந்துவிடுகிறது. ஒருவேளை உணவு என்பதே உலகத்தில் பலருக்கு மிகப்பெரிய செலவினமாக இருக்கிறது. ஆனால் வேறோரு பக்கத்தில் உணவை வீணாக கீழே கொட்டுவது நடக்கிறது. பலஇல்லங்களில் உணவு ஒரு ஆடம்பரம் தான். உணவகங்களின் வழியே நாம் அளிக்கும் பணம் அந்த உணவிற்கு பலமடங்கு அதிகம் செலுத்துகிறோம். திருமணங்களில் பல உணவு வகைகள் ஆடம்பரத்திற்கே சேர்க்கப்படுகின்றன. பல உணவுவகைகள் சாப்பிடப்படாமல் வீணாவதுதான் அதிகம். அந்த கெளரவம் நமக்கு தேவையாக இருக்கிறது. உணவை எவ்வளவு வீணாக்குகிறாரோ அவ்வளவு வசதி படைத்தவராகிறார்கள். உணவை மற்றவர்களுக்கு அளிப்பதில் இருக்கும் இன்பம்கூட கெளரவத்தில் இணைந்துவிடுகிறது. உணவை பெறுபவர் அதை கீழ்மையாக நினைக்கவேண்டியவராகிறார்.

Tuesday, December 10, 2019

பொன்முடி - திரைவிமர்சனம்



பொன்முடி படத்தை தொலைக்காட்சியில் பாதியிலிருந்துதான் பார்த்தேன். குடும்ப உறுப்பினர்களின் சமாதானம் பெற்று பார்க்க ஆரம்பிக்க, பிறகு குடும்ப உறுப்பினர்களே அந்த படத்தை விரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள். இன்றைய தேதியில் ஒரு சினிமாவை பார்க்கவும் அதை முழுமனதோடு நோக்கவும் நேரமின்றி திரிகிறோம் என்பது உண்மை. திரையரங்குகளில் பார்க்கும் படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. நான் இந்தவருடம் திரையரங்கிற்கு சென்று பார்த்த படங்கள் நான்கு. அதில் என் மகனுக்காக பார்த்த கார்ட்டூன் படங்கள் இரண்டு.

Friday, December 6, 2019

நாற்காலி - கி.ராஜநாராயணன் சிறுகதை வாசிப்பனுபவம்

நாற்காலிகள் அதிகாரத்திற்கானவை என்கிற எண்ணம் நமக்கு எப்போதும் உண்டு. சிம்மாசனம், செங்கோல், அரியணை, போன்றவைகள் இதைத்தான் குறிக்கின்றன. நிலப்பிரப்புத்துவ மனநிலையில் இதைச் சொல்லும்போதே குடையையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். பண்டைய மரபில் வெண்கொற்றக்குடையாக இருந்தது பின்னாலும் ஒருவருக்கு பிடிக்கப்படும் குடையாகவும், பிறகு தனக்கே பிடித்துக் கொள்ளும் குடையாகவும் ஆனது அதிகாரத்தின் படிநிலைகள். நிலப்பிரபுத்துவ வாழ்வில் செருப்பு அணிந்ததும் அதிகாரத்தின் குறியீடுதான்.

Thursday, November 28, 2019

நாயனம் - ஆ.மாதவன் சிறுகதை வாசிப்பனுபவம்



சலிப்பில்லாத வாழ்க்கையில்லை. எவ்வளவுதான் உயர் எண்ணங்கள் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் சலிப்பு வந்தேவிடுகிறது. வேண்டாத பொருள் கைவிட்டு போகும்போது அதுகுறித்து கவலை கொள்வதில்லை, அது நம்மைவிட்டு செல்கிறதே என்கிற மகிழ்ச்சி உண்மையில் அடைவதில்லை. மாறாக சலிப்பை அடிநாக்கின் கசப்பைபோல உணர்கிறோம். இதுநாள்வரை பொறுத்திருந்ததின் பொருளின்மைதான் உண்மையில் அப்படியான சலிப்பு தோன்றுவதற்கு காரணம் என்றால் நம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது.

Monday, November 25, 2019

சாமத்தில் முனகும் கதவு விமர்சனம் - சுரேஷ் சுப்ரமணி


எழுத்தாள நண்பர் திரு. கே.ஜே.அசோக்குமார் அவர்கள் எழுதிய இத்தொகுப்பில் மொத்தம் 18 சிறுகதைகள் உள்ளன. இக்கதைகள் உயிர் எழுத்து, வார்த்தை போன்ற அச்சு இதழ்களிலும் சொல்வனம், மலைகள்.காம், ஜெயமோகன்.காம் போன்ற இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமார் அவர்கள் இக்கதைகளை பல மாறுபட்ட களங்களில் எழுதியிருந்தாலும் அனைத்துமே மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை சிக்கல்களை, வேதனைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன. அதற்கான மொழிநடை அவருக்கு சிறப்பாக கைவந்துள்ளது அவர் கதைகளை வாசிக்கும்போது தெரிகிறது. கதைகள் யதார்த்த வகை கதைகளாகவும் சில கதைகள் மாய யதார்த்த வகை கதைகளாகவும் அமைந்திருப்பது பலதரப்பட்ட வாசிப்பு அனுபவங்களை வாசகர்களுக்கு அளிக்கிறது.

Thursday, November 21, 2019

நெடுஞ்சாலை வாழ்க்கை - கா. பாலமுருகன்



நெடுஞ்சாலையில் பயணிப்பது அலாதியான இன்பம் நிறைந்தது. உடனடி இலக்குகள் நமக்கு இல்லை என்பது ஒரு ஆயாசத்தை ஏற்படுத்திவிடுகிறது. அன்றாட தினசரி வேலைகள் இல்லாமல் வெறுமனே வேடிக்கைப் பார்த்தபடி இருக்கலாம் இல்லையா? பெரிய சலிப்பு நிறைந்த தொடர் வேலைகளுக்கு பின் ஒரு நீண்ட பயணம் செல்வது மனதிற்கு அமைதியை அளிக்க கூடியதுதான். அதையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கையை எப்படி புரிந்துக் கொள்வது.

Sunday, November 10, 2019

புற்றில் உறையும் பாம்புகள் - இராஜேந்திர சோழன் சிறுகதை வாசிப்பனுபவம்



புற்றில் உறையும் பாம்பு எதிர்ப்பாராத வேகத்தில் திருப்பி தாக்கும். புற்றிற்குள் இறங்கும் பாம்பு தலை உள்ளேயும் வால் வெளியேயும் இருப்பதனால் அதை எளிதில் பிடித்துவிடலாம் என நினைத்து வாலைப் பிடிக்கும் சமயத்தில் புற்று வாயில் அதன் ஒளிந்திருக்கும் தலையை வெளியே எடுத்து பிடிப்பவரை தாக்கும். உண்மையில் பாம்பு வளைந்து அந்த இடத்தில் நின்று காத்திருக்கும். பொதுவாக பெண்களை பாம்புகளுடன் ஒப்பிடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பெண்கள் உண்மையில் வேறுவகையானவர்கள். ஆண்களின் சிந்தனையிலிருந்து முற்றிலும் எதிர் திசையில் செயல்படக்கூடியது. காமமும் அதன் மீதான பார்வைகளும் இருவருக்கும் பொதுவானதுதான் என்றாலும், வெளிப்பாடுகளில் இருக்கும் வேறுபாடு இருவரைப் பற்றி முற்றிலும் எதிர் திசையில் யோசிக்க வைக்கிறது.

Wednesday, October 30, 2019

ஒருநாள் கழிந்தது - புதுமைபித்தன் சிறுகதை வாசிப்பனுபவம்

அரைநாள் கழிந்தது என்றுதான் சொல்லவேண்டும். கதையில் அரைநாள் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் மாலையிலிருந்து இரவுவரை தான் கதை. காலை, மதியம், நடுஇரவெல்லாம் முருகதாசர் என்ன செய்தார் என்கிற குறிப்பு எதுவும் இல்லை இதில். இப்படி புறவயமாக கதையை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்றாலும் புதுமைபித்தனின் நிஜகதையை ஒட்டியிருப்பதால் அவர் வாழ்க்கையை படிக்கின்ற சுவாரஸ்யம். பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் பகுதியில் இக்கதை இருக்கிறது. அன்றிலிருந்து பல சமயங்களில் இக்கதையை வாசித்து வருகிறேன். சொல்லப்போனால் அதில் இருக்கும் இரு கதைகள் மட்டுமே நினைவில் இருக்கின்றன். ஒன்று இது மற்றொன்று ஜெயகாந்தன் எழுதிய நந்தவனதில் ஒரு ஆண்டி.

Wednesday, October 23, 2019

விடியுமா - கு.ப.ரா. சிறுகதை வாசிப்பனுபவம்


பிரிவை மனித மனம் எப்படி எடுத்துக் கொள்கிறது என பல்வேறு வரையறைகளின் வழியாக பொருள் கொள்ள முடியும். அது தத்துவங்களின் வழி. ஆனால் உண்மை அகத்தின் மொழியை உணர்ந்தவர்கள் மிகக் குறைவு. மனம் ஒரு நேரடி துயர நிகழ்வுக்கு முன்னும் பின்னும் பல்வேறு வகைகளில் கூட்டி தொகுத்து சொற்களாக வைத்துக் கொள்கிறது. சொற்களை முன்னும் பின்னுமாக மாற்றி வேறு பொருள் அதற்கு உண்டா என சோதிக்கிறது. மற்றவர்களுடன் அது குறித்து பேசி தனக்கு தேவையானவைகளை ஒரு கூட்டுக்குள் அடக்கி வைத்துக் கொள்ள விரும்புகிறது.